XIII –1 – கறுப்புச் சூரியனின் தினம்

by Karundhel Rajesh April 19, 2010   Comics Reviews

மிகப்பல வருடங்கள் முன். எண்பதுகளில் தங்களது பள்ளி நாட்களைக் கழித்த நண்பர்கள் பல பேருக்கு, தூர்தர்ஷன், ரஜினி கமல் படங்கள், டிவி, வரிசையில், மறக்கவே முடியாத ஒரு விஷயம் – XIII. அன்று ஆரம்பித்த அந்த விஷயம், இன்று வரை தொடரும் என்பதில் எனக்கு எள்ளளவிலும் சந்தேகம் இல்லை. அவ்வளவு சுவாரஸ்யமான ஒரு கதைத்தொடர் இனிமேல் நாம் படிப்போமா என்றும் தெரியவில்லை. ஆனால், இப்படி ஒரு தலைமுறையையே ஒரு காமிக்ஸ் தொடரின் பின் ஓடவைத்த நம்முடைய அன்பிற்குறிய திரு. விஜயன் அவர்களுக்கு ஒரு நன்றி தெரிவித்துவிட்டு, மேலே செல்வோம்.

இந்த கிராஃபிக் நாவல், இத்துடன் 19 பாகங்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாசகனாக, ஒரு ஃபெனாடிக்காக, ஒரு சிறுவனின் மனதில் அட்டகாசமாகப் பதிந்துவிட்ட இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் தான் எத்தனை! அப்படிப்பட்ட ஒரு சிறுவன், தனது மனதைத் தீவிரமாக பாதித்த ஒரு கிராஃபிக்ஸ் நாவலைப் பற்றி எழுதும் ஒரு ஹோமேஜ் இந்தத் தொடர். இதில், ஒவ்வொரு பாகமாக நாம் பார்க்கப்போகிறோம். .

இதனை எழுதும் இந்த வேளையில், நம்முடைய கனவுகளின் காதலரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் ஆல்ரெடி பல பதிவுகளை இவ்வண்ணம் எழுதிவிட்டார். எனினும், என்னையும் எழுதச் சொன்னது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது.

அதேபோல், ரஃபீக் ராஜா, கிங் விஸ்வா, லக்கி லிமட் போன்ற காமிக்ஸ் நண்பர்களுக்கும் நன்றி.

இந்தத் தொடரை எந்த வயதினரும் படிக்கலாம். படு சுவாரசியமாக இருக்கும்.

இந்தத் தொடரை உருவாக்கியவர்கள், Van Hamme மற்றும் William Vance. இதில், வில்லியம் வான்ஸ் படங்கள் வரைய, வான் ஹேம் இக்கதையை உருவாக்கினார். எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் சக்கைப்போடு போட்ட ஒரு ஜோடி இது.

பாகம் 1: கறுப்புச் சூரியனின் தினம்.

அது ஒரு மதிய வேளை. கடற்கரையோரம் அமந்திருக்கும் அந்த வீட்டில் வசிப்பவர்கள், ஏப் மற்றும் ஸாலி. இருவருமே வயதானவர்கள். அன்று ஏப், தனது நாய் ப்ராண்ட்டோவோடு, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது, அவரது நாய் விடாமல் குலைக்க, அந்த இடத்திற்குச் சென்று பார்க்கும் ஏப், உச்சபட்ச அதிர்ச்சி அடைகிறார்.

அங்கு, ஒரு மனிதன், பாறைகளுக்கிடையில் கிடக்கிறான். எந்த அசைவும் இல்லாமல். அவனை, ஏபும் ஸாலியும் வீட்டினுள் தூக்கிச் செல்கின்றனர். அந்த மனிதனுக்கு இதயத்துடிப்பு லேசாக இருப்பதை உணர்கிறார் ஏப். அவர்களது தோழி மார்த்தாவை அழைத்து வரும்படி ஸாலி சொல்கிறாள். அவள், ஒரு முன்னாள் சர்ஜன். குடித்துக்கொண்டே இருந்ததனால், லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டவள்.

அப்பொழுது, ஸாலி, அந்த மனிதனின் இடது தோள் எலும்பின் கீழ், XIII என்ற ரோமன் எண் பச்சை குத்தப்பட்டிருப்பதைக் காண்கிறாள். அது என்னவென்று அவளுக்குப் புரிவதில்லை.

