Reviews with a sting

 
 
Random Article

 
31
Posted September 6, 2011 at 5:16 AM. by Rajesh Da Scorp in Book Reviews
 
 

கலாதரும் கிருஷ்ணகுமாரும்

Horror
Horror

பந்திப்பூர் – மைசூர் சாலை. அந்தி நேரம். ஆளரவமற்ற சாலையில் ஒரு புல்லட் வந்துகொண்டிருக்கிறது. ஓட்டுபவன் ஒரு இளைஞன். அவன் செல்லுமிடம், அங்கு இருக்கும் ஒரு பங்களா. அது எங்கிருக்கிறது என்பது அவனுக்குத் தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், யாருமே அந்த சாலையில் இல்லை. மிகப்பெரிய பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் அந்தச் சாலையில், இவன் மட்டுமே.

சற்றுத் தொலைவில், ஒரு குடிசை வீடு. அங்கே சென்று தண்ணீர் அருந்திவிட்டு, வழி கேட்கலாம் என்று நினைத்து, அந்த வீட்டினுள் நுழைகிறான் அவன். உள்ளே, ஒரு ஆணும் பெண்ணும், ஆடைகள் இன்றி, பின்னிப்பிணைந்தபடி இருக்க, டக்கென்று வெளியே வந்துவிடுகிறான். வண்டியைக் கிளப்புகிறான். ஆனால், அவனது மனதில் காமம் அணைய மறுக்கிறது. குடிசையில் நிகழ்ந்த சம்பவத்தையே நினைத்துக்கொண்டு, அந்தச் சாலையில் வண்டியை ஓட்டும் அந்த இளைஞனின் கண்ணில், மிகத்தொலைவில் சுள்ளிகளைத் தலையில் சுமந்தபடிச் செல்லும் ஒரு யுவதி தெரிகிறாள்.

அந்த நேரத்தில், அவனுக்கு, அன்று மதியம் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

பந்திப்பூருக்குள் நுழைவதற்கு முன்னர். ஒரு உணவகத்தில் மதிய உணவு உண்ணும் அந்த இளைஞனின் அருகில் வந்து அமர்கிறார் ஒரு சாமியார். இவன் கேட்காமலே இவனைப் பற்றிப் பேச்சுக் கொடுக்கிறார். இவன் செல்லுமிடம் பந்திப்பூர் என்று தெரிந்ததும், மாலையில் பந்திப்பூர் காட்டுக்குள் செல்வது அபாயகரமானது என்று எச்சரிக்கையும் விடுக்கிறார். அன்று எங்காவது தங்கிவிட்டு, மறுநாள் செல்லுமாறும் சொல்கிறார். ஆனால், அதனை அலட்சியப்படுத்திவிட்டு, அந்த இளைஞன் கிளம்பிவிடுகிறான்.

இதற்குள் அந்த யுவதியின் அருகில் வந்துவிட்ட இளைஞன், பின்னாலிருந்து அவளது அங்க அசைவுகளை ரசிக்கத் தொடங்குகிறான். குடிசையில் நடந்த நிகழ்வுகள் அவனது நினைவில் ஓடுகின்றன. மூச்சு சூடாகிறது. உடலெங்கும் ரத்தம் பாய, அந்த யுவதியை அழைக்கிறான். பதிலே சொல்லாமல், திரும்பிக் கூடப் பார்க்காமல், அவள் சென்றுகொண்டே இருக்கிறாள். திடீரென்று வந்த தைரியத்தில், அவளது தோளை அழுந்தப் பிடித்துத் திருப்புகிறான் அந்த இளைஞன்.

மறுகணம் . . . . . . .

கொதிக்கும் இரும்பைத் தொட்டவனைப்போல், விருட்டென்று கையை இழுத்துக்கொள்ளும் அவன், வண்டியில் இருந்து கீழே விழுகிறான். இளைஞனின் உடல், தன்னிச்சையாக இழுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. வாயெங்கும் ரத்தம். மெல்லப் பிரியும் உயிரின் கடைசித் துளியில், அந்த யுவதியின் முகம்.

