Bramayugam (2024) – Malayalam

February 20, 2024

ப்ரமயுகம் வெளியாகி மலையாள பாக்ஸ் ஆஃபீசை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அட்டகாசமான விமர்சனங்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறது. படத்தை அனைவரும் கட்டாயம் திரையரங்குகளில்தான் பார்க்கவேண்டும் – இது OTT படம் இல்லை என்று படம் வந்த மறுநாள் பார்த்துவிட்டு எழுதியிருந்தேன். ப்ரமயுகம் எப்படி இத்தனை பெரிய...

OTT Platforms & Films – An analysis

September 20, 2021
/   Cinema articles

அந்திமழை மே 2021 இதழுக்காக எழுதியது. நான் சாஃப்ட்வேரில் வேலை செய்துகொண்டிருந்தபோது, பெங்களூரில், 2008ன் இறுதி மாதங்களின்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் Bigflix என்ற திட்டத்தின்கீழ், வாரம் மூன்று டிவிடிக்கள் வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். இதில் ஒரு மெம்பராக சேர்ந்து, கிட்டத்தட்ட 2011 ஜூன், ஜூலை வரை ஏராளமான...

Tamil Multistarrer films – an Analysis

September 19, 2021
/   Cinema articles

February 2021 அந்திமழை இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கூடவே, இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரு படத்தில் நடித்திருப்பது பற்றியும் பரவலான விவாதத்தையும் இப்படம் உருவாக்கியிருக்கிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே பேட்ட, இறைவி போன்ற படங்களில் ரஜினி,...

Tenet (2020) – English – 2

May 20, 2021
/   Cinema articles

TENET படத்தின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். TENET படத்தின் முக்கியமான அம்சம், இறந்தகாலத்துக்குச் செல்வது. இது எப்படி சாத்தியப்படுகிறது? நாம் சென்ற கட்டுரையில் பார்த்ததுபோல, இந்தப் படத்தில் காலப்பயணம் (Time Travel) வருவதில்லை. மாறாக, காலத்தைத் தலைகீழாக மாற்றுதலே (Time Inversion) வருகிறது. இதனால்தான் எதிர்காலத்துக்கு...

Nayattu (2021) – Malayalam

May 14, 2021
/   Cinema articles

நாயாட்டு படத்தில் வைக்கப்பட்ட கருத்துகள் பற்றி விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. படத்தில் தலித்களை வில்லன்களாக சித்தரித்து, அவர்கள் வேண்டுமென்றே எதிர்தரப்பான போலீஸைப் பழிவாங்க நினைத்து, அதை அரசியல் ஆக்கி, இறுதியில் தேர்தலில் மக்கள் மனதை மாற்றக்கூடிய சக்திகளாக ஆக்கப்பட்டு இருப்பதைப் பலரும் விமர்சிப்பதைக் காண முடிகிறது. அப்படி...

எஸ்.பி. பாலசுப்ரமணியம்: பிறமொழிப் பாடல்கள்

May 11, 2021
/   Cinema articles

சென்ற வருடம் இந்தியா டுடேயின் எஸ்.பி.பி சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. எஸ்.பி.பி பாடிய, தமிழைத் தவிர்த்த பிறமொழிப் பாடல்கள் பற்றியது. எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் தெலுங்கு என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதேபோல் அவர் பாடிய இரண்டாம் பாடல், கன்னடம். இதையும் எஸ்.பி....

Tenet (2020) – English – 1

December 8, 2020
/   Cinema articles

Time Travel என்ற காலப்பயணத்துக்கான விதிகள் என்னென்ன? ஒவ்வொரு படத்திலும், அல்லது ஒவ்வொரு படைப்பிலும் அதை எழுதுபவர்களே அதற்கான விதிகளையும் உருவாக்குவது வழக்கம். காரணம், இதுவரை காலப்பயணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஒவ்வொரு திரைப்படத்திலும், கதை சார்ந்து, கதையின் சுவாரஸ்யத்துக்காக ஒவ்வொரு விதி இதற்காக உருவாக்கப்படும். அப்படி க்ரிஸ்டோஃபர்...

Soorarai Pottru (2020) – Tamil

November 15, 2020
/   Tamil cinema

ஒரு ஏழை இளைஞன் ஒரு மிகப்பெரிய கனவை சுமந்துகொண்டு, ஒரு பைசா கூட இல்லாத இடத்தில் இருந்து மேலே வந்து அந்தக் கனவை நிறைவேற்றுகிறான். இந்த வகையான inspiring படங்கள் உலகெங்குமே நிறைய வந்திருக்கின்றன. தமிழில் இவை மிகக் குறைவு. ஒரு காலகட்டம் வரை தமிழில் அண்ணாமலை,...

Softwareம் கருந்தேளும்

September 6, 2020
/   Social issues

அந்திமழை செப்டம்பர் 2020 இதழ், ரெசிக்னேஷன் ஸ்பெஷல். அதில் என் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தது பற்றி நான் எழுதிய கட்டுரை. பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் Lead SQAஆக இருந்த நான், எனது வேலையை விட்டது செப்டம்பர் 1, 2015. எனது பிறந்தநாளில். அதற்குக்...

The art of Screenplay writing – சில கேள்விகளும் பதில்களும்

July 14, 2020
/   screenplay

இன்று, திரைத்துறையைச் சேர்ந்த நண்பர் Krishna Prasath, அவரது ஃபேஸ்புக்கில் திரைக்கதை எழுதுபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு அவரது ஃபேஸ்புக் போஸ்ட்டில் மூன்று பாகங்களாக விரிவாகப் பதில் அளித்திருந்தேன். அவற்றையே இன்னும் விரிவாக ஒன்றுசேர்த்து எழுதினால், கட்டாயம் அனைவருக்கும் உதவலாம் என்று தோன்றியதால் இந்தப் பதிவில்...

