Swades (2004) – Hindi

by Karundhel Rajesh May 18, 2012   Hindi Reviews

Hesitating to act because the whole vision might not be achieved, or because others do not yet share it, is an attitude that only hinders progress.

காந்தியின் வார்த்தைகள் இவை. ’பிறரால் இன்னமும் யோசிக்கப்படவில்லை என்பதாலோ, அல்லது இன்னமும் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதாலோ ஒரு விஷயத்தில் செயல்பட மறுப்பது, முன்னேற்றத்தைத் தடையே செய்யும்’ என்னும் இந்த வாக்கியத்தோடுதான் ஸ்வதேஸ் ஆரம்பிக்கிறது.

இப்படத்தைப் போன்ற ஒரு படத்தை நான் இந்திய மொழிகளில் இதுவரை பார்த்ததில்லை என்றே சொல்லலாம். எனது கல்லூரியை முடித்த வருடத்தின் மறு வருடத்தில் வெளியான இப்படத்தைப் பார்க்கும் எண்ணமே அப்போது எனக்கு இல்லை. இருந்தாலும், எனது நெருங்கிய நண்பனான பாலு என்னை இழுத்துச் சென்றதாலேயே இப்படத்தைக் கோவை அப்ஸராவில் பார்த்தேன். இப்படத்தைப் பார்க்குமுன்னர் இருந்த ’நான்’ வேறு. இப்படம் பார்த்தபின்னர் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கும் ’நான்’ வேறு என்று தயக்கமே இல்லாமல் என்னால் சொல்ல முடியும். இதற்குக் காரணம், ரசனை என்ற ஒரு அழகிய உணர்வை என் மனதில் விதைத்தது இந்தப் படம்தான். இப்படம் பார்க்குமுன்னர், வாழ்க்கையின் அழகிய தருணங்கள், அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து வெளிப்படும் சிறிய, ஆனால் அளவில் பெரிய அன்புணர்ச்சி, காதல், கனிவு ஆகிய எந்த உணர்ச்சிகளும் இல்லாமல், ஒரு சாடிஸ்டாக வாழ்ந்துவந்த என் மனதின் கதவுகளை படீரென்று திறந்தது இந்தப் படமே. படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என் மனதில் நிரந்தரமாக இறங்கிய மாறுதலை மிகத்தெளிவாக என்னால் உணரமுடிந்தது. திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, முகமெல்லாம் பூரிப்புடன் வந்த எனது ரியாக்‌ஷன் இன்னமும் நினைவிருக்கிறது. நீண்ட வருடங்களாக, எழுதியே ஆகவேண்டும் என்று நான் நினைத்த படம் இது.

இப்படத்தில் காண்பிக்கப்படும் தேசிய உணர்ச்சி, தியாகம் போன்ற எதுவும் அதற்குக் காரணமில்லை. ரஹ்மானின் அருமையான இசையும், அஷுதோஷ் கோவாரிகர் என்ற இயக்குநரின் திரைக்கதையும் மட்டுமே அதற்குக் காரணம். திரைக்கதையில் கொப்பளிக்கும் இனிமை, மகிழ்ச்சி, அன்பு ஆகிய உணர்வுகளின் வெளிப்பாடு, இந்த உணர்வுகளை வெளிக்கொணரும் அருமையான இசை ஆகியவை மட்டுமே காரணம். அந்த உணர்வுகள் நிரந்தரமாக என்னுள் தங்கிவிட்டன.

அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்?


மோஹன் பார்கவ் என்ற இளைஞன். நாஸாவில் பணிபுரிகிறான். அவன் ஈடுபட்டுள்ள ப்ராஜெக்ட்டின் பெயர் – ‘Global Precipitation Measurement‘. உலகின் வளிமண்டலத்தின் ஈர அளவை அப்பப்போது அளப்பதே இந்த ப்ராஜெக்டின் வேலை.

அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமான நாஸா வேலையில் இருந்தாலும், பல நாட்களாக அவனது மனதில் முளைவிட்டுக்கொண்டிருந்த ஏக்கம், அவனது தந்தை தாயாரின் நினைவுதினத்தில் (இவனது இரண்டாவது வயதில் விபத்தில் இறந்திருக்கின்றனர் இருவரும்) முழுதாக வெளிவருகிறது. அவனை இந்தியாவில் இரண்டு வயதிலிருந்து வளர்த்த ’காவேரியம்மா’ என்ற பாட்டியின் நினைவில் தவிக்கிறான் பார்கவ். வேலை முக்கியமில்லை; இந்தியா சென்று காவேரியம்மாவை அமெரிக்கா கூட்டிவந்து, தன்னை வளர்த்த பாட்டியை நன்றாகப் பார்த்துக்கொள்வதே பதிலுக்கு செய்யவேண்டிய நன்றி என்ற எண்ணம் அவனது மனதில் வலுப்பட்டுவிடுகிறது. இந்த எண்ணத்தை அவனால் உதற முடிவதில்லை. ஆகவே, பனிரண்டு வருடங்கள் கழித்து, மீண்டும் தில்லி செல்வது என்ற முடிவுக்கு வருகிறான். நாஸாவில் இரண்டு வார விடுமுறை கிடைக்கிறது. திரை இருள, படத்தின் டைட்டில். அட்டகாசமான ரஹ்மானின் பின்னணி இசையுடன். இந்த இசை, பல மாதங்களுக்கு என் செல்ஃபோனில் வீட்டின் நம்பரின் ரிங்டோனாக இருந்தது.

