Reviews with a sting

 
 
Random Article

 
46
Posted April 22, 2010 at 7:21 AM. by Rajesh Da Scorp in English films
 
 

Thelma & Louise (1991) – English

Thelma and Louise
Thelma and Louise

ஆங்கிலப்படங்களில், திரைக்கதை ஒரு முக்கியமான அம்சம். அங்கு ஒரு படம் தொடங்கும்போது, திரைக்கதை முழுதாக எழுதப்பட்டு, அனைத்து நடிகர்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என்பது அவசியம். இந்தத் திரைக்கதையில் மன்னர்கள் அங்கு பல பேர் உண்டு. திரைக்கதை எழுதுவதற்கென்றே பிரத்யேகமாகப் பயிற்சி பெற்று, அதை மட்டுமே செய்பவர்கள் அவர்கள். அங்கு இதைப்போன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவதால், ஒரு மொக்கைப் படத்தில் கூட, திரைக்கதை உத்திகளை அவர்கள் அருமையாகப் புகுத்தியிருப்பார்கள்.

அமெரிக்காவின் திரைக்கதை மேதை என்று அழைக்கப்படுபவர், சிட் ஃபீல்ட். ஏறத்தாழ 20 வருடங்கள், திரைக்கதை தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர். இதனாலேயே, ஒரு திரைக்கதையின் முதல் சில பக்கங்களைப் புரட்டியவுடன், அத்திரைக்கதை தேறுமா தேறாதா என்பதைக் கச்சிதமாகக் கணிக்கும் திறமை கைவரப்பெற்றவர்.

இந்த சிட் ஃபீல்ட், ’திரைக்கதை எழுதுவது எப்படி?’என்று எழுதிய புத்தகம், ஹாலிவுட்டில் வசூல் சாதனை படைத்த ஒன்று. அவர் சரமாரியாக திரைக்கதை பற்றி எழுதிய பல புத்தகங்கள் அங்கு மெகா ஹிட். தமிழில், உயிர்மை வெளியிட்ட சுஜாதாவின் புத்தகமான, ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகமும், முற்றிலும் சிட் ஃபீல்டின் புத்தகத்தை அடியொற்றி எழுதப்பட்டதேயாகும். சுஜாதாவுமே இதனை அப்புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார்.

இவ்வளவு பெரிய பீடிகை ஏனெனில், அந்த சிட் ஃபீல்ட், ‘Four Screenplays’ என்று ஒரு மெகாஹிட் புத்தகத்தை எழுதினார். அதில், நான்கு திரைப்படங்களின் திரைக்கதையை எடுத்துக்கொண்டு, அக்குவேறு ஆணிவேறாக அப்படங்களை அலசியிருப்பார். திரைக்கதை எழுதுவதில் இண்ட்ரஸ்ட் உள்ள எவரும் இப்புத்தகத்தைப் படித்து இன்புறலாம். அனைத்து லேண்ட்மார்க் கடைகளிலும் கிடைக்கும். பெங்களூர் நண்பர்கள், இங்குள்ள ‘Blossoms’ கடையில், மிகச்சீப்பாக இப்புத்தகத்தைப் பெறலாம்.

இப்புத்தகத்தில், அவர் எடுத்துக்கொண்ட நான்கு படங்களாவன: ‘Dances with Wolves’, ‘Terminator 2 – Judgement Day’, Silence of the Lambs’ மற்றும் ‘Thelma & Louise’.

இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு இந்தத் தெல்மா & லுயீஸ் படத்தில் என்ன இருக்கிறது? அப்புடி என்ன படம்யா அது? என்று கேட்டால், வெல்.. இதோ பார்த்துவிடுவோம்.

தெல்மா & லுயீஸ், 1991ல் , ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளியான படம். சூசன் சராண்டன் மற்றும் ஜீனா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்க, ஹாலிவுட்டின் எம் ஆர் ராதா ஹார்வி கீட்டல் மற்றும் மைக்கேல் மேட்சன், ப்ராட் பிட் ஆகியவர்களும் உடன் நடித்த ஒரு படம்.

இதன் திரைக்கதையை எழுதியவர், Callie Khouri. ஒரு பெண்மணி. இவரது முதல் திரைக்கதையே இதுதான். அதிலேயே, சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் வென்றவர்.

ரைட்டு. படத்தின் துவக்கத்தில், நாம் தெல்மா மற்றும் லுயீஸைச் சந்திக்கிறோம். தெல்மா (ஜீனா டேவிஸ்), ஒரு இளிச்சவாய், சோம்பேறியான பெண். ஒரு கொடுங்கோல் கணவனுடன் காலம் தள்ளும் பெண். லுயீஸ் (சூசன் சராண்டன்), ஒரு வெயிட்ரஸ். இரும்பு மனம் கொண்ட பெண்மணி. இருவரும் ஓர் நாள், தங்கள் ஜோடிகளுக்குத் தெரியாமல், ஒரு அட்வென்ச்சர் ரைட் செல்வதிலிருந்து படம் துவங்குகிறது.