இதெயெல்லாம் பார்த்தும், எதுவுமே நடக்காதவளைப் போல் அவள் தனது பயணத்தைத் தொடர்கிறாள்.

இதுவே முதல் அத்தியாயம்.

வருடம் – 1985 என்று நினைக்கிறேன். அல்லது 1987. ‘சாவி’ என்ற பெயரில் ஒரு வார இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. அதன் ஆசிரியர் – சாவி என்று அன்புடன் அழைக்கப்பட்ட சா. விஸ்வநாதன் . (அந்நாளைய) குமுதத்தின் சர்க்குலேஷனை எட்டுவேன் என்று சூளுரைத்து, இந்த வார இதழைத் துவங்கினார். அதில், கலாதர் என்ற எழுத்தாளர், ‘ஒலியற்ற ஓசை’ என்ற பெயரில் ஒரு தொடரை எழுதி வந்தார். அதன் முதல் அத்தியாயமே, மேலே நான் கொடுத்துள்ளது.

எண்பதுகளில், தமிழில் பேய்க்கதை எழுதுவது என்பது ஒரு அரிய கலையாகவே இருந்துவந்தது (இப்போது அது அருகியே போய்விட்டது என்பது வேறு விஷயம்). அந்தக் கலையின் விற்பன்னர்களாக விளங்கியவர்கள், மிகச் சொற்பம். அதில், குறிப்பிடத்தகுந்த இருவரைப் பற்றியே இந்தக் கட்டுரை.

கலாதரும் கிருஷ்ணகுமாரும்.

கலாதருக்கு சாவி என்றால், கிருஷ்ணகுமாருக்கு, குமுதம்.

இவர்களது பெரும்பான்மையான நாவல்களை (பத்திரிகைத் தொடர்கள்) நான் அந்தச் சமயத்தில் படித்திருக்கிறேன். இருவருமே குறிப்பிடத்தகுந்த அளவில் எழுதிவந்தவர்கள். இவர்களது கதைகளை நான் படித்ததற்கு, எனது தாய்மாமா எண். மூன்றும் ஒரு காரணம். அவர்தான் இவர்களது கதைகளை, பத்திரிக்கைகளிலிருந்து சேகரித்து, தைத்து வைத்திருந்தார். அப்படிப் படித்ததே ஒலியற்ற ஓசை. இன்னும் நிறையக் கதைகள் (சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, இன்னொரு குறிப்பிடத்தகுந்த கதை).

கலாதரின் ஒலியற்ற ஓசைக்கு வருவோம்.

இந்த முதல் அத்தியாயம் முடிந்ததும், இரண்டாவது அத்தியாயத்தில், அந்த இளைஞன் இறந்த இடத்துக்கு வரும் சாமியார், இதற்குள் அங்கே வந்திருக்கும் போலீசைக் குழப்புகிறார். அதன்பின், அங்கிருந்து, இளைஞனின் மரணத்துக்குக் காரணமான யுவதியிடம் சென்று பேசுகிறார். அந்த யுவதியிடமே ஒரு மர்மம் உண்டு. அவளைப் பார்த்ததும் இளைஞன் இறக்கக் காரணம் என்ன? புத்தகத்தைப் படித்தால் தெரியும்.

சில மாதங்கள் கழித்து, ஒரு அழகிய இளம்பெண், அதே பந்திப்பூர் சாலையில், அதே பங்களாவைத் தேடி வருகிறாள். அவளிடமும் பேசுகிறார் அந்தச் சாமியார். ஆனாலும் பிடிவாதமாக அந்தப் பெண் அந்த பங்களாவுக்கு வந்துவிடுகிறாள். மிகப் பழைய பங்களா அது. புதிதாக ஒருவரால் வாங்கப்பட்ட பங்களா. அந்த பங்களாவைச் சுற்றிலும் பல மர்மங்கள்.

அந்த பங்களாவில் இரவில் தங்குகிறாள் அந்தப்பெண். நள்ளிரவில், அவளது ஜன்னலுக்கு வெளியே, ஒரு மிகச்சிறிய – பட்டாம்பூச்சியைப் போன்ற பறவை ஒன்று – பறக்கிறது. மெதுவே, ஜன்னலை ஊடுருவி உள்ளே வரும் பறவை, அளவில் பெரியதாக ஆகிக்கொண்டே வருகிறது. இவளது மிக அருகில் வந்து பறக்கும் அது – ஒரு மிகப்பெரிய கழுகு ! மெல்ல மறைந்தும் விடுகிறது.