Sports films and biopics of Hollywood

July 4, 2020
/   Cinema articles

அந்திமழை ஜூன் 2020 இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. இந்தியாவுக்கு வெளியே, விளையாட்டுகள் மற்றும் அவற்றை மையமாக வைத்த நிஜவாழ்க்கைத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம். நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும், அவை நிகழ்த்தும் மனமாற்றங்களைப் பற்றியுமான திரைவகை இது. இவற்றிலேயே இன்னொரு பிரிவாக, கற்பனையாக...

‘வயதான’ ஹீரோக்கள்

June 24, 2020
/   Cinema articles

அந்திமழையில் மார்ச் 2020 இதழுக்காக எழுதிய கட்டுரை இது. 50களுக்குப் பின்னரும் விடாப்பிடியாக ஹீரோக்களாக நடித்தவர்கள் பற்றியும், பின்னர் என்ன ஆனது என்பதைப் பற்றியும். ************************ ஜான் ட்ரவோல்டா, ஹாலிவுட்டில் மிக இளம் வயதிலேயே சூப்பர்ஸ்டார் ஆனவர்.  தனது 23 மற்றும் 24ம் வயதுகளில் அவர் நடித்த...

ஹாலிவுட் பேய்கள்

June 16, 2020
/   Cinema articles

  அந்திமழை February 2019 இதழில் ஹாலிவுட்டின் பேய்ப்படங்கள் பற்றி எழுதியது இங்கே. ****************** தற்காலத்தில் பேய்ப்படங்கள் எடுப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம். காரணம் மௌனப்படக் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பேய்ப்படங்கள் உலகெங்கும் வெளியாகிவிட்டன. அவற்றில் நாம் பார்க்காத பேயே இல்லை. பேய்பிடித்த காரில்...

இயக்குநர் மகேந்திரன் – தமிழ்த் திரைப்படங்களின் அதிசயம்

June 13, 2020
/   Cinema articles

சென்ற ஆண்டு, இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குப் பிறகு மின்னம்பலம் இணைய இதழில் எழுதப்பட்ட கட்டுரை இது. நம் தளம் பிரச்னைக்குள்ளாகி, அதன்பின் மீண்டதால் முதல் கட்டுரையாக இது இருந்தால் மகிழ்ச்சி என்பதால் இங்கே கொடுக்கிறேன். *********************தங்கப்பதக்கம் திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதுகிறார் இயக்குநர் மகேந்திரன். படம் பிரம்மாண்ட...

Yellowstone (Series) – Review

May 15, 2020
/   TV

காட்ஃபாதர் படத்தை அப்படியே கொண்டுவந்து தற்காலத்தில், அமெரிக்காவின் மாண்டானாவில் நடக்கும் ஒரு கதையாக மாற்றினால் எப்படி இருக்கும்? அதில் வரும் காட்ஃபாதர் டான் கார்லியோனி, அவரது மூத்த மகன் சான்னி கார்லியோனி, அவரது இரண்டாவது மகன் ஃப்ரெடோ கார்லியோனி, மூன்றாவது மகன் மைக்கேல் கார்லியோனி மற்றும் காட்ஃபாதரின்...

Psycho (2019) – Tamil

February 4, 2020
/   Cinema articles

தான் ஒரு ஆட்டெர் (உண்மையில் அவர் ஒரு flawed auteur தான்) என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை. தமிழின் குறிப்பிடத்தகுந்த...

Ishq (2019) – Malayalam

May 29, 2019
/   Malayalam

Trauma எனப்படும் பிரச்னைகளை நமது வாழ்க்கையில் சில தருணங்களில் நாம் சந்திக்கக்கூடும். மனதில் ஆழமான வடுவை உண்டாக்கி, வாழ்க்கை முழுதுமே அந்த சம்பவங்களை நினைத்தாலேயே உடலும் மனமும் நடுங்கக்கூடிய பிரச்னைகள். உதாரணமாக, நடுராத்திரி வண்டியில் நாம் செல்கையில், ஒரு கும்பல் நம்மை வழிமறித்துத் தாக்கினால்? அப்படித் தாக்கும்போது,...

Brightburn (2019) – English

May 28, 2019
/   English films

  வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்த ஒரு குழந்தை என்றால் அது எப்படி இருக்கும்? இதற்கு சூப்பர்மேன் சாட்சி. பெற்றோருக்கு அந்தக் குழந்தையின் சக்திகள் மெதுவாகத் தெரிய ஆரம்பிக்கும். அதை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் மெல்ல மெல்ல தன்னையே புரிந்துகொள்ள...

John Wick 3 – Parabellum (2019) – English

May 27, 2019
/   English films

ஜான் விக் முதல் இரண்டு பாகங்கள் பற்றி இங்கே படிக்கலாம். ஜான் விக் முதல் பாகம் வந்த காலகட்டத்தில், அப்படி ஒரு தரமான, வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கூடவே, படத்தை இயக்கியது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள். எனவே படம் பிரமாதமான...

Avengers: Infinity War (2018) – English : Part 2

May 2, 2018
/   English films

For all the previous posts about the Avengers & Marvel, please check here –> Everything about Avengers from Karundhel.com இக்கட்டுரையின் முதல்பாகம்  – Avengers: Infinity War – part 1 சென்ற கட்டுரையில் இன்ஃபினிடி ஸ்டோன்கள் பற்றிப் பார்த்தோம். இனி, Infinity...

கமல்ஹாஸன் – எதிர்வினைகள்

September 11, 2010
/   Copies

கமல்ஹாசன் : நிகழ மறுத்த அற்புதமா? என்ற எனது கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இந்தக் கட்டுரை, கமலின் சில படங்களைப் பற்றியும் அவற்றின் ஆங்கில மூலங்களைப் பற்றியும் அலசுகிறது. சென்ற பதிவில் கமல் அடித்த ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுதினாலும் எழுதினேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று...

கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்

October 27, 2010
/   Copies

கமல் காப்பியடித்த பட்டியலை ஏற்கனவே கொடுத்திருந்தேன் அல்லவா. இப்போது, சில ஆங்கில வீடியோக்களைக் கீழே கொடுக்கிறேன். கூடவே, கமல் காப்பியடித்த படத்தின் வீடியோவையும் கொடுக்கிறேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் – எந்த அளவு கமல் காப்பிகளை அடித்துத் தள்ளியிருக்கிறார் என்று. Moon Over Parador :...

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

September 5, 2010
/   Copies

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான். தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில...

எந்திரன் – எதிர்வினைகள்

October 7, 2010
/   Copies

சென்ற பதிவில் நான் எழுதிய எந்திரன் விமர்சனத்துக்கு, சில நண்பர்களிடம் இருந்து வந்துள்ள பின்னூட்டங்களுக்கு இங்கே பதில் கொடுத்துவிடலாம் என்பது எனது நோக்கம். படித்துப்பாருங்கள். நண்பர்கள் கருத்தைக் கேள்விகளாகக் கொடுத்துள்ளேன். 1. உலக சினிமா இயக்குநர்கள் போல் எந்திரன் படம் எடுத்தால், அதனைப் பார்க்க யாரும் இருக்கமாட்டார்கள்....

எந்திரன் (2010) – ஒரு துன்பியல் சம்பவம்

October 5, 2010
/   Copies

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஊடகத்தின் பக்கம் திரும்பினாலும், அங்கே எந்திரனைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தது எந்திரன் என்று சொன்னால், அது மிகையல்ல. முதலில், இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்து, பின் ஷா ருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவராலும்...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 2 – விக்ரம்

June 16, 2010
/   80s Tamil

இந்தப் பதிவிலும் என்னுடைய நாஸ்டால்ஜியா தொடர்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி. அதுவும்எண்பதுகளில் வெளிவந்தவை. ஆரம்பித்தபின், என்னால் அவைகளைப் பற்றிய எண்ணங்களைநிறுத்த முடியவில்லை. அப்படி நான் ரசித்துப் பார்த்த ஒரு படத்தைப் பற்றியே இந்தப் பதிவு. டிஸ்கி – இப்பதிவினால், நான் கமல்ஹாஸனின் விசிறி என்ற எண்ணம் உருவானால், அதற்கு நான்பொறுப்பல்ல. எனக்கு, எண்பதுகளின் கமல் தான் பிடிக்கும். ரஜினி போல் மசாலாப் படங்களில்நடித்து, ரஜினி கமல் இருவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவிய காலம் அது. மாவீரன்வெளிவந்தால், விக்ரம் அதே தீபாவளிக்கு வெளிவரும். பாண்டியன் வெளிவந்தால், தேவர் மகன்வெளிவரும். இப்படிப் பல படங்கள். அந்தக் கமல், இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதற்குப் பதில், ‘உலகநாயகன்’ என்று தன்னைத்தானே அழைக்கும் ஒரு நபர் தான் தெரிகிறார்.இப்பொழுது படங்களில் நடிக்கும் கமல், ’மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு’ – (நன்றி – வந்தார்கள் வென்றார்கள் மதன்). ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில்வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை. vikram . . . எண்பதுகளில் என் மனதைக் கவர்ந்த படம். விக்ரம் விசிறிகளிக்காகவே இந்தப் பதிவு. வெல். ஆண்டு 1986. கோவை. அப்ஸரா தியேட்டர். கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’

August 16, 2011
/   series

வெகுநாட்களாகவே, இந்த விஷயத்தைப் பற்றிப் பகிரவேண்டும் என்பது எனது ஆசையாகவே இருந்தது. ஆசை என்பதைவிட, ஆர்வம் என்று சொன்னால் சரியாக இருக்கும். திரைக்கதை எழுதுவது என்பது பொதுவாகவே ஒரு கடினமான வேலை. ஆகவே, திரைக்கதை என்றால் என்ன? அதன் உள்ளடக்கங்கள் என்னென்ன? திரைக்கதை வடிவம் என்பது எப்படி...

Interstellar (2014) – English: Analysis – part 1

November 9, 2014
/   English films

இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன்.  முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன்...

Bahubali: The Beginning (2015) – Tamil & Telugu

July 14, 2015
/   Tamil cinema

‘இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’...

Hitch (2005) – English

August 13, 2010
/   English films

படு சீரியஸான படங்களை இதுவரை பார்த்து வந்தோம். There is something about Mary படத்தைப் பற்றி எழுதியபோதே, இனி அவ்வப்போது ஜாலியான படங்களைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி, இதோ ஒரு பட்டையைக் கிளப்பும் படுஜாலியான படம். சற்றே யோசித்துப் பார்த்தால், நம்மில்...

ஆரண்ய காண்டம் (2010) – விமர்சனம்

June 15, 2011
/   Tamil cinema

தமிழ்ப்படங்களில் இதுவரை, பல பள்ளிகளை நாம் பார்த்து வந்திருக்கிறோம். படு சீரியஸான, அழுவாச்சிப் படங்கள் என்றால் அது பீம்சிங் பள்ளி. கொஞ்சம் நகைச்சுவை, சிறிது செண்டிமெண்ட், ரொமான்ஸ், கவர்ச்சி ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டுப் பரிமாறப்பட்டால், அது ஸ்ரீதர் பள்ளி (ஸ்ரீதரை, தமிழ்ப்படங்களில் ஒரு மைல்கல்...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 3 – காக்கிசட்டை

July 22, 2010
/   80s Tamil

ம்ம்ம்ம்… எண்பதுகளில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் – ஏன் – இப்போதுகூட – கொடிகட்டிப் பறக்கக்கூடிய ஒரு கூட்டணி…. வெல்.. சத்யராஜ் & கமல். இவர்கள் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனை படங்களிலும், நமக்கு வேண்டிய பொழுதுபோக்கு கிடைக்கும். சத்யராஜிடம் அத்தனை காட்சிகளிலும்...