இரண்டு நாட்களில் திரும்பிவிடலாம் என்று அவர்கள் போட்ட பிளான், முழுமையாகத் திசைமாறுகிறது. வழியில் சில்வர் புல்லட் என்ற பாரில் சற்றுநேரம் இளைப்பாற நினைக்கும் இருவரும், ஹார்லான் என்பவனைச் சந்திக்க நேரிடுகிறது. அவனோ, அப்பாவியான தெல்மாவைப் பேசியே மயக்கி, ஒரு சந்தர்ப்பத்தில் அவளைக் குடிக்க வைத்து, ரேப் செய்ய முயல்கிறான். அந்த அயனான சந்தர்ப்பத்தில் அங்கு வந்துவிடும் லுயீஸ், தெல்மாவின் பையில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து, அவனை மிரட்டி, தெல்மாவை விடுவிக்கிறாள்.

இருவரும் அங்கிருந்து செல்லும் நேரத்தில், ஹார்லான் சொல்லும் ஒரு வாக்கியம், அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் கண நேரத்தில் மாற்றி, திசைதிருப்பி விடுகிறது. கோபத்தில், ‘Suck my Dick’ என்று ஹார்லான் கத்த, லுயீஸ் அவனைச் சுட்டு விடுகிறாள்.

அங்கிருந்து உடனடியாக வெளியேறும் இருவரும், தங்கள் காரை எடுத்துக் கொண்டு பக்கத்து ஸ்டேட்டுக்குச் சென்றுவிடவேண்டும் என்று பறக்கின்றனர். இந்தக் கொலையை ஆராய வரும் போலீஸ் அதிகாரியான ஹால் ஸ்லோகோம்ப் (ஹார்வி கீட்டல்), தனக்குக் கிடைக்கும் சிறு தடயங்களிலிருந்து, இவர்கள் இருவர் தான் கொலையாளிகள் என்று கண்டுபிடித்து விடுகிறார்.

ஓடும் வழியில் ஒரு க்யூட் இளைஞனைச் சந்திக்கும் தெல்மா, அவனை விரும்பத்தொடங்கிவிடுகிறாள் (ப்ராட் பிட்).

மெல்ல மெல்ல போலீஸ் தங்களை நெருங்க, மெக்ஸிகோவுக்குச் சென்று விடவேண்டும் என்று விரும்பும் தெல்மா மற்றும் லுயீஸ் என்னவானார்கள் என்பதே மீதிக்கதை.

ஆரம்பம் முதல் இறுதிவரை, பட்டாசைப் பற்றவைத்ததுபோல் செல்லும் இந்தத் திரைக்கதை, மேலே சொன்ன புத்தகத்தில் சூப்பராக அலசப்பட்டிருக்கிறது. முடிந்தால், அந்த அலசலை, பிறிதொரு தருணத்தில் பார்க்கலாம்.

இரண்டு சாதாரணத் தோழிகள், தங்களுக்கு நடந்த ஒரு அநியாயத்தினால், ஃபுயூஜிடிவ்களாக மாறி, ஒட்டுமொத்த போலீஸ் துறையே அவர்களைத் துரத்தும் கொடுமை, மிக விறுவிறுப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இப்படத்தில்.

மிக மிக இளமையான ப்ராட் பிட்டை இப்படத்தில் பார்க்கலாம் (ஒரு காலத்தில் அஜீத் மிக மிக இளைத்தபோது, காமெடியாக இருந்தாரே, அதுபோல்). அவரது கேரியரின் தொடக்கம் இது. அதேபோல், சற்றே மேன்லியான ஹார்வி கீட்டலையும் இப்படத்தில் காணலாம்.

ஹார்வி கீட்டலைப் பற்றி ஒரு வரி: சமீபகாலமாக, அவரது படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறேன். அசல் எம் ஆர் ராதாவை ஆங்கிலத்தில் காண்பதுபோன்றே இருக்கிறது. என்னா நக்கல்! என்னா நகைச்சுவை ! இதற்கு ஒரு உதாரணம், பல்ப் ஃபிக்‌ஷன் மற்றும் க்ரைம்ஸ்ப்ரீ.

படத்தைப் பார்த்து இன்புறுங்கள்.

தெல்மா & லுயீஸ் படத்தின் டிரைலர் இங்கே.


Facebook comments

comments


46 Comments


  1.  

    கருந்தேள்,

    மீ த ஃபர்ஸ்ட்டு!

    சத்தியமாக இங்கே நீங்க போட்டிக்கு வரவே முடியாது.

    ஹ ஹ ஹா. எப்புடி?




  2.  

