Che (2008) – Spanish

by Karundhel Rajesh December 10, 2009   Personalities

செ குவேரா – இந்தப் பெயரை, உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டது எத்தனை பேர்? உண்மையில், அவரது பெயரை டி-ஷர்ட்டுகளில் அணிந்துகொண்டு சுற்றுபவர்கள் தான் அதிகம். அவர் யார்? அவர் கூப விடுதலைக்காக என்ன செய்தார்? இக்கேள்விகளுக்கு விடை தேடினோமேயானால், இவ்வுலகில், தனது கொள்கைகளுக்காகவே வாழ்ந்து உயிர்துறந்த ஒரு மனிதனை நாம் கண்டுகொள்ளக்கூடும். அவனைப்பற்றிய நிஜம் தெரியும்வரையில், சட்டைகளில் அவன் படத்தைப் போட்டுக்கொண்டு சுற்றுவதால் எப்பயனும் இல்லை.

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளனின் வாழ்வை, உள்ளது உள்ளபடி சொல்லும் ஒரு படம் தான் ‘ செ’.

ஜான் லீ ஆண்டர்சன் என்ற ஒரு எழுத்தாளர் எழுதிய புத்தகமான செ யின் வரலாற்றின் திரைப்பட உரிமையை, பெனிசியோ டெல் டோரோ என்ற நடிகர் (டிராஃஃபிக் புகழ்), வாங்கியதில் இருந்து, இப்படத்தின் கதை தொடங்குகிறது. அவர், ஏழு வருடங்களுக்கு, செ வைப் பற்றி, ஆராய்ச்சி செய்தார். செ வாழ்ந்த இடங்களுக்குப் பயணித்தார்; செ யுடன் பழகிய மனிதர்களை சந்தித்தார் (ஃபிடல் காஸ்த்ரோ உட்பட); கூபா முழுவதும் சுற்றி, சே வைப்பற்றித் தெரிந்துகொண்டார். செ வின் நடை உடை பாவனைகளைப் பற்றி முழுவதும் அறிந்துகொண்டார். இத்தகைய கடும் உழைப்பின் பலனாக, அத்தனை விஷயங்களையும் அறிந்த பிறகு, ஸ்டீவன் சோடர்பெர்க்கை அழைத்து (எரின் ப்ரோகோவிச், டிராஃபிக், ஓஷன்’ஸ் லெவன் ட்ரியாலஜி), இப்படத்தை இயக்கக் கோரினார்.

இப்படம் உருவாகத் துவங்கியபோது, சே வின் பொலீவியப் புரட்சியைப் பற்றி மட்டுமே இத்திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தார் பெனிசியோ டெல் டோரோ. ஆனால், அதை மட்டும் எடுத்தால், சே யைப் பற்றி சரியான உண்மையைக் கூறியதாகாது (நம்ம பாரதி படத்தில், அவர் ஒரு உள்ளூர் கவிஞர் மட்டுமே என்ற ஒரு எண்ணம் எப்படியோ வந்துவிடுவதைப்போல்) என்பதால், அவரது வெற்றிகரமான கூபப்புரட்சியப் பற்றியும் படம் எடுத்துவிடுவது நல்லது என்று எண்ணி, சோடர்பெர்க் மற்றும் டெல் டோரோ கூட்டணி, இப்படத்தை இரு பிரிவுகளாகப் பிரிப்பதே நலம் என்ற முடிவுக்கு வந்தனர்.

அப்படி அவர்கள் எடுத்த ஒரு அருமையான படமே ‘செ’ .

இப்படம், ‘செ: தி அர்ஜெண்டைன்’ என்றும், ‘செ: த கெரில்லா’ என்றும் இரு பிரிவுகளாகப் படமெடுக்கப்பட்டது.