இதற்கிடையில், சுடுகாட்டின் மத்தியில் அந்தச் சாமியார். பங்களாவின் வேலையாளை அழைத்து, அங்கே ஒரு குறிப்பிட்ட கல்லறையைத் தோண்டச் செய்கிறார். சற்றே அழுகிய நிலையில், ஒரு பிணம். அந்த வேலைக்காரனை அனுப்பியும் விடுகிறார். சிறிது நேரத்தில், சமாதியை மூடச்சொல்லி அவனிடம் சொல்கிறார். சமாதியை மூடும் வேலைக்காரன், பிணத்தின் கை பிய்த்து எடுக்கப்பட்டிருப்பதைக் கவனித்து அதிர்ச்சி அடைகிறான். சமாதியை மூடிவிட்டு, சாமியாரைப் பார்க்கும் வேலைக்காரன், பேரதிர்ச்சியில் உறைந்துபோகிறான். சாமியாரின் வாய் ஓரத்தில்…… உதடுகளுக்கு வெளியே துருத்திக்கொண்டு தெரியும் அது… என்ன? சதைத்துணுக்கா?

தன்னைச்சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் ஒவ்வொரு இழையாக அறுத்தெறியும் அந்த இளம்பெண், அத்தனை நிகழ்வுக்கும் சூத்ரதாரியான நபரைக் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. அட்டகாசமான சஸ்பென்ஸ், திகில், மர்மங்கள், மந்திரங்கள், யோகாசனங்கள் ஆகியவற்றின் கலவையே இந்த ஒலியற்ற ஓசை. ஆனால், ஒரு சோகமான நிகழ்வு என்னவெனில், இதன் கடைசி அத்தியாயம் மட்டும் அந்தத் தொகுப்பில் இல்லை. ஆகவே, யார் அந்த வில்லன் என்று இன்றுவரையில் எனக்குத் தெரியாது. இருபத்தி இரண்டு வருடங்களாக எண் மூளையைக் குடையும் விஷயம் இது. அந்தப் புத்தகமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதைப் படிக்கும் நண்பர்கள் யாரவது தெரிந்தால் சொல்லுங்கள். உங்களிடம் புத்தகம் இருப்பின், தெரியப்படுத்தவும். மாதம் ஒரு முறையாவது இதனை நான் நினைத்துப் பார்ப்பேன். ஒலியற்ற ஓசை என்னுள் நிகழ்த்திய பாதிப்பு அத்தகையது.

இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் – ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பிக்கும் முன்னர், பதஞ்சலி யோக சூத்ரம் போன்ற பண்டைய நூல்களில் இருந்து மர்மமான வரிகளும், அவற்றின் மொழிபெயர்ப்பும் இருக்கும். அதைப் படித்தாலே அந்த வாரத்தின் அத்தியாயம் பற்றிய பயம் மனதில் எழும்.

கலாதருக்கு ஒரு உதாரணம் பார்த்தாயிற்று. அடுத்து – கிருஷ்ணகுமார்.

தியாகு, ஒரு நாற்பத்தைந்து வயது மனிதர். தனது நெருங்கிய நண்பர் ராமாமிர்தம் மாரடைப்பில் திடீரென இறந்துவிட, அவரது இறுதிச் சடங்குக்குச் செல்லும் தியாகுவின் காதில் யாரோ கிசுகிசுக்கும் சத்தம் கேட்கிறது.