மார்த்தா வந்து சிகிச்சை அளிக்கையில், அந்த மனிதனின் தலையை ஒரு புல்லட் துளைத்திருப்பதை அறிகிறாள். ஆனால், அந்த புல்லட், அவனது மூளையைச் சிதைக்காமல், ஒரு பகுதியை மட்டுமே நாசப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது.

அந்த மனிதனும் எழுகிறான்.

ஆனால், அவனுக்கு எதுவுமே நினைவிருப்பதில்லை. அவன் யார் என்றோ, அவனை சுட்டது யார் என்றோ, அந்த ரோமன் எண்ணின் முக்கியத்துவம் என்ன என்றோ அவனுக்குத் தெரிவதில்லை. அத்தனையும் மறந்துபோன நிலையில், கடற்கரையில் ஒதுங்கிய அவன் யார்?

இரண்டு மாதங்கள் கழிகின்றன.

அந்த வயதான தம்பதியினர், அந்த மனிதனை ஆலன் என்று அழைக்கின்றனர். இறந்துபோன தங்களது மகனின் நினைவாக அவனுக்கு அந்தப் பெயர்.

ஆலனும் மார்த்தாவும், ஓர் நாள் கடற்கரையில் நடந்துகொண்டிருக்கின்றனர். அப்பொழுது, மார்த்தா, ஆலனின் காயத்தைப் பற்றியும், அவனது நினைவு திரும்பலாம் அல்லது திரும்பாமலேயே போகலாம் என்றும் சொல்கிறாள். மார்த்தாவுக்கு ஆலனின் மேல், இந்த இரண்டு மாதங்களில் ஓர் அன்பு துளிர்க்கிறது. தனிமையான தனது வாழ்வை, வண்ணமயமாக்குவதற்கு வந்தவனே ஆலன் என்று அவள் இதற்குள் எண்ணத் துவங்கியிருக்கிறாள்.

இருவரும் வீட்டிற்குத் திரும்புகின்றனர். வாயிலிலேயே, ப்ராண்ட்டோ செத்துக் கிடக்கிறது. அதிர்ச்சியுறும் இருவரும், மெல்ல வீட்டினுள் செல்ல, திடீரென்று ஆலன் மார்த்தாவைக் கீழே தள்ளுகிறான்.

டுமீல் . . டுமீல் . . .. .

உள்ளிருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கிறது. இதற்குள் ஒளிந்துவிட்டிருக்கும் இருவரையும் தேடி, ஒருவன் துப்பாக்கியுடன் வெளியே வருகிறான். திடீரென்று மேலே தாவும் ஆலனின் மேல் அவன் குண்டுகளைச் செலுத்துவதற்குள். . .

சத் . . .

ஆலன் வீசிய கத்தி, அவனது கழுத்தைப் பதம் பார்க்கிறது. மார்த்தாவின் முன் இறந்து போய் விழுகிறான் அவன்.

இதற்குள் அவனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டுவிட்ட ஆலன், மற்றொருவனின் மீது கூரையிலிருந்து குதிக்க, ஆரம்பிக்கிறது இருவருக்கும் ஒரு சண்டை.

ஆலனின் தலைமீது ஒரு கல்லால் அடித்துவிட்டு, சட்டென்று தனது காரை எடுத்துக்கொண்டு தப்பித்துவிடுகிறான் அவன்.

ஸாலியும் ஏபும் தூக்கத்திலேயே கொலை செய்யப்பட்டு விடுகின்றனர்.

இறந்துகிடக்கும் அந்த மனிதனின் சட்டைப் பாக்கெட்டினுள் இருக்கும் ஒரு புகைப்படம், ஆலனின் கவனத்தை ஈர்க்கிறது. அதில், அவனும் , இன்னொரு அழகியும். அவள் யார்?

அந்தப் புகைப்படத்திற்குப் பின்னால் இருக்கும் முகவரியைத் தேடிச் செல்லும் ஆலன், அந்த ஸ்டுடியோ ஒரு பிஸ்ஸா கடையாக மாற்றப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். அங்குள்ள ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்குச் செல்லும் ஆலன், அந்த எடிட்டரைச் சந்தித்து, இரு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்கள் வேண்டும் என்று கேட்கிறான். அவனைப் பார்த்து அதிர்ச்சியடையும் அந்த எடிட்டர், அவன் சென்றதும் யாருக்கோ தொலைபேசி, இந்தத் தகவலைச் சொல்கிறார்.