முதல் பகுதியான ‘செ: தி அர்ஜெண்டைன்’ படத்தில், ஒரு இளம் மருத்துவரான எர்னெஸ்டோ என்பவர், எவ்வாறு கூபப் புரட்சியைப் பற்றி அறிந்துகொண்டார் என்பதும், அவர் எவ்வாறு ஃபிடல் காஸ்த்ரோவைச் சந்தித்தார் என்பதையும் சுருங்கச் சொல்லி, அந்த மருத்துவர்,’செ” என்று பெயர் பெற்று, ஒரு மிகப்பெரும் தலைவராக உருவெடுத்ததையும், கூபா சுதந்திரம் அடைந்ததில் செ வின் பங்கைப்பற்றியும் திறம்பட விளக்குகிறார்கள்.

இரண்டாம் பகுதியில், கூபா விடுதலை அடைந்தபின், செ எவ்வாறு, தென்னமெரிக்காவின் மற்ற அடிமை நாடுகளைப் பற்றிச் சிந்தித்தார் என்பதையும், அவர் எவ்வாறு ஒரு நாள் ஃபிடலுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தலைமறைவானார் என்பதையும், அவர் எவ்வாறு மாறுவேடம் இட்டுக்கொண்டு பொலிவியா வந்தார் என்பதையும், பொலிவியாவின் சுதந்திரத்துக்கு எவ்வாறு உழைத்தார் என்பதையும்,அந்த முயற்சி பலிக்காமல், எவ்வாறு ஒரு துரோகியால் அடையாளம் காட்டப்பட்டு, சுடப்பட்டு உயிரிழந்தார் என்பதையும் உள்ளது உள்ளபடி காட்டியிருக்கிறார்கள்.

உண்மையில், ‘செ’ என்பவர், ஒரு மனிதாபிமானி. படிஸ்டா என்ற கொடுங்கோலனின் ஆட்சியிலிருந்து கூபாவைக் காப்பாற்றி, அங்கு மக்களாட்சி அரும்பும்படியான ஒரு லட்சியத்துக்காக உழைத்தவர். இரவு பகல் பாராது, ஒரு உயர்ந்த லட்சியத்துக்காகப் போராடுபவர்கள், மிகச் சொற்பமே. பல வருடங்கள், தனது கொடிய ஆஸ்துமாவையும் பொருட்படுத்தாது, கூபக் காடுகளில், எந்நேரமும் கொல்லப்படலாம் என்ற ஒரு நிலையில், விடாமுயற்சியோடு போராடி, பல குழுக்களை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்காற்றி, கடைசியில் கூபாவை விடுதலையடைய வைத்தது, இந்த மாவீரனுடைய பெரும் முயற்சியே என்பதை, இப்படம் அருமையாக விளக்குகிறது.

, சென்ற நூற்றாண்டின் ஒரு இணையற்ற புரட்சியாளனின் வரலாற்றைத் திறம்பட விளக்குகிறது.

மொத்தம் நான்கு மணிநேரத்துக்கும் அதிகமாக ஓடும் இப்படம், 2008 இல் ஸ்பானிஷ் மொழியில் எடுக்கப்பட்டது. கூப மக்களால், பெரும் வரவேற்புக்குள்ளான ஒரு படம். கான் திரைப்பட விழாவில், பெனிசியோ டெல் டோரோ, சிறந்த நடிகருக்கான விருதை, இப்படத்திற்காகப் பெற்றார்.

பி.கு – இப்படத்தைப் பார்க்கும் முன்பு, ‘மோட்டார்சைக்கிள் டைரீஸ்’ என்ற படத்தைப் பார்ப்பது நல்லது. அப்படம், இளம் எர்னெஸ்டோ (செ), மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது, ஒரு மோட்டார்சைக்கிளில் எவ்வாறு தென்னமெரிக்காவைச் சுற்றி வந்தார் என்பதையும், அந்தப் பிரயாணம் எவ்வாறு அவர் மனதை மாற்றியது என்பதையும் சொல்லும் ஒரு படம். இந்த ‘செ’ படம், சரியாக அந்தப்படம் முடியும் தருவாயில், தொடங்குகிறது. எனவே, முதலில் ‘மோட்டார்சைக்கிள் டைரீஸ்’ , பின்பு ‘செ’ என்று பார்ப்பது நல்லது.