“அவளை, அந்தக் கதவைத் திறக்கவேண்டாம் என்று போய் சொல்”

அது, தன்னுடைய நண்பர் ராமாமிர்தத்தின் குரல் என்பதை உடனே தெரிந்துகொள்ளும் தியாகு, அதிர்ச்சியில் உறைகிறார். ஆனால், அது தன்னுடைய மனப்பிரமை என்று நினைத்து, அந்தச் சம்பவத்தையே மறந்தும் போகிறார். அவரது இல்லத்தில் திடுமென சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இறந்துபோன ராமாமிர்தத்தின் மகள் அனுவை நோக்கியே அந்தச் சம்பவங்கள், தியாகுவை இட்டுச் செல்கின்றன. அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரியும் அனு, ஒரு நாள் வீட்டுக்கு ஓடிவந்து, இனி வேலைக்குச் செல்லமாட்டேன் என்று அழுகிறாள். ஏன் என்றும் சொல்ல மறுக்கிறாள். மருத்துவமனைக்குச் செல்லும் தியாகுவின் காதில், மறுபடியும் ராமாமிர்தத்தின் குரல். ஒரு குறிப்பிட்ட மருத்துவரை விசாரிக்கச் சொல்லி. சம்பவம் நடந்த அன்று, அனுவை, மார்ச்சுவரியின் ஒரு குறிப்பிட்ட கதவைத் திறந்து, ஒரு பிணத்தைப் பரிசோதிக்கச் சொல்லியிருக்கிறார் அந்த மருத்துவர். அந்தப் பிணம் இருக்கும் அறையைத் திறந்த அனுவை, எதுவோ பலமாக அறைகிறது. அந்தச் சம்பவம்தான் அனு அழக் காரணம். அன்றிலிருந்து, அவளது உடலில், அந்த ஆவி புகுந்துவிடுகிறது.

அந்த ஆவி யார்?

சங்குண்ணி என்ற மலையாள மாந்த்ரீகரின் உதவியுடன் இந்த உண்மையைக் கண்டுபிடிக்கிறார் தியாகு.

இந்தக் கதையே, ‘திறக்கக் கூடாத கதவு‘.

இக்கதையும், படு விறுவிறுப்பாகச் செல்லும். கதையில், உயிரோடு கழுவில் ஏற்றும் கதை ஒன்று உண்டு. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து, மூன்று வருடங்கள் முன், திருவல்லிக்கேணியில் ஒரு பழைய புத்தகக் கடையில், நான் முதலில் எப்படி இதனைப் படித்தேனோ, அதே வடிவில் – குமுதத்தில் இருந்து கிழித்துத் தைக்கப்பட்ட வடிவில் – இதனைப் பார்த்தேன். உடனே வாங்கியும் விட்டேன். அப்போதும் படிக்கப்படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது.

இது தவிர, கிருஷ்ணகுமார் குமுதத்தில் வாரம் ஒரு கதை என்ற ரீதியில் எழுதிய ‘கோஸ்ட்’ கதைகளை மறக்க முடியாது.

இந்தக் கதைகளுக்குப் படம் வரைந்தவர்கள் – முறையே ஜெயராஜும் அரஸ்ஸும். திறக்கக்கூடாத கதவுக்கு, சற்றே வித்தியாசமான பாணியில், தீற்றல் தீற்றலாகப் படம் வரைந்திருப்பார் அரஸ். அது, கதையின் திகிலைக் கூட்டும். அதேபோல், ஒலியற்ற ஓசைக்கு, ஹீரோயினைப் படு செக்ஸியாக வரைந்துவைத்திருப்பார் ஜெ.

யாரிடமாவது ஒலியற்ற ஓசை இருந்தால் சொல்லுங்கள்.

Facebook comments

comments


31 Comments


  1.  

    wonderful and very interesting article!!! :)




  2.  

    அருமையான நினைவுகள்..இது போல அப்போது 1990’s ல தேவி பத்திரிக்கையில் இந்திரா செளந்தரராஜன் திரில்லர் கதைகளில் பட்டையை கிளப்பினார்.கதைகளின் பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால் அக்கதைகள் தோற்றுவித்த பயம் இன்னும் நினைவுகளில் இருக்கிறது!! சாவி பத்திரிக்கை இப்போது வருவதில்லை!!




  3.  

    //உயிரோடு கழுவில் ஏற்றும் கதை ஒன்று உண்டு. //

    ”ஞான் ஜனிச்சது எர்ணாகுளத்தண்டே அடுத்துள்ள க்ராமத்தில்…”

    இந்த வரியை நான் சாகும் வரை மறக்க முடியாது. இப்ப டைப் பண்ணும்போது கூட, புல்லரிக்குது.