    ஒரு காலத்தில் ஜீனா டேவிஸ் எனக்கு மிகவும் பிடித்த நடிகை (அந்த உதடுகள் மறுபடி வேண்டும்), பின்னர் ஏஞ்சலினா ஜோலி வந்து ஜீனாவோட சோலிய முடிச்சுட்டாங்க.




  3.  

    அட ஆமா . . இங்க நானு போட்டிக்கி வரவே முடியாது !! :-)

    ஜீனா டேவிஸ் இன்னிக்கி பார்த்தாலும் சும்மா பட்டைய கிளப்புவாங்க . . ஸ்டூவர்ட் லிட்டில், அவங்களுக்காக மட்டுமே பார்த்தேன் . . :-)

    அந்த உதடுகள் மறுபடி வேண்டும் – அட சூப்பரப்பு !!




  4.  

    இந்த படத்தினை நான் இதுவரையில் (முழுவதுமாக) பார்க்கவில்லை. ஆனால் பார்த்த/படித்த வரையில் இதுவும் “நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ்” படத்தின் ஆரம்ப கட்டங்களும் ஒன்றுதானோ என்று சிந்திக்க வைக்கிறது. இரண்டு பெண்களுக்கு பதிலாக ஒரு ஜோடி. அவ்வளவுதான்.

    ஆனால் கதையோட்டமே அதில் மாறுபடும். ஒரு ரோட் மூவி என்பதைத்தவிர, இந்த ஒற்றுமையை தவிர ஒன்றாகவே பார்க்க இயலாதோ?

    கருந்தேள் இந்த படத்தினை பற்றி இன்னமும் எழுதவில்லையோ? Natural Born Killers?




  5.  

    //அந்த உதடுகள் மறுபடி வேண்டும் //

    கருந்தேள்,

    இது தான் சுபா எழுதி ராமு அவர்கள் வெளியிட்ட சூப்பர் நாவலின் முதல் இதழின் தலைப்பு. ஒரு காமிக்ஸ் பதிவிற்காக நேற்று தான் அந்த நாவல்களை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டு இருக்கையில் இந்த புத்தகத்தினை பார்த்தேன்.




  6.  

    பகிர்வுக்கு தேங்ஸ் நண்பா!

    :)




  7.  

    மீ த செவன்த்து.

    இந்த படத்த நான் பல தடவ பார்த்து இருக்கேன். திடீர்னு பார்த்த ஒரு சின்ன பைய்யன் வேற வருவான். கொஞ்சம் உத்து பார்த்தால் , அட நம்ம பிராட் பிட்.




  8.  

    சரி படத்த பார்த்துடவேண்டியதுதான்.




  9.  

    //இது தான் சுபா எழுதி ராமு அவர்கள் வெளியிட்ட சூப்பர் நாவலின் முதல் இதழின் தலைப்பு. ஒரு காமிக்ஸ் பதிவிற்காக நேற்று தான் அந்த நாவல்களை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டு இருக்கையில் இந்த புத்தகத்தினை பார்த்தேன்//

    விஸ்வா . . நானு இஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கையில், சுபாவின் வெறித்தனமான ஃபேன் . . அந்த உதடுகள் மறுபடி வேண்டும் என்ற பெயர் என்னால் மறக்கவே முடியாது . . அதான் சூப்பரப்புனு சொன்னேன் . . :-)

    இது நரேந்திரன் நேரம், இதுவும் நரேந்திரன் நேரம், அப்பறம் தூண்டில் கயிறு, ஷெர்லக் கமல் குமார், நம்ம செல்வா . . . இந்தப் பெயர்கள் என்னால் மறக்கவே முடியாது . . இப்பொழுது நான் அவர்களது நாவல்களைப் படித்துப் பார்க்கையில், எனது ரசனை மாறிவிட்டதை உணர்ந்தேன் . . அவர்களைப் படிக்கும் வயது தாண்டிவிட்டது . . ஆனால், இன்னமும் அவர்களது ஃபேன் நான். . சுபாவின் ராணுவக் கதைகள் எனக்கு உயிர். குறிப்பாக, தேரழுந்தூரில் பிறந்த ஒரு உளவாளியின் கதை. . அவன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படுவான் . . பெயர் மறந்து விட்டது . . இதில் வரும் இந்திய சீக்ரெட் நிறுவனத்தின் பெயர், ‘மயில்கள்’. . (ஆரம்பிச்சிட்டாங்கைய்யா . . அடுத்தது சுபா நாவல் பத்தின பதிவா . . செத்தோம்டா சாமி . . ) . . ஹீ ஹீ




  10.  

    @ விஸ்வா – நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ் – நானு இனும் பாக்கல. . கண்டிப்பா பார்த்து விடுகிறேன் . . சீக்கிரமே . .:-)

    @ ஷங்கர் – நன்றி பாஸு. .. :-)

    ஒலக காமிக்ஸ் ரசிகன் – ஹா ஹா . . சந்தடி சாக்குல ப்ராட் பில்ல புடிச்சி கன்னாபின்னான்னு ஓட்டிட்டீங்க . . :-) ஆனா அது சரிதான் . . படு ஒல்லியா, பெரிய மண்டையோட, …முடியல. .