பத்திரிகை அலுவலகத்துக்குச் செல்லும் ஆலன், ஒரு நாள் முழுக்கத் தேடியும் அவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை. ஆனால், மறுநாள், அவன் தேடலைத் தொடங்கும்போதே, அவன் புகைப்படத்தில் பார்த்த அந்தப் பெண்ணின் புகைப்படம் அங்கு இருப்பதைப் பார்க்கிறான். அவளது முகவரியை எடுத்துக்கொண்டு, அவளது வீட்டிற்குச் செல்கிறான். இதையெல்லாம் ஏற்பாடு செய்தது அந்த எடிட்டர் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அலங்கோலமாக இருக்கும் அந்த வீட்டினுள், அதே ஜோடிப் புகைப்படமும், அந்தப் புகைப்படத்தினுள் ஒரு பெட்டகத்தின் சாவியும் அவனுக்குக் கிடைக்கின்றன. அங்கு ஒரு சங்கேதச் செய்தியும் அவனுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் கிம் ரோலாண்ட் என்றும், அவள், அவனுக்காக, ‘செவ்விந்தியன் செல்லுமிடத்தில்’ காத்துக்கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

அப்பொழுது அங்கே வரும் போலீஸ் லெஃப்டினண்ட் ஹெம்மிங்ஸ், அவனிடம், கறுப்புச் சூரியனுக்காக அவனுக்குக் கிடைத்த பணத்தை அவன் எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் எனக்கேட்டு அவனைச் சித்ரவதை செய்கிறார். அவனை, ஜாக் ஷெல்டன் என்றும் அழைக்கிறார்.

ஹெம்மிங்ஸ் தன்னை சுடப்போகும் அயனான நிமிடத்தில், ஒரு வங்கியின் பெட்டகத்தில் அது இருப்பதாகச் சொல்லும் ஆலன், அந்த வங்கிக்கு அவர்களுடன் செல்கிறான்.

அந்தப் பெட்டகம் திறக்கப்படும்போது, அதிலிருந்து வெடிக்கும் ஒரு வாயு, ஹெம்மிங்ஸை செயலிழக்கச் செய்கிறது. அப்பொழுது கிடைக்கும் சிறிதுநேர அவகாசத்தில் அங்கிருந்து தப்பிக்கிறான் ஆலன்.

தனது அறைக்குச் சென்று, நிகழ்ந்த சம்பவங்களையெல்லாம் கோர்வைப்படுத்த முயலும் ஆலனைத் தேடிக்கொண்டு, அங்கேயே வந்துவிடுகின்றனர் எதிரிகள். அங்கிருந்தும் தனது மின்னல்வேக ரிஃப்ளெக்ஸ்களால் தப்பிக்கும் ஆலனை, ஒரு வயதான பெரியவர் மீட்கிறார்.

தனது பெயர் கர்னல் அமோஸ் என்று சொல்லும் அவர், தனது ரகசிய இடத்துக்கு அவனை அழைத்துச் சென்று, இந்தக் கறுப்புச் சூரியன் கேஸுக்காகவே தனது அத்தனை ஆட்படையையும் தான் நியமித்திருப்பதாகச் சொல்கிறார்.

குழம்பிப்போய் அமர்ந்திருக்கும் ஆலனிடம், ஒரே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தச் சொல்லி, அவன் உண்மையில் யார் என்று கேட்கிறார் அமோஸ்.

தானுமே அந்தச் சிக்கலிலேயே இருப்பதாகச் சொல்லும் ஆலன், தனது பெயர் ஜாக் ஷெல்டன் என்று கூறி, அமோஸின் ஆளின் கையில் அறை வாங்குகிறான். அவனுக்கு அமோஸ் ஒரு விடியோவைப் போட்டுக் காட்டுகிறார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதி வில்லியம் ஷெரிடன், ஒரு ஊர்வலத்தில் சுடப்பட்டு இறக்கிறார். அந்த விடியோவில், அவரைச் சுட்டவனது படமும் பதிவாகிறது. அந்தக் கொலையாளியின் முகத்தை அவர் ஸூம் செய்யச்செய்ய, அவனது முகம் மிகத்தெளிவாகத் தெரிகிறது.

அவன், வேறு யாருமல்ல. ஆலனே தான் !!!

இந்தச் சம்பவத்தையே கறுப்புச் சூரியன் என்று அனைவரும் அழைப்பதாக அவர் சொல்கிறார்.