  4.  

    I second yogi Sri Ramananth Guru :)




  5.  

    இதே மாதிரி பேய்/மர்மக்க்கதைகளில் இன்னும் இரண்டு பேர் கில்லாடிகள்.

    1. ராஜேந்திரக்குமார் &
    2. எண்டமூரி வீரேந்திரநாத் (தமிழில் சுசிலா கனகதுர்கா)

    இதில் எண்டமூரியின் ‘துளசி தளம்’ & ‘மீண்டும் துளசி’ எனக்கு ரொம்ப பிடிச்ச நாவல்கள். இங்க வந்த பின்னாடி கூட, இந்த ரெண்டு புக்கையும் வாங்க படாதபாடு பட்டேன். கடைசி வரை கிடைக்கவேயில்லை.

    ஊருக்கு வரும்போது.. இதை நிச்சயம் வாங்கனும்.




  6.  

    Unga eluthe thani style thaan Rajesh




  7.  

    @ ரஃபீக் – கரெக்ட். இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் இன்னமும் வந்துக்கிட்டு இருக்கு. ஆனா அது கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. அவரோட ஆரம்ப கால மர்ம நாவல்கள் எனக்குப் புடிக்கும் :-) . .

    @ யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி – எண்டமூரி வீரேந்திரநாத் பத்தி சொல்லனும்னு நினைச்சி மறந்துட்டேன். துளசிதளம் – கட்டாயம் மறக்க முடியாத நாவல். படிக்கும்போது அது எக்சார்சிஸ்ட் படத்தை சுட்டு எழுதினதுன்னு தெரியாது. ஓம்பா வருஷம் கழிச்சி தான் தெரிஞ்சிக்கினேன். ஆனாலும், அந்த கதை கிளப்பிய பய அலை – சூப்பர். அந்தப் படம் சினிமாவாவும் வந்திருக்கு. அதையும் நான் பார்த்திருக்கேன். சினிமா – மொக்கை. நாவல்தான் பெட்டர். ரெண்டாவது பார்ட் இன்னும் படிச்சதில்ல.

    @ நியாஸ் – புடிச்ச விஷயம் பத்தி எழுதும்போது யாரா இருந்தாலும் நல்லாத்தான் எழுதுவாங்க தல :-)

    @ மயிலு – :-)




  8.  

    80′sனா, நா பொறக்கவேயில்ல……………அதுனால…………….

    90′s பத்தி எழுதுனா அப்ப எதுனா சொல்றேன்……

    லைப்ரரில – இ.சௌந்தராஜன், ராஜேஷ்குமார் புத்தகங்கள் – எப்ப பாத்தாலும் கிழிஞ்சு போயி, உள்ள நெறைய என்ட்ரி இருக்கும்…pulp வகை எழுத்துல இரண்டு பெரும் மன்னர்கள் தான்……….

    இ.சௌந்தராஜன் – ருத்ர வீணை: முதல் பாகம் எனக்கு grippingகா தெரிஞ்சுது..போகப் போக போரடிச்சது…….

    இன்னொரு சந்தேகம், மலையாளத்துல தான் இந்த மாதிரி மாந்த்ரீகம்-தந்திரம், போர்ன் படங்கள் நெறைய வர காரணம் என்ன ?




  9.  