A Serbian Film (2010)–Serbian

May 23, 2011
/   world cinema

நமது தளத்தில், இதுவரை பார்த்துவந்த படங்களுக்கு நேர் எதிரானதொரு படத்தை இப்போது நாம் பார்க்கப்போகிறோம். ‘நேர் எதிர்’ என்று நான் சொன்னதற்குக் காரணம், வழக்கமான மென்சோக உணர்வையோ, அல்லது நகைச்சுவை உணர்வையோ, அல்லது இவற்றைப் போன்ற உணர்வுகளையோ இப்படம் தராது. இப்படம் தரக்கூடிய உணர்வு, பயம் –...

Baahubali 2: The Conclusion (2017) – Tamil & Telugu

April 29, 2017
/   Tamil cinema

‘ஒரு மனிதன், பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள்...

Vikram Vedha (2017) – Tamil

July 24, 2017
/   Tamil cinema

விக்ரம் வேதா, நான் சற்றே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். ஏனெனில், ஓரம்போ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ‘வ குவார்ட்டர் கட்டிங்’, திரைப்படமா, ஸ்பூஃப் முயற்சியா என்ற குழப்பத்திலேயே எடுக்கப்பட்டிருந்ததால் அதை விட்டுவிடுவோம். மாதவன், விஜய் சேதுபதி என்ற ஹெவிவெய்ட்கள் இருந்ததால் படத்தை வெள்ளியன்றே பார்த்துவிட்டேன். பார்த்துவிட்டு,...

விண்ணைத் தாண்டி வருவாயா …

February 28, 2010
/   Romance

நான் இந்த வலைப்பூவில் ஆங்கிலத்தில் வந்துள்ள சில அருமையான காதல் படங்களுக்கு விமரிசனம் எழுதியுள்ளேன். அந்தப் படங்களைப் பார்க்கையில், மனம் முழுவதும் ஒரு அருமையான உணர்வு நிரம்பியிருக்கும். படத்தைப் பார்த்த பின்னரும் பல மணி நேரங்களுக்கு அந்த உணர்வு போகாது. படத்தின் பாடல்களே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். படத்தின்...

மதராசபட்டினம் (2010) – விமர்சனம்

July 13, 2010
/   Copies

படத்தைப் பற்றி எழுதுமுன், ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய, ‘யாமம்’ கதையைப் படித்தவர்களெல்லாம் கையைத் தூக்குங்கள் பார்ப்போம். இந்நாவல், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னையைப் பற்றிய அருமையான நாவலாகும். இக்கதையினை இரவில் படித்தால், கண் முன் பண்டைய கால சென்னை விரிவது...

உத்தம வில்லன் (2015) – Tamil

May 3, 2015
/   Tamil cinema

கட்டுரையில் சில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். இருப்பினும் படம் பார்க்க அவை தடையாக இருக்காது. எனது ‘விஸ்வரூபம்’ விமர்சனத்தின் ஆரம்ப சில வரிகள் இவை. இவற்றுக்கும் உத்தம வில்லனுக்கும் தொடர்பு உண்டு என்பதால் அவற்றை இங்கேயும் கொடுக்கிறேன்.   கதாநாயகன் அறிமுகமாகும் பாடல் என்ற ஒரு விஷயம் தமிழ்ப்படங்களில்...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – ஆச்சரியம்! – 1

June 10, 2010
/   80s Tamil

தமிழ்ப்படங்களைப் பற்றி இந்தத் தளத்தில் மிக அபூர்வமாகத்தான் எழுதியிருக்கிறேன். காரணம் – சலிப்பு. ’என்ன கொடும இது’ என்ற உணர்வு மேலோங்கியதே காரணம். இதற்கு சமீபத்திய உதாரணம் – சிங்கம். ஆரம்பித்த 43ம் நிமிடம் தியேட்டரை விட்டு வெளியே குடும்பத்துடன் வெளியேறினேன். எங்கள் எவருக்குமே படம் துளிக்கூட...

இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் உன்மத்தம்

April 5, 2012
/   Tamil cinema

எனக்கு ஒரு எண்ணம், கடந்த பல வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அதனை இப்போது முற்றிலுமாக confirm செய்து, உணர்ந்துகொண்டே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நான் எண்பதுகளின் திரைப்படங்களுக்கு – குறிப்பாக, சத்யராஜ், ரஜினி & கமல் நடித்தவை – ரசிகன் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல்,...

ப்ரமயுகம் வெளியாகி மலையாள பாக்ஸ் ஆஃபீசை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அட்டகாசமான விமர்சனங்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறது. படத்தை அனைவரும் கட்டாயம் திரையரங்குகளில்தான் பார்க்கவேண்டும் – இது OTT படம் இல்லை என்று படம் வந்த மறுநாள் பார்த்துவிட்டு எழுதியிருந்தேன். ப்ரமயுகம் எப்படி இத்தனை பெரிய வெற்றி அடைந்தது? எப்படி இந்தப் படம் மலையாள ஆடியன்சுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது? இது ஏன் மலையாளப் படங்களில் அவசியம் க்ளாசிக் என்ற இடத்தை அவசியம் அடையப்போகிறது? எப்படி விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபீசிலும் பிய்த்துக்கொண்டு ஓடுகிறது? இந்தக் கேள்விகளுக்கு மட்டும் இல்லாமல், ப்ரமயுகத்தில் சொல்லப்படும் கருத்துகள், அவைகளுக்கான பின்னணி என்ன? இன்னும் பல கேள்விகளுக்கு விடைகளை இந்தக் கட்டுரையில் கவனிக்கலாம்.