இப்படத்தைப்பற்றி எனது ஆங்கில விமர்சனம் இந்த சுட்டியில் உள்ளது.

‘செ’ திரைப்படத்தின் டிரைலர் இதோ.

  Comments

34 Comments

  1. //’, சென்ற நூற்றாண்டின் ஒரு இணையற்ற புரட்சியாளனின் வரலாற்றைத் திறம்பட விளக்குகிறது.//

    நல்லா சரக்கடிச்சிட்டு விமரிசம் எழுதினா, இந்த மாதிரி repetitive வரிகள் வர்றது சகஜம் தான். பொறுத்தருள்க 🙂

    Reply
  2. முதலில் என் நன்றிகள்…!

    வணக்கம் நண்பரே…!

    நான் உண்மையில் சகோதரரின் (சே வின்) மேல் பெரும் அபிப்ராயம் கொண்டவன்…! உண்மையில் எனக்கு இத்தனை செய்திகள் அவரை பற்றி தெரிந்து இருக்க வில்லை..! தன் மக்களுகென்று இன்றி, மாற்று சமுதாய மக்களுக்காக உழைத்த விடுதலை வாங்கி கொடுத்த மா மனிதர் என்பது எனக்கு தெரியும்..! சதி மதம் மொழி நாடு இவைகளால் பிரிந்து கிடக்கும் சுயநலத்தோடு செயல்படும் அனைவரும் தெரிந்து கொள்ளவண்டிய நபர்…! எனது சட்டையில் கூட இவர் படம் உள்ளது (வேறு எந்த ஒரு நபரின் படமும் இதுவரை என் ஆடையை அலங்கரிததில்லை).. மக்கள் கேட்கும் பொது அவரின் பெருமை எடுத்து சொல்லும் வாய்ப்புக்காக இதை நான் அணிகிறேன்.. ஒரு வட்டதிர்குள் அடைத்திட இயலாத ஊர் பறவை அவர்..! அவரை கொன்றவர்களால் அவர் புகழை என்ன செய்ய முடிந்தது..!அவரை பற்றி நினைக்கையிலே பாரதியின் அச்சமில்லை பாடல் எனக்கு ஞாபகத்தில் வருகிறது..

    Reply
  3. @ சக்தி – இந்த செ படங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அப்படியே அந்த மோட்டார்சைக்கிள் டைரீஸ் படத்தையும் பாருங்கள். செ வின் மொத்த வாழ்க்கையும் அவற்றில் உள்ளன. உங்கள் கருத்துக்கு நன்றி..

    Reply
  4. come on……….!!!!!

    என்னோட… ட்ராஃப்டில் இருக்கும் படங்கள் எல்லாம் எப்படி உங்களுக்கு லிஸ்ட் கிடைச்சது? 🙂 🙂

    சே-வைப் பத்தி… இன்னும் நிறைய படிச்சிட்டு… எழுதனும்னு… இதை எழுதாமலேயே வச்சிருந்தேன். இரண்டு பாகங்களுக்கும் தனித்தனியா.. எழுதும் எண்ணம் இருந்துச்சி!

    இந்தப் பதிவை மட்டும்…. ‘வேலை மிச்சம்’-ன்னு சொல்லிட்டு போக முடியலை. 🙁

    Reply
  5. நண்பரே,

    நாணயத்திற்கு இருபக்கம் என்பதுபோல் எந்த ஓர் புரட்சிக்கும், மனிதனிற்கும் இருபக்கங்கள் உண்டு.

    மோட்டார் சைக்கிள் டைரி பார்த்திருக்கிறேன். செ ஆற்றை நீந்தி நோயாளிகள் இல்லத்தை நோக்கி வரும் காட்சி மறக்க முடியாதது.