    மலையாளத்துல ரெண்டு எக்ஸ்ட்ரீமும் இன்னமும் வெகுஜன புழக்கத்தில் இருப்பதே காரணம்னு படுது. அதாவது, அங்க என்னதான் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் இருந்தாலும், அங்க மந்திரம், தந்திரம், ஆன்மிகம் ஆகிய விஷயங்கள் ரொம்பவே அதிகம். இதுக்கு என்ன காரணம்னு யோசிச்சா, ஒரு காரணம் தோணுது. அது, நான் சொன்னதில்ல .ஏற்கெனவே இன்னொருவர் சொன்னது. அதாவது, மலையாள தேசம், ஒருபக்கம் கடலாலும், இன்னொரு பக்கம் மலைகளாலும் சூழப்பட்டு, அந்நியர்கள் – அதாவது, பக்கத்து நாட்டு மக்களே கூட (தமிழ்நாடு) உள்ள அவ்வளவு சீக்கிரம் வர முடியாத நினைல ஆரம்ப காலத்துல இருந்ததுனால, அவங்களோட கலாசாரம் அப்படியே காக்கப்பட்டு வந்திருக்கு. இப்ப, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிலதான் அது கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அப்படியே அந்தக் கலாச்சாரமும் தொடருது. கூடவே, ஒவ்வொரு மாநில மக்களுக்கும், base culture ஒண்ணு இருக்கும். மலையாள தேசத்தில், அது தாந்த்ரீகம். இது – ஆன்மிகம் பத்தி அவரு சொன்னது.

    சொன்ன நபரின் பேரு – சந்திர சேகர இந்திர சரஸ்வதி.

    போர்ன் படங்கள் பத்தி – நெஜம்மாவே தெரில. யாராவது அங்க இருக்குறவங்க கிட்ட கேட்டுதான் சொல்லணும்.




  10.  

    சந்திர சேகர இந்திர சரஸ்வதி………U mean C.R.Saraswathi ??

    // சினிமா நடிகையும், அதிமுக பேச்சாளருமானசி.ஆர். சரஸ்வதி சமூக நல வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவு:

    தமிழக அரசின் சமூக நல வாரியத் தலைவராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆகஸ்ட் 31 ம் தேதியில் இருந்து, மூன்று ஆண்டுகள் வரை, இந்தப் பதவியில் சி.ஆர்.சரஸ்வதி தொடர்வார். //




  11.  

    This comment has been removed by the author.




  12.  

    // போர்ன் படங்கள் பத்தி – நெஜம்மாவே தெரில. யாராவது அங்க இருக்குறவங்க கிட்ட கேட்டுதான் சொல்லணும். //

    எங்கேயோ, ஏதோ பேரு தெரியாத நாடுகளின்
    porn படங்கள் பத்திலாம் சில பேரு எழுதுறாங்க…………பக்கத்து மாநிலத்த கண்டுக்குறது இல்ல……………..அப்பறம் எப்புடி தமிழ்நாடு உருப்படும் ? தமிழ் எப்படி – முன்னுக்கு – வர்றது




  13.  

    என்ன பண்ணலாம் சொல்லுங்க . . வேணும்னா யாரையாவது மலையாளப் படங்கள் பத்தி பதிவு ஆரம்பிக்க சொல்லலாம். யாரு இருக்காங்க மலையாள போர்ன் படங்களை செங்குத்தா தூக்கி நிறுத்த ?




  14.  

    இந்த கிருஷ்ண குமார் என்பது ரா.கி.ரங்கராஜன் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது..அவர் பல பெயர்களில் எழுதியிருக்கிறார்…லைட்ஸ் ஆன் வினோத் என்று எழுதியவரும் அவரேதான்…




  15.  

    Confirmed…It is raa.ki.rangarajan who wrote in the name of ‘krishnakumar’

    http://www.thehindu.com/arts/books/article1525619.ece




  16.  

    கிருஷ்ணகுமார் கதைகள் படிச்ச மாதிரிதான் தெரியுது. ஆனா சரியா ஞாபகம் இல்ல. எண்டமூரி கதைகள் சூப்பரா இருக்கும்.
    இந்திரா சௌந்தராஜன் கதைகள் சிலது ரொம்ப சுவாரசியமாதான் இருக்கும். பிடி சாமி கதைகள் படிச்சிருக்கீங்களா?




  17.  

    @ மாயன் – அடடே… அட்டகாசம் !! ரா.கி. ரங்கராஜன் தான் கிருஷ்ணகுமார் என்பது இன்னிக்கி தான் தெரிஞ்சிக்கிட்டேன். சூப்பரப்பு !! லைட்ஸ் ஆண் வினோத் அவருன்னு ஆல்ரெடி தெரியும். அதேமாதிரி, கலாதரும் அவருதானா? அதான் குமுதத்துல ரெகுலரா எழுதிருக்காரு மனுஷன் :-)

    @ எஸ்.கே – பி.டி சாமி கதைகள் அந்தக் காலத்துலயே காமெடியா இருக்கும் :) . .