SPOILER ALERT – படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்படும் ஸ்பாய்லர்கள் உங்களை பாதிக்கலாம்.

முதலில், ப்ரமயுகத்தின் பின்னணி. தெற்கு மலபாரில் 17ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை இது. கேரளாவின் சரித்திரத்தில் இந்த நூற்றாண்டுக்கு ஒரு முக்கியமான பின்னணி உண்டு. இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பியர்கள் கேரளாவுக்குப் படையெடுத்தது நடந்தது. வாஸ்கோ ட காமா இதற்கு முன்னரே பதினைந்தாம் நூற்றாண்டில் கேரளா வந்திருந்ததால் அதன்பின் சிறுகச்சிறுக ஐரோப்பியர்கள் வரத்துவங்கி, 1601 முதல் 1699 வரையிலான வருடங்களில் ஏராளமான ஐரோப்பியர்கள் சாரிசாரியாகக் கேரளா வந்தடைந்தனர். இவர்களில் பிரிட்டிஷ்காரர்களும் உண்டு. (வாஸ்கோ ட காமா காலத்திலேயே போர்ச்சுக்கீசியர்கள் கோட்டைகள் எல்லாம் கேரளாவில் கட்டிவிட்டனர்). கேரளாவை ஐரோப்பியர்களின் கீழ் அடிமைப்படுத்தும் வேலை இப்படியாக இந்தப் பதினேழாம் நூற்றாண்டில்தான் பெரிதும் துவங்கியது. இந்த வேலைகள் பின்னணியில் நடந்துகொண்டிருக்கும்போதுதான் ப்ரமயுகத்தின் கதை நடக்கிறது. ப்ரமயுகம் என்றால் என்ன என்று படத்தில் ஒரு இடத்தில் மம்மூட்டி சொல்வார். அதை இந்தச் சம்பவங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

பிரமயுகத்தில் சொல்லப்படும் கதை என்ன?

மிக எளிமையான கதை. போர் நடப்பதால் அந்தப் போரில் இருந்து தப்பித்து ஆற்றின் அக்கரைக்கு சென்றுவிட்டால் உயிர்பிழைத்துவிடலாம் என்று ஓடிவரும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒருவனான பாணன் ஒருவன் (கோயிலில் கடவுள் முன்னர் பக்திப் பாடல் பாடுபவன்), வழிதவறி ஒரு பழைய கால மலையாள வீட்டுக்கு (மணா என்று மலையாளத்தில் சொல்லப்படும் தோட்டம் உள்ளடக்கிய பெரிய வீடு) வந்துவிடுகிறான். அந்த வீட்டின் எஜமானன் கொடுமோன் போட்டி என்ற உயர்சாதிக்காரன். அவனுடன் ஒரு சமையல்காரனும் வசித்துவருகிறான். பாணனைப் பாடச்சொல்லிக் கேட்கும் கொடுமோன் போட்டிக்கு பாணனைப் பிடித்துவிட, இனிமேல் தன்னுடன் தங்கலாம் என்று உத்தரவிடுகிறான். ஆனால் பாணன் அங்கிருந்து சொந்த ஊருக்குப் போய்த் தனது அம்மாவுடன் வாழவேண்டும் என்று நினைக்கிறான். இருந்தாலும் ஒரு பகடை விளையாட்டில் பாணனை ஏமாற்றி, அங்கேயே இருக்கவேண்டும் என்று மறுபடி உத்தரவு இட்டுவிடுகிறான் கொடுமோன் போட்டி. அதனைத் தாண்டி பாணனால் அங்கிருந்து செல்ல முடிவதில்லை. மெல்ல மெல்ல சமையல்காரன் மூலம் கொடுமோன் போட்டியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பாணன் இறுதியில் தப்பித்து வெளியேறினானா இல்லையா என்பதே ப்ரமயுகத்தின் கதை.

இந்தக் கதையை நாம் கவனித்தால், ஏற்கெனவே மம்மூட்டியின் மிகப்பெரிய வெற்றிப்படமான விதேயன் திரைப்படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதேதான் என்று புரியும். விதேயன் மற்றும் அதே கதையின் இன்னொரு வடிவமான பொந்தன் மாடா ஆகிய இரண்டு படங்களுக்காக அந்த வருடத்தின் தேசிய விருது மம்மூட்டிக்குக் கிடைத்தது. விதேயனில் வரும் பாஸ்கர பட்டேளர் என்ற கதாபாத்திரம் உயர்சாதித் திமிரை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடையும் வண்ணம் வெளிப்படுத்தும். அந்தக் கதை நடந்த காலகட்டத்தில் கேரளாவில் உயர்சாதியினர் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களைத் துன்புறுத்தி மிருகங்கள் போல நடத்தினார்கள் என்பது விதேயனில் முகத்தில் அறையும்படி அடூர் கோபாலகிருஷ்ணனால் சொல்லப்பட்டிருக்கும்.

இந்த விதேயனின் பாஸ்கர பட்டேளர் தான் ப்ரமயுகத்தின் கொடுமோன் போட்டி. உண்மையில் அதில் வரும் பாஸ்கர பட்டேளர் போலத்தான் ஒரு நாற்காலியில் எப்போதும் அமர்ந்துகொண்டும் உலவிக்கொண்டும் பல முடிவுகளை எடுக்கிறான். அதேபோல, விதேயனில் பாஸ்கர பட்டேளரின் விசுவாசமான வேலையாளான தொம்மிக்கு பாஸ்கர பட்டேளர் மீது அளவுகடந்த விசுவாசம். இருந்தாலும் பாஸ்கர பட்டேளர் செய்யும் வேலைகள் தொம்மிக்குப் பிடிப்பதே இல்லை. இருந்தும் பட்டேளரை விட்டுப் போகமுயாத சூழல் (உயிர் போய்விடும்). இதனாலேயே இறுதியில் பாஸ்கர பட்டேளர் இறந்ததும் அங்கிருந்து தப்பித்துக் காடுகளின் இடையே மகிழ்ச்சியாக, சுதந்திரமாக ஓடிவருவான். தொம்மிக்கும் ப்ரமயுகத்தின் பாணனுக்கும் என்ன வித்தியாசம்? ஆனால் ப்ரமயுகத்தில் விதேயனின் அடிப்படைக் கதையை எடுத்துக்கொண்டு அதற்கு தொன்மம் என்று இன்னொரு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். அது கட்டாயம் அவரது திறமைதான் என்பதில் சந்தேகம் இல்லை. சுருக்கமாக, விதேயன் இல்லாமல் ப்ரமயுகம் இல்லை.