    @ ஜீவன் பென்னி – அடடே . . போட்டோவ மாத்திபுட்டீங்களே . . . . நல்லாக்கீது பாஸு இது !!




  11.  

    //தேரழுந்தூரில் பிறந்த ஒரு உளவாளியின் கதை. . அவன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படுவான் . . பெயர் மறந்து விட்டது .//

    இந்த கதை சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இனைந்து ஆரம்பித்த உங்கள் ஜூனியர் மாத நாவலில் நான்காவதாக வந்த கதை. அட்டையில் ஜிப் வைத்த ஒரு படம் எல்லாம் இருக்கும். அந்த கதையை இன்றளவும் மறக்க முடியவில்லை. பின்னொரு நாளில் அதனை படமாக எடுக்கவும் ஆசைப்பட்டேன்.

    இரண்டு நண்பர்கள். ராணுவத்தின் சிறப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான் செல்கிறார்கள். சிக்கிக் கொள்கிறார்கள். ஒருவன் தப்பவேண்டி (காதலியின் நினைவு வர) உண்மைகளை சொல்லி மற்றவனை சிக்க வைத்துவிட்டு தப்பி வந்துவிடுகிறான். மற்றவன் இறந்து விட்டான் என்றேன்னினால், பல வருடங்கள் கழித்து வந்து பழி வாங்க நினைக்கிறான்.

    முடிவு ஒரு அற்புதமான செண்டிமெண்டல் டச் கொண்டதாக இருக்கும். நல்லதொரு கதை. அபூதேல்லாம் ராணுவ கதைகள் என்றால் கொள்ளை ஆசை (அப்பா மிலிடரி என்பதாலும் கூட).

    அந்த கதையின் பெயர் “உன்னை தேடும் ஒற்றன்”. வந்தது ஆகஸ்ட் மாதம். அந்த கதையின் விளம்பரத்தினை உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பி உள்ளேன். ரசியுங்கள்.




  12.  

    மறுபடியும் யோசித்து பார்த்தால், தேரெழுந்தூர் வரும் கதையின் பெயர் “கழுகள் காத்திருக்கின்றன” என்று நினைக்கிறேன். 91ல் வந்த கதை. உங்கள் ஜூனியரில் தான் வந்தது.




  13.  

    //ஆரம்பிச்சிட்டாங்கைய்யா . . அடுத்தது சுபா நாவல் பத்தின பதிவா . . செத்தோம்டா சாமி//

    எனக்கு இந்த ஆசை ஒன்று உள்ளது. என்னிடம் பெரும்பாலான தமிழ் மாத நாவல்கள் (எண்பதுகளில் வந்தவை) இருக்கின்றன. குறிப்பாக சொல்வதானால்

    பாக்கெட் நாவல்
    கிரைம் நாவல்
    சூப்பர் நாவல்
    உங்கள் ஜூனியர்
    எ நாவல் டைம்

    என்று வரிசையாக இந்த நாவல்களை பற்றி பதிவிட ஆசை. இதனை தவிர நாவல் சத்யா, சுஜாதா மாத நாவல்,நாவல் லீடர், உல்லாச ஊஞ்சல், மற்றும் ஒரு இருபது மாத நாவல்கள். இவைகளை பற்றி எழுத, மன்னிக்கவும், வரிசைப்படுத்த ஆசை.

    முயற்சிக்கிறேன். இந்த மாத நாவல்களை எல்லாம் வெளியிட்ட ஆசிரியர்கள் எல்லோருமே என் நண்பர்கள்தான். அவர்களுக்காகவும் இதனை செய்ய ஆசை. பார்க்கலாம்.




  14.  

    //இது நரேந்திரன் நேரம், இதுவும் நரேந்திரன் நேரம், அப்பறம் தூண்டில் கயிறு//

    இந்த தூண்டில் கயிறு நாவல்தான் தமிழில் மாத நாவல்களில் மூன்று பாகங்களாக வந்த முதல் கதை. அதுவும் முதல் இரண்டு பாகங்களிலும் நரேன் இறந்து விடுவதை போலவே இருக்கும். அப்போது,

    தொங்கும் இதயங்களுடன், சுபா

    என்றே முடித்திருப்பார்கள். இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.

    எனக்கும், நமக்கும் நன்றாக தெரிந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் முதன் முதலில் இந்த சூப்பர் நாவல் மாத இதழில்தான் போட்டோகிராபராக இருந்தார். அப்போது அவர் தொடர் கட்டுரை எல்லாம் வேறு எழுதுவார்.