    தரமான படைப்புக்களைப் பற்றி எழுதுவதை நிறுத்தாதீர்கள்.

    Reply
  6. அருமையான படத்தைப்பற்றி ஒரு அருமையான பதிவு..
    பி.கு: கியூபா அப்படின்னு சரியாய் எழுதிருக்கலாமே கண்ணாயிரம்..

    Reply
    • Een hele goede reis alalemal. We volgen jullie weer op internet. Fijn dat jullie er morgen allemaal weer zijn. Vooral Babette, we hebben ze zo gemist! Tot morgen! Geniet van alles. liefs van ons.

      Reply
  7. @ பாலா – 🙁 இத நான் எதிர்பார்க்கல. . உங்க ட்ராப்டில் இதுந்ததுனு தெரிஞ்சிருந்தா, வேற ஏதாவது படம் பத்தி எழுதிருப்பேன் 🙁 . .இருந்தாலும் , நீங்களும் இதப்பத்தி உங்க பாணில எழுதுங்க. . கண்டிப்பா அது நல்லா இருக்கும்.

    @ காதலன் – ஆமாம். அந்தக் காட்சி, படத்தின் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று. கண்டிப்பாக நல்லா படங்களைப் பற்றி எழுதுவதை நிறுத்தவே மாட்டேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. .

    @ பிரசன்னா – கூபா ஏன்னா , அதுதான் சரியான உச்சரிப்புன்னு படித்திருக்கிறேன். அதான் அப்படி போட்டேன் 🙂

    @ சூர்யா – மிக்க நன்றி. . .

    @ முரளிகுமார் – கண்டிப்பா படிச்சிட்டு வந்து அதபத்தி எழுதுங்க 🙂

    Reply
  8. நல்ல எழுதுறீங்க… இவ்ளோ நாள் ஏன் இங்கிலிஷ்ல எழுதிட்டு இருந்தீங்க..,

    Reply
  9. வணக்கம் பேநா மூடி. இத்தனை நாள், நமக்கு ஆங்கிலத்தில் தான் எழுத வரும்னு நெனைச்சிகிட்டு தான் அதுல எழுதிகிட்டு இருந்தேன். இப்போ தான் தமிழ்லயும் எழுதவருதுன்னு புரிஞ்சிகிட்டேன் . . இனி தமிழ்தான் ..:)

    Reply
  10. ஹாய் கருந்தேள் . நல்லாவே கொட்றீங்க. இனி இல்ல எப்பவும் தமிழே நமக்குன்னு சொல்லுங்க பொருத்தமா இருக்கு. வாழ்த்துக்கள்.

    Reply
  11. மோட்டார்சைக்கிள் டைரீஸ், i will not miss that movie…

    Reply
  12. @ அண்ணாமலையான் – வணக்கம். கொட்டீருவோம் இனிமே 🙂 . . எப்பவும் தமிழே நமக்குதான் . . 🙂 . . உங்க வாழ்த்துக்கு நன்றி. .

    @ மகா – மிஸ் பண்ணிராதீங்க. . . அது ஒரு கிளாஸிக். . .

    Reply
  13. Intresting…I wil see the movie…Thanks

    Reply
  14. கொஞ்சம் டெம்ப்ளேட்டை மாத்துனா ஒபீசுல எங்க வேலை கொஞ்சநாள் தங்குமில்ல …
    ஆனா இந்த படம் படுத்துக்கிட்டது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்துச்சு.