ராகுல் சதாசிவனின் இதற்கு முந்தைய ‘பூதகாலம்’ இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அற்புதமான சைக்கலாஜிகல் திரில்லர் படங்களில் ஒன்று. அதில் வரும் அமானுஷ்ய அனுபவங்கள் கதாபாத்திரங்களுக்கு நடக்கிறதா அல்லது பிரதான கதாபாத்திரத்தின் மனப்பிரமையா என்பது ஆடியன்சுக்கு இறுதிவரை சுவாரஸ்யமாகவே சொல்லப்பட்டிருக்கும். அதில் சைக்கலாஜிகல் திரில்லர் எடுத்த ராகுல் சதாசிவன் இந்தமுறை பிரமயுகத்தில் வெளிப்படையான ஹாரர் படம் எடுத்திருக்கிறார்.

கேரளாவில் பழைய புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் ஒரு பெரிய வீடு சார்ந்த பேய்க்கதைகள் மிக அதிகம். அதேபோல் ஏற்றுமானூர் சிவகுமார் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய தொன்மம் சார்ந்த பேய்க்கதைகளும் அதிகம். ‘சுருளி’ படத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி எடுத்துக்கொண்ட களம் போன்றதுதான் ப்ரமயுகம். சுருளியில் வரும் இருவர் யார்? போலீஸ்காரர்கள் என்று சொல்லப்பட்டாலும் அதில் இறுதிவரை இருவரைச் சார்ந்த மர்மங்கள் பல காட்சிகளில் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும். அந்த கிராமத்தில் இருக்கும் மனிதர்களுக்கு ஏன் நினைவுசக்தி இல்லாமல் இருக்கிறது? அதேபோல் ப்ரமயுகத்தில் ஒரு கட்டத்துக்குப் பின்னர் பாணனுக்குத் தான் யார், தனது அம்மா பெயர் என்ன என்பதெல்லாமே எப்படி மறக்கிறது? இளைஞனாக வரும் பாணன் படத்தின் இறுதியில் நடுத்தர வயதான ஆளாக எப்படி மாறினான்? அப்படி எத்தனை நாட்கள் அந்த மனையின் உள்ளே இருந்தான்? சுருளியில் படத்தின் துவக்கத்தில் வரும் திருடன் பற்றிய கதை எதை உணர்த்துகிறது?

புதையலைக் காப்பாற்றும் பூதம் என்று ஒரு சொல்லாடல் இருக்கிறது அல்லவா? Tumbbad படத்தில் இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு ஒரு கதை வரும். அதேபோன்ற ஒரு கருத்தை வைத்துக்கொண்டுதான் ப்ரமயுகம் எடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரமயுகத்தின் ஒரு காட்சியில் ‘இந்த வீட்டின் எஜமானன் மட்டுமல்ல; இந்த வீட்டின் அடிமையும் கொடுமோன் போட்டிதான்’ என்று சமையல்காரன் சொல்வதாக ஒரு வசனம் வரும். அது ஏன் என்று படத்தில் கொடுமோன் போட்டிக்குப் பின்னான கதை வெளியாகும்போது நமக்குப் புரியும்.

கொடுமோன் போட்டி அமர்ந்துகொண்டிருக்கும் அந்த வீடு எப்படிப்பட்டது? மிகப் பழையதாக மாறி, வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் எல்லாமே மக்கிப்போய், அந்த வீட்டுக்குள் ஒருவேளை நாம் நுழைந்திருந்தால் அருவருப்பில் மயங்கி விழுந்திருப்போம் என்று சொல்லக்கூடிய வகையில்தான் இருக்கிறது. சரியாகப் பராமரிக்கப்படாமல் ஒருவித அசூயை உணர்வையே ஏற்படுத்தும் வீடு அது. அதில் இருக்கும் சமையல்கூடமும் அப்படியேதான் இருக்கிறது. அங்கே சமையல்காரன் சமைக்கையிலும் சரி, உணவை கொடுமோன் போட்டியும் பாணனும் உண்ணும்போதும் சரி, பார்க்கும் நமக்கு அருவருப்பைக் கடத்தும்வகையில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கொடுமோன் போட்டிக்கான மாமிச உணவு. இதற்கெல்லாம் காரணம் கொடுமோன் போட்டியாக இருக்கும் சாத்தன் என்பது அந்தக் கதை வெளிப்படும்போது புரிகிறது.