    பதிவுக்கு சம்பந்தமில்லாமல் போகிறது, மன்னிக்கவும். என்ன செய்ய, நாஸ்டால்ஜியா போட்டு தாக்கி விட்டது.




  15.  

    எனக்கும், நமக்கும் நன்றாக தெரிந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் முதன் முதலில் இந்த சூப்பர் நாவல் மாத இதழில்தான் போட்டோகிராபராக இருந்தார். அப்போது அவர் தொடர் கட்டுரை எல்லாம் வேறு எழுதுவார்.
    //

    ஆமாமாம். வாழைப்பழத்தின் அடிப்பாக காம்பினை க்ளொசப் எடுத்து
    இது என்ன என்ற போட்டிகள் வேறு வைத்தார். :)

    ஒரு கண்ணாடி உடைந்த ஜன்னல் படம் பரிசு வாங்கித் தந்தையும் ஒரு முறை பகிர்ந்து கொண்டார்.

    :) )

    பதிவுக்கு சம்பந்தமில்லாமல் போகிறது, மன்னிக்கவும். என்ன செய்ய, நாஸ்டால்ஜியா போட்டு தாக்கி விட்டது.
    //

    அதே அதே!!!!!!!!!!




  16.  

    அன்றைய கேவி ஆனந்தின் இன்றைய வளர்ச்சி – பிரமிப்பு/சந்தோஷம்.

    நானும் ஒன்றிரண்டு படங்கள் நன்றாக எடுக்கிறேன் என்றால் அவரும் ஒரு காரணம். :)

    வாழ்க!




  17.  

    சூப்பர் !! அந்தக் கதையின் பெயர், கழுகுகல் காத்திருக்கின்றன என்பதே தான்
    !!!! ஃபண்டாஸ்டிக் !! வாரே வாஹ் . .

    கண்டிப்பாக இவற்றைப் பற்றி எழுதுங்கள் . . படுபயங்கர நாஸ்டால்ஜியா நம்மைத் தாக்கட்டும் . . :-)

    ஆமாம் . .தூண்டில் கயிறு பாகம் பாகமாக வந்தது நன்றாக நினைவிருக்கிறது . ., கே.வி ஆனந்த் எழுதியவைகலையும் படித்திருக்கிறேன் . . ஒரு ஃபோட்டோவில், ஒரு ஆள் தலை கத்தியில் வெட்டப்படுவது போல் இருக்கும் . . கத்தியால் வெட்டப்பட்ட அந்த செகண்டில் எடுக்கப்பட்டது போல் அதை அமைத்திருந்தார். . அதைப்போலவே யாராவது ஃபோட்டோ அனுப்பினால், அதற்குப் பரிசு என்று வேறு சொல்லியிருந்தார்கள். அதற்கு நிறைய பதில்களும் வந்தன. . ஒரு வாசகர், ராவணன் தலை போல் வரிசையாக ஒரே ஃபோட்டோவில் எடுத்து அனுப்பியிருந்தார். . அதன் பின், ஆனந்த் அதற்கு பதில் எழுதுகையில், ஷட்டர் ஸ்பீடு அட்ஜஸ்ட் செய்து அப்புகைப்படத்தை எடுத்தது எப்படி என்றும் சொல்லியிருந்தார். .

    அவர் எடுக்கும் புகைப்படங்கள் அப்போது சூப்பர் நாவலில் அட்டைப்படங்களாக வரும் . . அவை, இப்பொழுது நினைவு வந்து, டோட்டல் நாஸ்டால்ஜியாவில் ஆழ்ந்து விட்டேன் . . எனக்கு இப்பவே அந்த காலகட்டத்துக்கு போகணும் . . ஐயாங் !

    இதில், சுபாவும் பிகேபியும் சேர்ந்து வேறு எழுதினார்கள். நரேந்திரன் வரும் அத்தியாயங்களை பிகேபியும், பரத் வரும் அத்தியாயங்கலை சுபாவும் எழுத, நமக்கு அட்டகாசமான நாவல்கள் கிடைத்தன. . மொத்தம் இரு நாவல்கள் என்று நினைவு . .

    மொக்கை நகைச்சுவைக் கதைகள் எழுதுவதில் பிகேபி கில்லாடி. பிருந்தாவனமும் நொந்த குமாரனும் என்று ஒரு கதை உங்கள் ஜூனியரில் வந்தது. . அது ஒரு அந்தக்கால ‘லொள்ளுசபா’ . . மருந்துக்குக் கூட கதையே இருக்காது. . (இதை, முன்னுரையில் மெடிசினுக்குக் கூட கதையே இருக்காது’ என்று பிகேபி ஸ்டைலில் சொல்லியிருப்பார்) . . அந்தக் கதையில் வரும் தெரு கூட, ‘அருணாசல ஆசாரி தெரு’ என்று நியாபகம்.