தில்லி. நண்பனுடன் காவேரியம்மா கடைசியாகத் தங்கியிருந்த காந்தி ஆஸ்ரமத்துக்குச் செல்கிறான் மோஹன். ஆனால், பல வருடங்களுக்கு முன்னரே, ஒரு பெண் அங்கே வந்து காவேரியம்மாவைத் தன்னுடனே அழைத்துச்சென்றுவிட்டதாக அவனுக்குத் தகவல் கிடைக்கிறது. காவேரியம்மாவின் கூடவே தங்கியிருந்த பார்தி என்ற பாட்டி, ‘சரண்பூர்’ என்ற கிராமத்துக்கு காவேரியம்மா சென்றுவிட்டதாகத் தெரிவிக்கிறார். அங்கிருந்து மோஹன் கிளம்பும் சமயம், பின்னணியில் பார்தி பாட்டியின் நடுங்கும் குரல் கேட்கிறது –

காவேரியம்மா அதிருஷ்டக்காரி. அப்போதும் அவளை அழைத்துச்செல்ல ஆள் இருந்தது; இதோ இப்போதும் யாரோ அவளைத்தேடி வந்திருக்கிறார்கள். என்னைப்போன்ற கிழவிகள் பாவம் செய்தவர்கள். எங்களைத்தேடி யாரும் வருவதில்லை’.

விக்கித்துப்போய் நிற்கிறான் மோஹன். அவனது நண்பன் அவனை அங்கிருந்து அழைத்துச்செல்கிறான்.


புத்தகக்கடை. சரண்பூர் கிராமத்தை மேப்பில் தேடிக்கொண்டிருக்கிறான் மோஹன். அப்போது அவனது காதில் விழுகிறது ஆத்திரமான குரல் ஒன்று. ‘அறிவில்லை? கீழே கிடக்கும் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருக்கையில், அப்படியே அதன்மேல் நடக்கிறீர்களே’. ஒரு பெண்ணின் குரல். இயற்கையாகவே அந்தப் பக்கம் பார்க்கிறான் மோஹன். மென்மையான பெண். இனிய குரல். பார்த்ததும் காதல் எல்லாம் இல்லை. ஆனால், அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவனது உள்ளத்தில் எழுகிறது. கடை நண்பனின் கடையாதலால், கௌண்ட்டரில் அமர்ந்துகொண்டிருக்கிறான் மோஹன். அங்கே, எக்கச்சக்கமான பாடபுத்தகங்களை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் வருகிறாள். புத்தகங்களுக்கு பில் போட ஆரம்பிக்கிறான் மோஹன். ஒவ்வொரு புத்தகத்தின் விலையையும் அவன் கால்குலேட்டரில் அழுத்துவதற்கு முன்னரே, சரியாக அத்தனை விலையையும் சொல்கிறாள் அப்பெண்.

அப்போது இயல்பாக, தனது பெயர் மோஹன் என்றும், சரண்பூர் கிராமத்தைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் அவன் சொல்ல, அந்தப் பெண்ணின் முகம் இருள்கிறது. கிராமத்துக்கு அவசரமாக வழி சொல்லிவிட்டு, சிக்கறையைக்கூட வாங்காமல் அங்கிருந்து சென்றுவிடுகிறாள் (இந்த முழு ஸீக்வென்ஸிலும் வரும் பின்னணி இசையை கவனியுங்கள். ரஹ்மான், ரீரிக்கார்டிங் மன்னன் என்பது புரியும்).


கேரவேன் ஒன்றை அமர்த்தும் மோஹன், அப்பெண் சொல்லிய வழியில் பயணிக்க ஆரம்பிக்கிறான். முஹம்மது ரஃபியின் இனிய பாடல்களின் துணையுடன். வழி தவறுகிறது. காட்டிலிருந்து நடந்துவரும் ஒரு பரதேசியிடம் வழி கேட்கிறான். வண்டியில் ஏறி அமர்கிறான் பரதேசி.