    Reply
  15. Anonymous

    நீங்கள் குறிப்பிட்டது போல ஜோன் லீ அன்ரசனின் புத்தகத்தை ஒட்டியே இப்படத்தை எடுக்க இருந்தனர். ஆனால் பின்னர் (பல காரணங்கள்)அதைக்கைவிட்டு சே குவேராவின் சொந்த டயரிக்குறிப்புகளை வைத்து தொகுக்கப்பட்ட ‘ஒரு புரட்சிகர யுத்தத்தின் எச்சங்கள்’ மற்றும் ‘பொலிவிய நாட்குறிப்புகள்’ என்கின்ற இரு புத்தகங்களை அடிப்படையாக வைத்தே சே என்கின்ற படத்தை எடுத்தனர். நான் இப்படத்தை கடந்த டிசம்பரில் நியூயோர்க்கில் நடந்த ‘Road Show’ (நீங்கள் சுட்டியிட்ட ரைலரில் வரும் குறிப்பு) இல் பார்த்தேன். இரு பகுதிகளையும் ஒரேகாட்சியாக (நம்மூர் போல இடைவேளை விட்டு)காண்பித்தனர். பகுதி ஒன்று ‘ஒரு புரட்சிகர யுத்தத்தின் எச்சங்கள்’ இன் அடிப்படையிலும் பகுதி இரண்டு ‘பொலிவிய நாட்குறிப்புகள்’ அடிப்படையிலும் எடுக்கப்பட்டுள்ளதாக அப்போது வழங்கப்பட்ட கையேட்டிலும் குறிப்பிட்டுள்ளனர்.

    Reply
  16. @ அனானி – உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி . . நீங்கள் இப்படங்களைத் திரையரங்கத்தில் பார்த்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், ஒரு திரையரங்கத்தில் தான், அங்குள்ள அத்தனை மக்களோடும் சேர்ந்து, நாம் படத்தில் லயிக்க முடியும். நல்லதொரு அனுபவத்தை அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி.

    Reply
  17. Anonymous

    கருந்தேள் நீங்கள் நினைப்பது போல அது ஒன்றும் ‘நலதொரு அனுபவம்’ அல்ல. அமெரிக்காவில் சே பற்றிய அறிவு (?) இந்த 10 ஆண்டுகளில் திடீரென பரவ ஆரம்பித்திருக்கிறது. காரணம் அமெரிக்க முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு மாயையோ என்கின்ற ஐயம் மக்களிடையே!
    படம் பார்க்க வந்தவர்களை மூன்று பகுதியாகப் பிரிக்கலாம். நடுத்தர வர்க வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு ஏதாவது புரட்சி செய்ய நினைக்கும் கூட்டம், அடுத்தது உயர்வர்க்கத்தில் பிறந்து நியூயோர்க்கில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சினிமா என்கின்ற பாடத்தை வேறு வழியில்லாமல் எடுக்கப்போய் கட்டுரை எழுத நிர்ப்பந்திக்கப்பட்ட கூட்டம், மற்றையது மூன்றாம் உலக நாடுகளில் இருந்து போராட்டங்களினால் புலம்பெயர்ந்து வாழும் கூட்டம். இவர்களில் அனேகர் முன்னை நாளில் சே பற்றியோ அன்றி சேயின் புத்தகங்களோ வாசித்து போராடி, வெறுப்புற்று, அண்டை நாடுகளின் சதியால் தோல்வி அடைந்து என பல காரணங்களினால் புலம் பெயர்ந்து வாழ்வோர்.
    நான் படமாளிகையில் இம்மூன்று கூட்டத்தினரையுமே கண்டேன் எனலாம். சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.இதில் நான் எந்த வகை என்று ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    படத்தில் நியூயோர்க் (ஐ.நா வுக்கு) வரும் சே ஆடம்பர விடுதிகளில் தங்காமல் நியூயோர்க்கின் மிக ஏழ்மை தவழும் பகுதியான புரொங்ஸ் பகுதியில் ஒரு தொழிலாளி வீட்டில் தங்கி அவர்களோடு உணவருந்துவார். ஆனால் சே பற்றிய படம் காட்டப்பட்ட இடம் நியூ யோர்க்கிலேயே செல்வச்செழிப்பு மிக்க பாகம். நுழைவுச்சீட்டின் விலை $32.00 ! சோளப்பொரியும் சோடாவும் சேர்த்து $46.00 வந்தது.
    என்னே முரண்நகை !!!!!
    எவ்வாறாயினும் மிக நல்லதோர் மனிதனைப்பற்றி எடுக்கப்பட்ட நலதோர் திரைப்படம் இது.