    அய்யய்யோ . . . நாஸ்டால்ஜியா கன்னாபின்னான்னு தாக்கிருச்சு . . . பதிவு போட்டே ஆகனும்னு நினைக்குறேன் . . நானும் ஒரு பதிவு போட முயல்கிறேன் . . :-) நீங்களும் எழுதுங்கள் . .




  18.  

    @ ஷங்கர் – மிக்க நன்றி . . உங்க சார்புலயும் நாஸ்டால்ஜியா பத்தி எளுதுனதுக்கு . . :-) பின்னிட்டு இருக்கு . . .




  19.  

    //ஒரு கண்ணாடி உடைந்த ஜன்னல் படம் பரிசு வாங்கித் தந்தையும் ஒரு முறை பகிர்ந்து கொண்டார்.//

    அந்த புகைப்பட போட்டியின் தலைப்பு: We Missed You.




  20.  

    //ஒரு ஃபோட்டோவில், ஒரு ஆள் தலை கத்தியில் வெட்டப்படுவது போல் இருக்கும் . . கத்தியால் வெட்டப்பட்ட அந்த செகண்டில் எடுக்கப்பட்டது போல் அதை அமைத்திருந்தார். . அதைப்போலவே யாராவது ஃபோட்டோ அனுப்பினால், அதற்குப் பரிசு என்று வேறு சொல்லியிருந்தார்கள். அதற்கு நிறைய பதில்களும் வந்தன. . ஒரு வாசகர், ராவணன் தலை போல் வரிசையாக ஒரே ஃபோட்டோவில் எடுத்து அனுப்பியிருந்தார். . அதன் பின், ஆனந்த் அதற்கு பதில் எழுதுகையில், ஷட்டர் ஸ்பீடு அட்ஜஸ்ட் செய்து அப்புகைப்படத்தை எடுத்தது எப்படி என்றும் சொல்லியிருந்தார்//

    சூப்பர் நாவல் 51வது இதழ். விலை ருபாய் ஏழு.




  21.  

    //மொக்கை நகைச்சுவைக் கதைகள் எழுதுவதில் பிகேபி கில்லாடி. பிருந்தாவனமும் நொந்த குமாரனும் என்று ஒரு கதை உங்கள் ஜூனியரில் வந்தது. . அது ஒரு அந்தக்கால ‘லொள்ளுசபா’ . . மருந்துக்குக் கூட கதையே இருக்காது. . (இதை, முன்னுரையில் மெடிசினுக்குக் கூட கதையே இருக்காது’ என்று பிகேபி ஸ்டைலில் சொல்லியிருப்பார்) . . அந்தக் கதையில் வரும் தெரு கூட, ‘அருணாசல ஆசாரி தெரு’ என்று நியாபகம்.//

    உங்களுக்கு மெயிலில் அனுப்பி உள்ளேன். பாருங்கள். காமிக்ஸ் உலக நண்பர் ஒருவர் இதனை பதிவிட கேட்டார். அனுப்பி வைத்தேன். இன்னமும் பதிவிடவில்லை.




  22.  

    பிகேபி யின் கதையில் வரும் கதா நாயகிகளின் டி-ஷர்டில் இருக்கும் வாசகங்கள் எல்லாவற்றையும் ஒரு ப்ரிண்ட் அவுட் வைத்திருந்தேன். தேடி எடுத்து பகிர்கிறேன்.

    உதா. Umbrellaa Top Angle.!!




  23.  

    பேஜ் ரீடிங் செய்யும் ஒரு சிறுவனை கடத்தும் நாவல் ஒன்று, வெறும் வசனங்களாலேயே முழுவதுமான ஒரு நாவல் (விவரிப்புகள் இல்லாது) போன்ற பல புதுமைகள் அப்போது சுவாரஸ்யம். :) )அய்யய்யோ எனக்கும் பின்னோக்கி போகனும் போல இருக்கே!!!!!!

    :) )

    கிங் விஸ்வா – கலக்கறீங்க!




  24.  

    //பேஜ் ரீடிங் செய்யும் ஒரு சிறுவனை கடத்தும் நாவல் ஒன்று,//

    விலை உயர்ந்த குற்றம்.

    இது ஒரு தொடர் கதையாக பொய் “ஹலோ நியூயார்க்” என்றும் தொடர்ந்தது. பின்னர் மூன்றாம் பாகமும் வந்தது.

    //வெறும் வசனங்களாலேயே முழுவதுமான ஒரு நாவல்//

    இது தான் சரியாக நினைவில்லை (தா அல்லது மீண்டும் தா என்று நினைக்கிறேன்).




  25.  

    விஸ்வா . . பிருந்தாவனமும் நொந்த குமாரனும் அட்டையைப் பார்த்து ஒரேயடியாக அவுட் ஆகி விட்டேன் . . என்ன ஒரு கதை அது !! சும்மா பிச்சி ஒதறிட்டாரு பி கே பி . .!!