ஆரம்பிக்கிறது படத்தின் முதல் பாடல். Wat a song !

சரண்பூர். மிகச்சிறிய கிராமம். அங்கிருக்கும் பெட்டிக்கடையில் காவேரியம்மாவின் வீட்டுக்கு வழிகேட்கிறான் மோஹன். அங்கிருந்து ஒரு சிறுவன் வண்டிக்கு முன்னர் ஓடிவந்து வழிசொல்கிறான்.

வீட்டுக்கு வெளியே குழப்பத்துடன் வரும் காவேரியம்மாவின் கண்களை, பின்னாலிருந்து மூடுகிறான் மோஹன். பனிரண்டு வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கின்றனர்.

மோஹனின் சிறுவயது தோழியான கீதா என்ற பெண்ணின் வீடுதான் இது என்று மோஹன் தெரிந்துகொள்கிறான். கீதாதான் காவேரியம்மாவை அழைத்துக்கொண்டுவந்திருக்கிறாள். மோஹன் காவேரியம்மாவை மறந்துவிட்டதாகவும், இனிமேல் அவளைப் பார்க்க வரமாட்டான் என்றும் அடிக்கடி சொல்லியும் வந்திருக்கிறாள்.

சிறுவயதில் கீதாவை ‘கித்லி’ என்றுதான் கிண்டல் செய்வான் மோஹன். ஆகவே, மிகச்சிறுவயதில் தோழியாக இருந்த பெண்ணைப் பார்க்கும் ஆர்வமும் அவனுள் சேர்ந்துகொள்கிறது. ஊரின் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள் ‘கித்லி’ என்பதைத் தெரிந்துகொள்ளும் மோஹன், எப்படியும் அவள் கண்ணாடி அணிந்து, பிரம்பை வைத்துக்கொண்டு, அனைவரையும் அடிக்கும் ஆசிரியராகவே இருப்பாள் என்று கற்பனை செய்துகொண்டு, பள்ளிக்குச் செல்கிறான். வழியில் படு சுவாரஸ்யமான மனிதர் ஒருவரைச் சந்திக்கிறான். அவர்தான் அந்த ஊரின் போஸ்ட்மாஸ்டர். பயில்வான் சங்கத்தின் தலைவரும் கூட.

பள்ளி. கித்லியின் குரல் மோஹனின் காதுகளை நிறைக்கிறது. ‘மே ச்சல்த்தா ஹூ(ன்)’ என்ற அவளது குரல். அக்குரலை வழிமொழியும் பல குழந்தைகளின் குரல்.

அதே பெண். புத்தகக் கடையில் பார்த்த அதே பெண்! மோஹனின் மனமெங்கும் சந்தோஷம். அவளிடம் பேசுகிறான் மோஹன். தயக்கத்துடன் பேசும் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு வீடு வருகிறான்.

மெல்ல மெல்ல அந்த கிராமத்தில் வாழப் பழகிக்கொள்கிறான் மோஹன். கீதாவின் வீட்டில் பகலிலும், கேரவேனில் இரவிலும். அந்த ஊரின் பெரிய பிரச்னை, மின்சாரம் இல்லாதது. மின்சாரத்தை நம்பும் பல தொழில்கள் மெல்ல நசித்து வருகின்றன. பஞ்சாயத்து நாட்டாமைகளிடம் பேசுகிறான் மோஹன்.

அன்றைய தினம், தூங்கிக்கொண்டிருக்கும் மோஹனை அவசரமாக எழுப்புகிறாள் காவேரியம்மா. கீதாவைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்பதே காரணம். மோஹன் அதிர்ச்சியடைகிறான். பெண் பார்க்க வருபவர்கள், கீதாவைப் பணிபுரியக்கூடாது என்று சொல்வதால், அந்த சம்மந்தம் முறிகிறது. ஆனந்தத்தில் நடனமே ஆடுகிறான் மோஹன் (ரகசியமாகத்தான்). ரஹ்மானின் பின்னணி இசை மறுபடியும் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறது.

கிராமத்தில் பல சிறுவர்கள் பள்ளி செல்வதில்லை. குறிப்பாக, பெண் பிள்ளைகள். அந்த ஊரில், ஹைஸ்கூலும் இல்லை. ஆகவே, போஸ்ட்மாஸ்டரை மூளைச்சலவை செய்து, தனக்கு சப்போர்ட் செய்ய வைக்கிறான் மோஹன். கூடவே, ’மேலாராம்’ என்ற இன்னொரு நண்பன். இந்த மனிதனின் குறியே, அமெரிக்கா சென்று ஒரு தாபா ஆரம்பிக்கவேண்டும் என்பதே. ஆக, இந்த மூவரின் வேலையும், கிராமத்தில் உள்ள அத்தனை பேரையும் சென்று சந்தித்து, அவர்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவேண்டிய அவசியத்தை உணர்த்துவதே. ஆரம்பிக்கிறார்கள் முயற்சியை.