அதர்வண வேதத்தில் கரைகடந்த கொடுமோன் போட்டியின் வம்சத்தில் மூதாதையர் ஒருவர், வாராஹி என்ற துர்மாந்திரீகம் சார்ந்த கடவுளை வழிபட்டு ஒரு வரம் பெறுகிறார். அவரிடம் ஒரு பெட்டி வாராஹியால் அளிக்கப்படுகிறது. அதில் இருப்பது சாத்தன். அந்த சாத்தனை அடிமைப்படுத்தினால் என்ன வேண்டுமானாலும் சாத்தனின் மூலம் அடையமுடியும் என்பது கதை. அந்த சாத்தன், தன்னைக் கொடுமைப்படுத்திய மூதாதையரை வஞ்சித்து, ஏமாற்றிக் கொல்கிறது. அந்தப் பரம்பரையையே கொன்றுவிடுகிறது. அதன்பின் கொடுமோன் போட்டியின் வடிவம் எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறது. அந்தக் கொடுமோன் போட்டியின் வம்சத்தைச் சேர்ந்த, வேலைக்காரிக்கும் கொடுமோன் போட்டிக்கும் பிறந்த illegitimate மகன் கொடுமோன் போட்டியின் வடிவில் இருக்கும் சாத்தனுடன் சமையல்காரனைப் போல நடித்துக்கொண்டு, தக்க சமயம் வரும்போது அவனை அடிமைப்படுத்துவதற்காகவே அந்த வீட்டில் பல வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறான். சாத்தனுக்கு அவனது அடையாளம் புரியவில்லை. காரணம் நம்பூதிரிகளான கொடுமோன் போட்டியையும் அவனது மூதாதையர்களையும் அழித்த சாத்தன், முறைதவறிப் பிறந்த குழந்தையை மனிதனாகவே மதிக்கவில்லை. அந்தப் பக்கமே அதன் கவனம் செல்லாததால் சமையல்காரன் யார் என்றும் சாத்தனுக்குப் புரிவதில்லை. இது எல்லாமே அங்கே நிஜமாக நடந்த அநியாயங்களின் இன்னொரு வடிவமே.

உங்களது உண்மையான வடிவத்தைப் பார்க்கவேண்டும் என்று பாணன் சொல்கையில் கொடுமோன் போட்டியாகிய சாத்தன், அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று சொல்லிச் சிரிக்கிறது. படத்தின் துவக்கத்தில் இருந்தே காலம் என்ற இந்தக் கருத்து பரவலாகவே பேசப்படுகிறது. எத்தனையோ ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்து, பின்னர் அத்தனை குடும்பத்தினர்களையும் அவர்களின் வாரிசுகளையும் அழித்த சாத்தனுக்குத்தான் காலம் என்பதன் பொருள் புரியும். அந்த விலைமதிப்பில்லாத காலத்தை நீ எனக்குக் கொடு என்று சொல்லியே பாணனை அது அடிமைப்படுத்துகிறது. அதேபோல் பிராமணன் என்பவன் பிறப்பால் இல்லை; செய்யும் கர்மா என்ற தொழிலால்தான் அறியப்படுகிறான் என்றெல்லாம் கொடுமோன் போட்டியாகிய சாத்தன் சொல்வது மிகப்பெரிய வஞ்சனையின் வடிவம்தான். காரணம் கேரளாவில் அக்காலத்தில் உயர்சாதியினர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. ஒரு நம்பூதிரியாகவே தன்னை உருமாற்ற்றிகொண்டு அமர்ந்திருக்கும் சாத்தன் இப்படிச் சொல்லியே முதலில் பாணனை உள்ளே இழுக்கிறது. பின்னர் வழக்கப்படியே அடிமைப்படுத்துகிறது.

அதேபோல், படத்தின் துவக்கத்தில் இரண்டு பேராக அறிமுகம் ஆகையில் அதில் ஒருவனை ஒரு யட்சியை வைத்துக் கொன்றுவிட்டு, தனியாளாக மாட்டிக்கொண்ட பாணனைத் தன்னிடம் வரவைத்து ஒரு சிலந்தி, தனது வலையில் சிக்கிய பூச்சியை எப்படியெல்லாம் துன்புறுத்துகிறதோ அப்படித் துன்புறுத்தி இன்பம் அடைகிறது கொடுமோன் போட்டியாகிய சாத்தன். ஒரு காட்சியில், படத்தின் துவக்கத்தில், அலைந்து திரிந்துகொண்டிருந்த பாணனுக்கு இருப்பிடம் கொடுத்து உணவும் கொடுத்த கொடுமோன் போட்டியிடம் பாணன் வந்துசேர்ந்தது கடவுளின் சித்தம் என்று பாணன் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல, ‘கடவுளா? நான் தானே உனக்கு உணவு கொடுத்தது? கடவுள் என்ன செய்தான்?” என்று உடனே கொடுமோன் போட்டி சொல்லும் காட்சி, பாணனைப் பற்றிய பின்னணி விபரங்களையெல்லாம் நேரில் பார்த்ததுபோலக் கொடுமோன் போட்டி சொல்வது, பின்னர் பாணனின் தாயாரிடம் சென்று சேரவேண்டும் என்ற பாணனின் ஆசை பற்றிச் சொல்வது என்பதெல்லாமே பின்னால் வரக்கூடிய சாத்தன் பற்றிய foreshadowing என்பது போகப்போகப் புரியும். வீட்டிலேயே எப்படிப் பாணன் அடைபட்டுக்கிடக்கிறானோ அப்படி சாத்தனும் அங்கேயேதான் அடைபட்டிருக்கிறது. எனவே அளவிடமுடியாத காலம் அதன் கையில் இருக்கிறது. அந்தக் காலத்தை வைத்துக்கொண்டு பிறரைத் தன்னுடைய இஷ்டத்துக்கு ஆட்டுவித்து மகிழ்கிறது.

தனது ஆணையை மீறி வெளியேற நினைக்கும் பாணனிடம், ‘இந்த மழையை மீறி எப்படிச் செல்வாய்?’ என்று கொடுமோன் போட்டி கேட்ட தருணத்தில் இருந்து பல நிமிடங்களுக்கு மழை கொட்டிக்கொண்டே இருக்கிறது. அப்போது ‘இந்த மழை சில நாட்கள் நீடிக்குமா, மாதங்களா அல்லது வருடங்களா என்பது தெரியாது. சென்றமுறை மூன்று வருடங்கள் விடாமல் பெய்தது’ என்று குரூரமாக சிரித்துக்கொண்டே கொடுமோன் போட்டி சாதாரணமாகச் சொல்வதெல்லாம் இந்தப் படத்தில் துவக்கத்தில் இருந்தே வரும் ‘காலம்’ என்பதன் நீட்சிதான். இந்த வீட்டுக்குள் வந்துவிட்டால் காலம் என்பது எப்படியெல்லாமோ வேலை செய்கிறது. பாணனுக்கு திடீரென்று வயதாகிறது. அதுவே கொடுமோன் போட்டி, க்ளைமாக்சில் வடக்கன் வீரகதா போன்ற உண்மையான கொடுமோன் போட்டியின் தோற்றத்தில் இளமையாக வருகிறார்.