    மேட் இன் இண்டியா பத்தி எனக்குத் தெரியும்.. ஆனா அது படிச்சதில்ல . . இதெல்லாம் இப்போ காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் மாதிரி மறுபதிப்பு வந்தா எப்புடி இருக்கும் ? ஹூம்ம்..

    //வெறும் வசனங்களாலேயே முழுவதுமான ஒரு நாவல்//

    //இது தான் சரியாக நினைவில்லை (தா அல்லது மீண்டும் தா என்று நினைக்கிறேன்).//

    அது மீண்டும் தா அல்ல. மறுபடி தா . .. அதுவும் ஒரு பட்டையைக் கிளப்பும் நாவல் . .




  26.  

    @ ஷங்கர் – வாங்க பாஸு . .(பறங்கிமல) ஜோதில ஐக்கியம் ஆயிரலாம் :-)




  27.  

    எச்சூஸ் மீ…

    இங்க என்ன நடக்குது?




  28.  

    //எச்சூஸ் மீ…

    இங்க என்ன நடக்குது?//

    அதான் நானுன் கேக்குறன்.

    வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்?




  29.  

    பதிவுலகுல ஏகப்பட்ட Encyclopedia சுத்துது போலியே…நான் கடைசிய பார்த்த இங்கிலீஷ் படம் “TAKEN”…

    ஓகே இன்னும் நெறைய எழுதுங்க…நல்ல படங்கள பார்க்க முடியாவிட்டாலும் படித்து ரசிப்போம்




  30.  

    @ கவுண்டமணி – வாங்ண்ணா . . வாங்க . . உங்களுக்குத்தேன் வெயிட்டிங் . .:-)

    இங்க என்னென்னமோ நடக்குது . . . நீங்க உங்க பங்குக்கு ஏதாவது சொல்லிட்டு போங்க . . பறங்கிமல ஜோதில எதாவது படம் பார்த்தீங்களா . .எப்புடி இருந்துச்சு?

    @ பருப்பு – இதெல்லாம் சும்மா ஜாலிக்கி . . :-) கண்டிப்பா இன்னும் நிறைய எழுதப்படும் . . :-) அடிக்கடி வாங்க . .




  31.  

    அடப்பாவிகளா . . அப்பறம் நானும் வடக்குப்பட்டி ராமசாமி, குண்டலகேசி இப்புடி ஃபோட்டோ போட்டு, கமெண்ட்டு போட ஆரம்பிச்சிருவேன் . . அக்காங் !! :-) :-)




  32.  

    \\(ஒரு காலத்தில் அஜீத் மிக மிக இளைத்தபோது, காமெடியாக இருந்தாரே, அதுபோல்)//

    ரைட் சந்தடி சாக்கில் தலையை காமெடி பீஸ் ஆகிட்டிங்க. பதிவு அருமை .. பஜாரில் தேடிபார்கிறேன்




  33.  

    அது சும்மா உலுலாய்க்கி . . .:-) ஹீ ஹீ . . தல போல வருமா . .




  34.  

    //அடப்பாவிகளா . . அப்பறம் நானும் வடக்குப்பட்டி ராமசாமி, குண்டலகேசி இப்புடி ஃபோட்டோ போட்டு, கமெண்ட்டு போட ஆரம்பிச்சிருவேன் . . அக்காங் !! :-) :-) //

    சார், நான் உண்மையிலேயே ஒரு பதிவர்தான் சார். நீங்க கருந்தேள் என்ற பாத்திரம் புடிச்சுவிட்ட மாதிரி எனக்கு சூரியன் படத்துல வந்த இந்த பாத்திரம் புடிச்சுடுச்சு. வச்சுகிட்டேன்.

    தப்பா சார்? மன்னிச்சுடுங்க.




  35.  

    அடடா . . என்ன இப்புடி சொல்லிப்புட்டீங்க . . உங்களுக்கில்லாத உரிமையா . . நானு சும்மா ஒரு சின்ன கலாய் கலாய்ச்சா, நீங்க இப்புடி சொல்லிப்புட்டீங்களே. . . ஜமாயுங்க . . உங்க சேவை நம்ம பதிவுலகத்துக்குத் தேவை . . வாங்கண்ணா . . வந்து விளாடுங்க . .




  36.  

    Pesama neenga oru screenplay eluthunga thalaiva ungala pathi naa elutharen..

    enna ennamo discuss panreenga ennaku onnum purialaiya paaaaaa.




  37.  

    நண்பரே,

    நல்லதொரு பகிர்வு. இரண்டுமே முற்றிய கோழிகள்தான் ஆனால் குழம்பு நன்றாகவே இருக்குமிலையா :)

    கருத்துக்களை மட்டும் பதிவதோடு நிறுத்தி விடாது மாத நாவல்கள் குறித்து குழந்தையும் :) ))))))) நீங்களும் பதிவிட்டால் நானும் எனது காற்சட்டைக் காலங்களை நினைவூட்டி மகிழ்வேன்.