ஆனால், கிராமத்தின் பெரிய பிரச்னை, மேல்ஜாதி – கீழ்ஜாதி வேறுபாடு. குறிப்பாக, மேலாராம் ஒரு தலித். ஆகையால், அவனுடன் சேர்ந்து சுற்றக்கூடாது என்று மோஹனுக்குத் தடை விதிக்கிறது பஞ்சாயத்து. இருந்தாலும் ஒவ்வொருவராக சென்று சந்திக்கிறான் மோஹன். இரண்டு நண்பர்களின் துணையுடன்.
ஊரில் மாதாந்திர சினிமா திரையிடல் நடக்கிறது. மைதானத்தில் பழைய படுதா அமைத்து, ‘யாதோங்கி பாராத்’ (தமிழில் பல்லாண்டு வாழ்க என்று வெளியான படம் – திருத்தம் – 22 may 2012  – அது நாளை நமதே. பல்லாண்டு வாழ்க என்பது தோ ஆங்கேன் பாரா ஹாத் என்ற படத்தின் ரீமேக்) படத்தைத் திரையிடுகிறார்கள். (அமீர்கானின் முதல் படமும் கூட. குழந்தை நடிகராக). வழக்கப்படி பாதியில் மின்சாரம் நிற்கிறது. இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் பள்ளிக்கல்வியின் அவசியத்தை எடுத்துச்சொல்கிறான் மோஹன். படத்தின் இரண்டாவது அருமையான பாடல்.

அங்கே, ஒரு உணர்ச்சிமயமான சந்தர்ப்பத்தில் கீதாவோடு தனிமையில் உரையாடும் வாய்ப்பு மோஹனுக்கு வாய்க்கிறது. காவேரியம்மாவை தயவுசெய்து அமெரிக்கா அழைத்துச் சென்றுவிடவேண்டாம் என்று மன்றாடுகிறாள் கீதா. அவளது கண்ணீரை முதல்முறையாக உணர்கிறான் மோஹன்.

பக்கத்து கிராமத்தில், கீதாவின் பாரம்பரிய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் மனிதர், இதுவரை பணம் தரவில்லை என்பதால், மோஹனை அங்கே சென்று பணம் வசூலித்துவரச் சொல்கிறாள் காவேரியம்மா. இந்தப் பயணம்தான் மோஹனின் ஒட்டுமொத்த மனதையும் இந்தியாவின் பக்கம் திருப்புகிறது. இந்தியாவின் ஏழ்மை, படிப்பின்மை, குழந்தைத் தொழிலாளர்கள், வறுமை ஆகியவற்றை உணர்ந்து மனம் கிழிபடுகிறான் மோஹன். இந்த கிராமத்துக்கு எதாவது செய்யவேண்டும் என்று ஒரு உறுதி அவன் மனதில் எழுகிறது. தன்னிடம் பிரியாவிடை பெற்றுச்செல்லும் மோஹனைப் பார்த்தபடியே நிற்கிறாள் கீதா. படத்தின் மூன்றாவது மென்மையான பாடல்.

இதன்பின் மோஹன் என்ன செய்கிறான் என்பதே படம்.

இப்படத்தின் பொதுவான செய்தி – யாராக இருந்தாலும், முயன்றால் முடியாதது இல்லை என்பதே. ஆனால், அதையெல்லாம் விட, இப்படத்தின் ரொமாண்டிக் காட்சிகள் – ஷா ருக் கானுக்கும் கீதாவாக நடித்திருக்கும் காயத்ரி ஜோஷிக்கும் இடையே எழுதப்பட்டிருக்கும் மிக இயல்பான, மென்மையான, அழகான காட்சிகளே என்னைக் கவர்ந்தன. படத்தின் பல தருணங்களில் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் உண்டு. இருவரின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக, காயத்ரி ஜோஷி. படத்தைப் பார்க்கும் நண்பர்கள், இக்காட்சிகளைத் தவறவிட வேண்டாம்.

படத்தின் மற்ற பாடல்கள் இங்கே.

Ahista Ahista (deleted song) – ரஹ்மானின் இசையிலேயே, பின்னணி இசை இல்லாமல் வெறும் பாடல் மட்டும் ஒலிக்கும் மிகச்சில பாடல்களில் இதுவும் ஒன்று. இரவில் இப்பாடலைக் கேட்கவேண்டும். அவ்வளவு அழகாக இருக்கும்.