தும்பாட் படத்தைப் போலவே ப்ரமயுகத்தின் இறுதியிலும் ஒரு நீதி சொல்லப்படுகிறது. இரண்டு வகையாக அதைப் புரிந்துகொள்ளமுடியும். ‘சாத்தனிடம் இருந்து நீ சக்தியை எடுத்துக்கொண்டால் எங்களைப் போன்றவர்கள் இறந்துவிடுவார்கள். வேண்டாம்’ என்று பாணன் சமையல்காரனிடம் இறைஞ்சுவது ஏற்கனவே கேரள சரித்திரத்தில் நடந்த பெரும் பிரச்னைகளை நினைவுபடுத்தாமல் இருக்காது. அதனுடன் சேர்ந்து, தீமை என்பது அழியாது; வேறு வடிவம் வேண்டுமானால் எடுக்கும் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

எப்படி Nosferatu, Dracula போன்ற கதைகளில் மிகப்பெரிய வீட்டுக்குள் இருக்கும் எஜமானன் ஒருவன் தனது வீட்டுக்குத் தான் யாரென்று தெரியாமல் வரும் ஒரு அப்பாவியை அடிமைப்படுத்தும் கதை வருமோ அப்படியே அதே வகையைச் சேர்ந்த ப்ரமயுகமும் ஒரு க்ளாசிக் கதையைக் கையாண்டிருக்கிறது. கூடவே இன்செப்ஷன் படத்தை நினைவுபடுத்தும் காட்சி ஒன்றும் படத்தில் உண்டு. அதேசமயம் எடுத்துக்கொண்ட கரு, இதேபோன்ற இன்னொரு கறுப்பு வெள்ளைப் படமான Lighthouse படத்தை லேசாக நினைவுபடுத்தும். சரித்திர காலத்தில் நடக்கும் கதை என்பதால்தான் கறுப்பு வெள்ளை என்பதில் உறுதியாக இருந்ததாக இயகுநர் ராகுல் சதாசிவன் சொல்லியிருக்கிறார். Raging Bull எப்படிக் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டதோ அப்படி.

சந்தோஷ் சிவன் மலையாளத்தில் ’அனந்தபத்ரம்’ என்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்திலும் தொன்மம் சார்ந்த ஒரு திகில் கதைதான் மையம். அது ஒரு நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட படம். இதேபோல் ஜி அரவிந்தன் எடுத்த ‘கும்மாட்டி’ திரைப்படமும் தொன்மம் சார்ந்த கதையே. ஆனால் அனந்தபத்ரம் நேரடியான திகில் படமாக இருக்க, கும்மாட்டி மிக இயல்பான, எளிமையான கதையாக இருக்கும். இதெல்லாம் நான் சொல்வதன் காரணம், மலையாளத்தில் தங்களின் வேர்களை விடாமல் படம் எடுத்துக்கொண்டே இருப்பதே. ஒவ்வொரு கதையும் வித்தியாசமாகவே இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேல், திரைக்கதை சார்ந்து, ப்ளேக் ஸ்னைடர் தனது Save the Cat (திரைக்கதை என்னும் பூனை) புத்தகத்தில், மொத்தமாகப் பத்து வகைகளுக்குள் உலகின் அத்தனை படங்களயும் பிரித்துவிடலாம் என்று சொல்லி உதாரணங்கள் கொடுத்திருப்பார். அதில் Monster in the House என்பது முக்கியமான ஒரு வகை. அந்த வகையின் கீழ் கச்சிதமாகப் பொருந்தும் படமாகவும் ப்ரமயுகம் இருக்கிறது.

படத்தில் குறைகள் இல்லையா? அவசியம் உள்ளன. க்ளைமேக்ஸ் காட்சிகளில் லேசான செயற்கைத்தன்மை இருந்தது. படத்தில் யட்சி என்று ஒரு கதாபாத்திரம் எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் வருகிறது. சமையல்காரனுக்குப் பெரிய பின்னணி இல்லை. திடீரென்று கொடுமோன் போட்டியின் மகன் என்று அவன் சொல்லிக்கொள்ளும்போது முன்னாலேயே எதாவது foreshadowing செய்திருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் இவையெல்லாமே சிறிய குறைகள்தான். படம் பார்க்கும் அனுபவத்தை இவை பாதிக்கவில்லை.

தற்காலத்தில் வந்திருக்கும் மிக அருமையான படமாக ப்ரமயுகம் மாறியிருக்கிறது. கேரளாவில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவசியம் இது ஒரு முக்கியமான படமும் கூட. படத்தைப் பாருங்கள். அது உங்களுக்குப் பிடிக்காமல் ஒருவேளை போனாலும் பார்க்காமல் இருக்கவேண்டாம். ஆங்கிலத்தில் Mike Flanagan எப்படி ஹாரரில் முக்கியமான ஒரு இயக்குநராகத் திகழ்கிறாரோ, அப்படி அந்தப் பாதையில் ராகுல் சதாசிவன் செல்லத் துவங்கியிருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

பி.கு – Jump Scareகளை எதிர்பார்த்து இந்தப் படத்துக்குச் செல்லவேண்டாம். இது அப்படிப்பட்ட படம் இல்லை.