    Reply
  18. @ நண்பரே – நீங்கள் சொல்வதை முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். நானும் உங்கள் வகையையே சேர்ந்தவன். . என்ன, நான் புலம் பெயரவில்லை. அவ்வளவே. ஆனால், உங்களுக்குள்ள அத்தனை angst உம் எனக்கும் உண்டு. நீங்கள் சொல்வது போல், சே எப்படி வாழ்ந்தாரோ, அப்படித்தான் அவர் கருத்துக்களும் மக்களிடையே சென்று சேரவேண்டுமே தவிர, கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அதன் வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதனால், எந்த நன்மையையும் இல்லை. நாம் வாழ்வதே இப்படிப்பட்ட முரண்நகை மிகுந்த ஒரு சமுதாயத்தில் தானே நண்பரே. . இங்கு, அடுத்தவனை சுரண்டிப்பிழைக்கும் மனிதர்களுக்கே வாழ்வு. . நம்மால் இயன்ற அளவு சமுதாயத்தை சுத்தம் செய்ய முயல்வோம் நண்பரே. . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி . .

    Reply
  19. சப் டைட்டிலும் ஸ்பானிஷ் மொழியிலெயே போட்டு விட்டதால் யூகிக்க வேண்டி வந்தது.மீண்டும் ஒரு முறை தேடுகிறேன்.நன்றி.

    Reply
  20. viki

    அட தமிழிலேயே தொடருங்கள்.உங்கள் மொழி நடை நன்றாக உள்ளது .தமிழின் அழகு எம்மொழிக்கும் கிடையாது(கர்வத்துடன்)

    *
    பொதுவாக இவ்வாறு வலைத்தளம் அல்லது வலை பூ வைத்திருப்பவர்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க மாட்டார்கள்(நான் பல தளங்களில் கண்டது).ஆனால் நீங்கள் விதி விளக்கு.நன்றி.

    Reply
  21. நண்பா . .என்னைப்பொறுத்தவரை, யார் பின்னூட்டம் போட்டாலும் பதில் எழுதி விடுவேன் . . அதுதான் நட்புப் பாலத்தை வளர்க்கும் என்பதில் உறுதியானவான் நானு . .:-) அதான் . . நன்றி பாஸு . .

    Reply
  22. thalaiva naanum join panniten paatheengala

    Reply
  23. Anonymous

    சே ஒரு கலகக்காரர் மட்டுமல்ல..முழு மானிடன். முழு விபரம் அறிய சே-வாழ்வும் மரணமும் [விடியல் வெளியிடு]படிக்கவும்

    Reply
  24. karundhel,

    Feel like watching this movie right away after reading your review. Would be great, if you can let me know where I can get/hire original DVD’s of such world class movies in Bangalore.

    Thanks,
    Ram

    Reply
  25. ernestoanand.nan che patri knjam arindhullan sila natkalil mulumayaga arindhu avar kolgaigalai penpatruvan tholargala nengalum arindhu kollunggal mudindhal avar varalatrai pirarkum yaduthurainggl

    Reply
  26. பதிவும் பின்னூட்டங்களும் அழகு… முக்கியமாய் இந்த வரிகள்

    //இங்கு, அடுத்தவனை சுரண்டிப்பிழைக்கும் மனிதர்களுக்கே வாழ்வு. . நம்மால் இயன்ற அளவு சமுதாயத்தை சுத்தம் செய்ய முயல்வோம் நண்பரே. .//

    🙂

    Reply
  27. sms

    aangila pada arivu illathavargalukku ungalathu block oru nalla thiravukole.

    Reply

Join the conversation