Dekho Na – ’பாபா இச்சு தா’ பாடலின் ஹிந்தி வடிவம். தமிழை விட நன்றாக இருக்கும். இப்பாடலிலும் இருவரின் நடிப்பை கவனியுங்கள். இரவில் கேட்கவேண்டிய பாடல்.

Trust me. எனக்குத் தெரிந்து, ஷா ருக் கான் இத்தனை இயல்பாக வேறு எந்தப் படத்திலும் நடித்ததில்லை. அவரது அசட்டு ரியாக்‌ஷன்கள் எதையும் இப்படத்தில் பார்க்க முடியாது. அதேபோல், ரொமான்ஸ் என்பதற்கு உண்மையான அர்த்தம் இப்படத்தில் இருக்கிறது. Before Sunrise, Before Sunset ஆகிய படங்களின் இயல்பான ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பது போலவே இப்படத்தைப் பார்க்கையில் உணர்ந்தேன்.

அதேபோல், எப்படி ’லகான்’ படத்தின் மொக்கைக் கதையை ரஹ்மான் தனது இசையாலேயே உயர்த்தினாரோ, அதனைவிட அருமையாக இப்படத்தில் அவர் முழுத்திறமையையும் காட்டியிருப்பதை உணரலாம். பாடல்கள் அபாரம் என்றால், பின்னணி இசை அட்டகாசம் !! ஒவ்வொரு காட்சியிலும் இழைத்து இழைத்து ரஹ்மான் இசைத்திருப்பதை இதில் காணலாம். பின்னணி இசையைத் தவற விட்டுவிடாதீர்கள்.

இந்தப் படத்தைப் பார்த்திராத நண்பர்கள், தாராளமாக நம்பிப் பார்க்கலாம். குறிப்பாக, இரவில் பாருங்கள். மனம் லேசாவதை உணர்வீர்கள்.

Swades – A romantic, passionate ride down memory lane!

பி.கு

  1. படத்தில் ஷா ருக் கானின் உடை எனக்குப் பிடிக்கும். படம் முழுவதும் ஜீன்ஸ்+ஷர்ட் என்ற காம்பினேஷனிலேயே அவர் உலவுவார். அவரது அமெரிக்க கதாபாத்திரத்துக்கு அது இயல்பாகவும் இருக்கும். எனது ட்ரஸ்ஸிங் இன்ஸ்பிரேஷன் இந்தக் கதாபாத்திரமே.
  2. படத்தின் குட்டிக்குட்டி ரொமான்ஸ் காட்சிகளே இப்படத்தின் உயிர்நாடி. தவறவே விட்டுவிடாதீர்கள்.
  3. படத்தில், உண்மையான வட இந்திய கிராமங்களின் கோரமான முகம் காட்டப்பட்டிருக்காது. இருந்தாலும், பார்க்கலாம்.
  4. இப்படத்தை, அப்போதைய M TV, சர்வ சிக்‌ஷா அப்யான் என்று கிண்டல் செய்தது.
  5. இப்படத்தின் ஹிந்தி, என்னைப்போன்ற தற்குறிக்கும் புரியும்படி இருப்பது இன்னொரு சிறப்பு. இப்படத்தைப் பார்க்க வசனம் தேவையில்லை.
  Comments

25 Comments

  1. ரொம்ப அருமையான படம் போலவே உங்களுடைய இந்த எழுத்தும்.. அது என்ன நைனா.. 2004லதான் காலேஜ் முடிச்சீங்களா ? நீங்க நம்மளுக்கு மூப்புன்னுல நினைச்சுட்டு இருக்கேன் 🙂

    Reply
  2. //படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என் மனதில் நிரந்தரமாக இறங்கிய மாறுதலை மிகத்தெளிவாக என்னால் உணரமுடிந்தது.//

    இங்கும் அதே. பார்த்த ஹிந்திப் படங்கள் குறைவு என்றாலும் அதில் சிறந்த படங்களில் டாப் லிஸ்டில் இது நிச்சயம் இருக்கும்.

    Reply
  3. இந்தப் படம் பார்க்கக் காரணமே A.R.R. தான். ஆனால் கேட்டது தமிழில் தான். “உன்னைக் கேளாய்” மற்றும் “உந்தன் தேசத்தின் குரல்” பாடல்களில் உள்ள வரிகளைக் கேட்ட பின்னர் தான் படத்தைப் பார்க்க ஒரு ஆர்வம் வந்தது.

    படம் பார்த்தது Rab ne Bana di Jodi பார்த்ததற்கு பின் தான். அதில் பார்த்த ஷாருக்கிற்கும் இதில் வரும் மோஹனுக்கும் பயங்கர வித்தியாசம். எனக்குத் தெரிந்து ஷாருக் அடக்கி வாசித்திருப்பது இந்தப் படம் தான்.