    சுபா, பிகேபி, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் ஆகியோர் மாத இதழ்கள் மூலம் எம் வாசிப்பு ஆர்வத்தில் பெட்ரோல் ஊற்றி யாகம் வளர்த்தார்கள் என்பதே உண்மை. அதுவும் அந்நாவல்களின் அட்டைப்படங்கள் கலக்கலாக இருக்கும். குழந்தையிடம் ஏகப்பட்ட கலெக்‌ஷன் உள்ளது. பிஞ்சிலேயே ஒரு அலெக்ஸ்ஸாண்ட்ரியா நூலகம் அவரிடம்தான் இருக்கிறது.

    ஒலக காமிக்ஸ் ரசிகரே நீங்கள் பிராட்பிட்டா, அப்ப நாந்தான் ஜாக்கிசான் :)

    போட்டுத்தாக்குங்க நண்பர்களே.




  38.  

    சிறப்பன் திறனாய்வு




  39.  

    //இரண்டுமே முற்றிய கோழிகள்தான் ஆனால் குழம்பு நன்றாகவே இருக்குமிலையா :) //

    அடேய், கோமுட்டி தலையா, கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்காங்கறதுதான் நமக்கு முக்கியம்.




  40.  

    ரிட்லி ஸ்காட்டின் “பிளேடு ரன்னர்” எனக்கு ரொம்ப பிடித்த படம். படத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!




  41.  

    நண்பரே ராஜேஷ் பாணியில் மற்றுமொரு சூப்பர் படைப்பு…வாழ்த்துக்கள்.




  42.  

    அருமையான இன்பர்மேட்டிவ்வான விமர்சனம்




  43.  

    @ shaggyLad – ஸ்கிரீன்ப்ளே தானே . . எளுதிருவோம் . . :-)
    பல நாட்கள் களிச்சி வந்துகினுகீறீங்கோ . . வாங்கோ வாங்கோ . .

    @ காதலரே – ஹா ஹா . . அதில் ஒரு கோழி, குஞ்சு தான் . . அது மிகவும் யூத்து . . :-)
    நம்ம குழந்தை ஆல்ரெடி பதிவை முடித்திருக்கும் என நம்புகிறேன் . . அது பதிவிட்ட பின், நானும் பதிவேன் . .
    குழந்தை தான் பிஞ்சிலேயே பழுத்துவிட்டதே . .அத்தனை கலெக்‌ஷனையும் பற்றி அடிக்கடி பதிவிடும் என்று நம்புகிறேன் . . அப்படியே ஒரு 18+ பதிவும் இட்டால் நமக்கு நல்லது . . :-)

    @ ஹாய் அரும்பாவூர் – மிக்க நன்றி நண்பா . .

    @ கவுண்டமணி – நீங்க சொன்ன இந்த வாக்கியத்த, தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல பொறிச்சிகினு, நீங்களும் அங்கயே உக்காருங்க . . பின்னால வர்ர சந்ததிகள் , அத பாத்து படிச்சி பாயனடைஞ்சிக்குவாங்க . . :-)

    @ மீனாட்சி சுந்தரம் – சூப்பர் !! உங்க கருத்துக்கு நன்றி நண்பா . .

    @ மயிலு – என்னாது இவ்ளவு லேட்டு? பின்னிப்புடுவேன் . . :-)

    @ கேபிள் ஷங்கர் – மிக்க நன்றி பாஸ் . .




  44.  
    Riy

    To
    Scorp

    If you have the novel “thaa”, Kindly send me my mail id.
    Already I have read that novel but again I want to reat it.
    My mail id: likeriyas@yahoo.co.in

    Regards
    Riyas.




  45.  
    G

    படத்த பத்தி நல்ல எழுதிரிகிங்க. இந்த படம் எனக்கு ரொம்ப ஒட்டல…




  46.  

    ரொம்ப சாதாரணமா ஆரம்பிச்சு சேனல் மாத்தலாமாவென யோசிக்க ஆரம்பிக்கும்போது கொஞ்சம் ஆர்வமாகி பின் அப்படியே ப்ச்சக்கென ஒட்டிக்கொண்ட படம்.பார்த்துமுடித்தபின் எதாவது எழுதலாமாவெனக்கூட யோசித்தேன்.வழக்கம்போல் சோம்பல்தனம். உலகசினிமா விமர்சனத்தில் நான் ஒன்றும் பெரிதாக விபரமானவன் இல்லை.ஆனாலும் ஆர்வக்கோளாறினாலும், என் ரசனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் அவ்வப்போது எழுதுகிறேன். உங்களைப்போன்றவர் இந்தப்படத்தைபற்றி எழுதியது குறித்து மகிழ்ச்சி.





Leave a Reply