  18.  

    ரா.கி. ரங்கராஜன் = “ஒரு மாபெரும் மானுட சாகசம்” தான் ஞாபகம் வருது………….

    தவிர நெறைய ஆங்கில கிரைம் நாவல்களையும் தமிழ்படுத்தியிருக்காருல…………?




  19.  

    Yes.குறிப்பா ‘பட்டாம்பூச்சி’. தவிர சிட்னி ஷெல்டனையும் (குமுதம்) , ஜெஃப்ரி ஆர்ச்சரையும் , டானியல் ஸ்டீலையும் (ஜூனியர் விகடன்) மொழிபெயர்த்திருக்காரு




  20.  

    how can you people forget p.t samy ???




  21.  

    முன்பு மனோரமா என்ற மலையாள வார இதழிலில் ஆரோடும் பறயல்லே என்ற திகில் கதை தொடராக வெளிவந்துக்கொண்டிருந்தது. அந்த கதையை உறவினர் படித்து சொல்வதுண்டு. கேட்கும்போதே படு பயங்ரகமான அந்த கதையின் தமிழாக்க நாவலை கேரளாவிலேயே வாங்கினேன். எழுத்தாளர்கள் பெயர் நினைவில்லை. சத்தியாக சொல்கிறேன், அதைப்படித்து கைகால்கள் விறைத்துப்போனதுண்டு. அதற்கப்புறம் இ.செள. நல்லாருக்கும். நீங்க சொன்ன ரெண்டுபேரையும் நான் கேள்விப்பட்டதே இல்லை. காரணம் குமுதத்தை இலவசமா கொடுத்தாக்கூட படிக்கமாட்டேன்.:)




  22.  

    வாரமலர் பி.டி. சாமி. எங்க திகில் கதை எழுதுனாரு? காமெடி கதைல்ல எழுதுனாரு:))

    சமீபத்தில் ஆ.வி.ல் வெளிவந்த கிருஷ்ணவேணி ரொம்பவே பயமுறுத்தியது. அது ஒரு உண்மைக்கதை என்று நினைக்கிறேன்.




  23.  

    நண்பா உங்களுக்கு ஒலியற்ற ஓசை எப்படி மண்டைய குடையுதோ அப்படியே எனக்கு
    கோஸ்ட் கதைகள். அது உங்க கிட்ட இருக்குனு எனக்கு மெயில் பண்ணியிருந்தீங்க
    தயவு செய்து எனக்கு அதை ஷெரொஷ் எடுத்தோ அல்லது ஸ்கேன் பண்ணி மெயில் மூலமாகவோ அனுப்பினீங்கன்னா ரொம்ப புண்ணியமாப் போகும். செலவை நான் எது கிறேன். பாஸ் கொஞ்சம் கருணை காண்பீங்க .




  24.  

    we want more posts about tamil books from you…




  25.  

    துளசிதளம் பிரமாதமான நாவல் நண்பா..ஆனால் அதற்கும் எக்ஸார்சிஸ்ட் படத்துக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை..கதை மற்றும் படத்தின் ஆரம்பத்தில் வரும் சில அம்சங்கள் தவிர. மாந்திரீகமா விஞ்ஞானமா எதனால் எல்லாம் நடக்கிறது என படிப்பவர்களின் மனத்தை அலை பாய வைத்துவிடுகிற நாவல் அது. சுஜாதாவின் ஒரு நாவல் கூட (பெயர் மறந்துவிட்டது)இதே பாணியில் வந்து பிரமாதமான வரவேற்பைப் பெற்றது..




  26.  

    If any one has the book ஒலியற்ற ஓசை please let me know yaar. I was looking for this book for quiet a long time. Just i read the above article and again it triggered my search… Thanks thalaiva… If any body has please contact me in rprasad79@gmail.com




  27.  

    @ coolbreeze – Me too :-) . Let’s wait till someone comes out with the gud news :-)




  28.  
    Ordinary Indian

    Pls share to me also….





Leave a Reply