    Reply
  4. ரசிகன்யா நீர். அட்டகாசமா எழுதியிருக்கீங்க

    எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச படம் இது. சென்னை சாந்தி தியேட்டர்ல பார்த்தேன். நானும் ரொம்ப நாளா இந்தப் படத்தைப் பற்றி எழுதணும்னு நினைச்சிக்கிட்டே இருக்கேன்.

    Reply
  5. நான் மிகவும் ரசித்து பார்த்த படம். ஒரு பத்து பேருக்கு இந்த டிவிடி கொடுத்து பார்க்க வைத்தேன்.

    ரஹ்மான பத்தி சொல்ல வார்த்தையே இல்லை..

    ஆனால் நீங்கள் ஒரு அருமையான பாடலை பற்றி எழுதவில்லை.
    http://www.youtube.com/watch?v=dRWr8OsVyjA

    Reply
  6. உங்க மனதுக்கு நெருக்கமான படம் என்பது பதிவு ஆரம்பிச்ச வெகுசில வரிகளிலேயே தெரிஞ்சிருச்சு.

    Yunhi chala…..பாடல் அட்டகாசமான ஒரு ரோட் ட்ரிப் பாடல்..இத கேட்டுகிட்டே கார் ஒட்டிகிட்டு எங்கியாச்சும் போகணும் என்பது என் நெடுநாள் ஆசை. அதேமாதிரி..வாவ்…ஷாருக் ட்ரெஸ்ச சொன்னது இனிமையான ஆச்சர்யம்…குறிப்பா அந்த blue checked shirt ரொம்ப புடிக்கும். அதேமாதிரி ஒண்ண தேடி புடிச்சு – நா இல்ல – எங்கம்மாவும்+அப்பாவும்தான் பெரும்பாலும் எனக்கு எடுப்பாங்க, நாவொரு சோம்பேறி – எடுத்தாங்க..இன்னொரு ரெட் கலர் ஷர்ட்டும் வரும்..அதுவும் அட்டகாசம்.

    படம்…..ரொம்ப இழுவையா இருந்த மாதிரி பார்க்கும் போது தோணியது. ஜோதா அக்பர் அளவுக்கு இல்லாட்டியும….பிரச்சார நெடி அதிகமா இருந்ததாக நா ஃபீல் பண்ணேன்.

    அதையும் மீறி படத்த பாக்க வெச்சது,ரஹ்மான் தான்.முக்கியமான, டைட்டில் பாடலை சொல்லாம வுட்டுட்டீங்களே………..

    Reply
  7. சென்ற மாதம் பார்த்த படங்களில் ரொம்பவும் அற்ப்புதமான படம் ஸ்வதேஷ்..அதை இவ்வளவு அருமையான காட்சி விவரிப்புகளோடு, சிறப்பாக விமர்சனம் செய்த தங்களுக்கு எனது நன்றிகள்.

    Reply
  8. அண்ணே, வழக்கு எண் 18/9 ன்னு அருமையான ஒரு படம் வந்து இருக்குதே…அதை பற்றிய உங்க விமர்சனத்தை காணவில்லையே…நீங்க அந்த படத்தை பார்க்கவில்லையா? இல்லாட்டி அந்த படம் எந்த உலக படத்தின் காப்பி என்று தேடி கொண்டு இருகிண்றீர்களா? தமிழ் இல நல்ல படங்கள் வாறது இல்லை ன்னு குறை சொல்லி கொண்டு திரியுறீங்க.ஆனால் வந்த நல்ல படங்களையும் (உதாரணம்: வாகை சூட வா ,வழக்கு எண் 18/9 ) நீங்க பாராட்டுறதும் இல்லை. அப்புறம் சும்மா தமிழ் சினிமாவை குறை சொல்லி கொண்டு இருக்கிறது

    Reply
  9. ஆகாஷ்-நான் படத்தைப் பார்த்தாச்சா இல்லையான்னே தெரியாம ஓவரா பேசுறது சரியில்லை. பெங்களூர்ல படத்த ரிலீஸ் பண்ணட்டும் மொதல்ல. அப்பால அது நல்ல படமா இல்லையான்னு நான் முடிவு பண்ணுறேன். நம்மாளுகளுக்கு கருத்து சொல்லாட்டா ஒக்கார்ர எடத்துல கட்டி வந்திரும்னு ஒங்க கமென்ட் பார்த்தாலே தெர்து

    Reply
  10. சூப்பர் படம்,குறிப்பாக அந்த பாட்டி Bulbu ஒளியில் சிரிக்கும் காட்சி மிக ரசனையாக இயக்குனர் காட்சிபடுத்தி இருபார்,தேளு நீங்க 2003-2006 batch ah நானும் அப்சர ல தான் பார்த்தேன்……:)

    Reply
  11. ஸ்வதேஷ் இன்னும் பார்க்கவில்லை.
    திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் திரையிட…இதன் தமிழ் பதிப்பை தேடி அலைந்தேன்.கிடைக்கவில்லை.

    யாதோங்கி பாராத்தின்… ரீமேக் நாளை நமதே.
    பல்லாண்டு வாழ்க…. தோ ஆங்கேன் பாரா ஹாத்தின் ரீமேக்.

    Reply
  12. சக் நம்மவர்களுக்கு எரிச்சலூட்டும் அவரது வழக்கமான ஏதோ குளிரில் நடுங்குவன் போல பேசும் பாணியை கைவிட்டு சாதாரணமாக பேசியிருப்பது.

    உணர்ச்சியில் பொங்கி, ஓவர் ஆக்டிங் செய்யக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வாறு செய்யாமல் அமைதியாகவும், ஆழமாகவும் நடித்திருப்பது. தே வில் ஷாருக் கானின் நடிப்பு பற்றி என்னுடைய பதிவில்
    http://marchoflaw.blogspot.in/2008/01/blog-post_16.html

    Reply
  13. I have seen this movie n+n times and keep seeing whenever i wanted some energy.. i have never seen anyother indian movie (includes tamil) or any english movie so many times.. THE BEST feel good movie ever came in indian cinema and a MUST WATCH. Rahman’s peak performance adds more taste to it.. and yeah, those romantic scenes.. nothin but a WOWWWWW…

    Reply
  14. @ Rajesh Da Scorp : அண்ணே, கருத்து சொல்லுறதுக்கு நான் உங்களை போல கருத்து கந்த சாமியோ இல்லை பெரிய அப்பாடாக்ரோ இல்லை. என்னோட ஆதங்கத்தை வெளிபடுத்தினேன். உலக படம் ன்ன மட்டும் அடிச்சி பிடிச்சு பார்த்து விடுறீன்களே…அதே போல தமிழ் இல் வரும் நல்ல படைப்புகளையும் பாருங்க என்று தான் சொன்னேன்.

    // நம்மாளுகளுக்கு கருத்து சொல்லாட்டா ஒக்கார்ர எடத்துல கட்டி வந்திரும்னு ஒங்க கமென்ட் பார்த்தாலே தெர்து //
    இந்த comment இல இருந்து விமர்சனங்களை எப்படி நீங்க எடுத்து கொள்ளுறீங்க என்பது நல்லாவே தெரியுது

    Reply
  15. ஆகாஷ் – உங்க கமெண்ட் பார்த்தா, ஆதங்கப்படுற மாதிரி தெரில. வேணும்னே வம்புக்கு இழுக்குற மாதிரிதான் தெரியுது. நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி, பெங்களூர்ல படம் வரல. போன வாரம் வரை. வந்தாத்தான் அது உலகப்படமா இல்ல உள்ளூர் படமான்னு தெரியும். ரைட்டா?

    அதே மாதிரி, ஒக்கார்ர எடத்துல கட்டி ஏன்னா, என்ன நடக்குதுன்னே தெரியாம ஓவரா கமெண்ட் போட்டீங்கல்ல… அதான் :-).. இங்க பாருங்க..

    //அந்த படம் எந்த உலக படத்தின் காப்பி என்று தேடி கொண்டு இருகிண்றீர்களா? தமிழ் இல நல்ல படங்கள் வாறது இல்லை ன்னு குறை சொல்லி கொண்டு திரியுறீங்க.ஆனால் வந்த நல்ல படங்களையும் (உதாரணம்: வாகை சூட வா ,வழக்கு எண் 18/9 ) நீங்க பாராட்டுறதும் இல்லை. அப்புறம் சும்மா தமிழ் சினிமாவை குறை சொல்லி கொண்டு இருக்கிறது//

    இதான் ஆதங்கப்படுறதா? ஒண்னு செய்யுங்க.. பாலாஜி சக்திவேலை தொடர்பு கொண்டு, பெங்களூர்ல ஒரு ப்ரிவ்யூ ரெடி பண்ண சொல்லுங்க. அங்க போயி அதைப் பார்த்துட்டு அப்பால விமர்சனம் பண்ணுறேன்

    Reply
  16. Rajesh, Awesome review of a very nice movie. I wonder how you notice so many things, that I never seem to get. By the way, I happened to meet the person who was the inspiration for this movie. Mr.Ravi Kuchimanci. I was blown away to come to know that such people do exist. http://aidindia.org/main/content/view/817/399

    Reply
  17. @ இராமசாமி – அடப்பாவி. நான் இன்னும் கொழந்தைப் பையன்தான் 🙂

    @ ஹாலிவுட் ரசிகன் – உண்மைதான். கோவாரிகர் ஷாருக்கை நல்லா வேலை வாங்கிருப்பாரு இதுல. நடிப்பு என்பதை ஷாருக் கொஞ்சமாவது வெளிக்காட்டிய படம் இது :-). தமிழ்ல நல்லாருக்காது. ஹிந்திலதான் பார்க்கணும்.

    @ செ. சரவணக்குமார் – எப்புடி முந்தினோம்ல 🙂 … ஒரு பிரபல பதிவரையே நான் முந்திட்டேன் 🙂 … எடுங்கடா பாட்டில்கள 🙂

    @ வேலன் – இந்தப் பாட்டைப் பத்தி வேணும்னேதான் எழுதல. ஏன்னா, அது ஒரு சோக மூட் குடுக்கும். ஆனா இந்தக் கட்டுரை ஒரு ஜாலியான ஒண்ணாச்சே. அதான் 🙂

    @ கொழந்த – மேலே வேலனுக்கு கொடுத்துள்ள ரிப்ளையை கவனிக்க. யூ ஹி சலா சல் பாட்டு ஒரு அற்புதம். தமிழ்ல இன்னும் இதைப்போன்ற பாடல்கள் வரல. ஹிந்தில மட்டுமேதான் ரஹ்மான் எக்ஸ்ப்ரிமென்ட் பண்ணுறாரு. அதுக்கேத்தமாதிரி அசப்போர்ட் அவருக்கு அங்க இருக்கு. இங்க இன்னும் அது இல்ல. லெட்’ஸ் ஸீ…. இந்தப் படத்துல வர்ற ஷாரூக்கோட உடைகளை மறக்கவே முடியாது. என்னோட டிரெஸ்ஸிங் சென்சையே மாத்தியமைச்ச உடைகள் அவை 🙂

    @ குமரன் – மிக்க நன்றி

    @ pravin – அடடே … நீரும் அப்சராவா 🙂 சூப்பர்

    @ @ உலக சினிமா ரசிகரே – தயவு செஞ்சி தமிழ்ல பார்த்துராதீங்க… ஹிந்திலதான் அட்டகாசமா இருக்கும். தமிழ்ல நல்லா இருக்காது

    @ Prabhu Rajadurai – சக்தே இந்தியாவும் நல்ல படம்தான். ஆனா இதுல இருக்குற ரொமான்ஸ் அதுல இல்லையே தலைவா 🙂

    @ ammuthalib – சூப்பர். அனுபவிச்சி பார்த்திருக்கீங்க போல ….:-)

    @ Vaasagan – அட்டகாசம்!!!! அந்த நபரை நேர்ல பார்த்துப் பேசுறது ஒரு அற்புதமான அனுபவம் இல்லையா? ரொம்ப நன்றி

    Reply
  18. Excellent movie and equally nice review. I couldn’t stop mentioning the absence of your view of the following scenes

    1. Smile on the face of the old lady on seeing the bulb glowing

    2. Boy who sells water for 25p in the railway station

    3. Haridas’ kids who give their roti to Mohan and Melaram, because they are guests

    4. Argument between Mohan, Geetha and Kaveri, about the state of the nation, and Mohan mentions ‘You Indians will never accept your mistakes’

    Reply
  19. ஷாருக்கானின் படங்களில், நான் பார்க்காத மிகச்சில படங்களுள் இதுவும் ஒன்று.(என்ன காரணம்னு தெரியல…)
    உங்களின் விமர்சனம் அருமை.
    உடனே விரைகிறேன் பர்மா பஜாருக்கு, டிவிடி வாங்க!

    Reply
  20. ரஹ்மான் பற்றி நீங்க எவ்ளவுதான் சொன்னாலும் அது not enough தான் ..

    Reply
  21. EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!EXCELLENT!!

    Reply
  22. //இப்படத்தின் ஹிந்தி, என்னைப்போன்ற தற்குறிக்கும் புரியும்படி இருப்பது இன்னொரு சிறப்பு//

    I SHULD BE SAYING THIS!!..nee oru hindi pandit appdingradhu ooru arindha ragasiyam!!

    Reply
  23. இந்த படத்தை நானும் என் நண்பரும் பார்க்க போயிருந்தோம், எங்க ரெண்டு பேருக்கும் சுத்தமாவே இந்தி தெரியாது.ஆனா படத்தின் ஒவ்வொரு சீனும் எங்களுக்கு நல்லாவே புரிஞ்சுது..

    Reply
  24. Nan ungal raigan, Oru siriya vendukol nengal yaari pattri elluthinalum kurai kuramal elluthungal ethu en anbana siriya vendukol… ’லகான்’ படத்தின் மொக்கைக் கதையை ரஹ்மான் தனது இசையாலேயே உயர்த்தினாரோ

    Reply

Join the conversation