அந்த சதிக்கும்பலில் அவனும் ஒருவன் என்று சொல்லும் அமோஸ், அவனது தலைவனைக் கண்டுபிடிப்பதே தனது லட்சியம் என்று சொல்லிக்கொண்டிருக்கையில், அங்கிருந்து ஜன்னலில் குதித்துத் தப்பிக்கிறான் ஆலன்.

தனது கடற்கரை வீட்டிற்கே திரும்ப வரும் ஆலன், அந்த வீட்டில் மார்த்தாவை ஒரு மொட்டைத்தலைக் கிழவன் சிறைப்பிடித்து வைத்திருப்பதைப் பார்க்கிறான். அந்தக் கிழவனின் பெயர், மங்கூஸ். இவனைச் சுடும் மங்கூஸின் அடியாள், குறுக்கே பாயும் மார்த்தாவைச் சுட்டுவிடுகிறான்.

இறக்கும் தருவாயில் தனது அன்பைப் புரிய வைக்கும் மார்த்தா, அவனை ஓடிவிடச் சொல்ல, அடியாட்களை அடித்துப் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிக்கிறான் ஆலன்.

ஒரு ரயிலில் திருட்டுத்தனமாக ஏறி, ‘செவ்விந்தியன் செல்லுமிடத்தைத் தேடித் தனது பயணத்தை ஆரம்பிக்கிறான் XIII.

ஆம். இனி அவனது பெயர், XIII.

இத்துடன் முதல் பாகம் முடிகிறது.

அட்டகாசமான சித்திரங்களுடன், படு விறுவிறுப்பான கதையும் சேர்ந்துகொள்ள, முதல் பாகமான கறுப்புச் சூரியனின் தினம், காமிக்ஸ் பிரியர்களுக்கு ஒரு வேட்டை என்பதில் எள்ளளவும் ஆச்சரியமில்லை.

அடுத்த பாகமான ‘செவ்விந்தியன் செல்லுமிடத்தில்’ விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.

  Comments

31 Comments

  1. நண்பரே,

    XIII குறித்து நீங்கள் எழுத ஆரம்பித்திருக்கும் தொடர் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    மக்லேனிடம் மயங்காத பெண் யாரேனும் இப்புவியில் உண்டோ, அதுவும் சாகும் தருவாயில் அப்பெண்கள் தம் காதலை அவரிடம் சொல்லத் துடிப்பது மனதை இளக வைத்து விடும்.

    ரயில் செல்லும் காட்சியின் சித்திரம் அபாரம். நல்ல தெரிவு.

    அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறப்பான பதிவு.

    Reply
  2. நண்பரே,

    XIIIன் ஆரம்ப அத்தியாயங்கள் குறித்து நண்பர் விஸ்வா எழுதியிருக்கிறார். நான் எழுதியவை தமிழில் இன்னமும் வெளிவராத கதைகள் ஆகும். பெருந்தன்மை என்பதெல்லாம் பெரிய வார்த்தை நண்பரே, ஜமாயுங்கள் ராஜா.

    Reply
  3. உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

    பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

    ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

    நன்றி
    தமிழ்10.காம் குழுவினர்

    Reply
  4. கருந்தேளாரே,

    காலை வணக்கங்கள்.

    தொடர் பிரம்மாதம். ஆரம்பமே அமர்க்களம்.

    Reply
  5. This comment has been removed by the author.

    Reply
  6. This comment has been removed by the author.

    Reply
  7. This comment has been removed by the author.

    Reply
  8. This comment has been removed by the author.

    Reply
  9. This comment has been removed by the author.

    Reply
  10. சொன்னத செஞ்சுப்புட்டீங்க……..சீக்கிரம் எழுதி முடிச்சுட்டு முழுநீள சினிமா ஏதாச்சும் போடுங்க நண்பரே..

    Reply
  11. XIII குறித்த காமிக்ஸ் நண்பர்களின் பதிவுகள்:

    கிங் விஸ்வாவின் XIII பதிவுகள்;

    http://tamilcomicsulagam.blogspot.com/search/label/XIII

    கனவுகளின் காதலரின் XIII பதிவுகள்:

    http://kanuvukalinkathalan.blogspot.com/search/label/XIII

    http://kanuvukalinkathalan.blogspot.com/2009/02/blog-post_12.html

    XIII காமிக்ஸ் டவுன்லோடு செய்ய:

    http://browsecomics.blogspot.com/search/label/XIII

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    Reply
  12. @ காதலரே – சரியாகச் சொன்னீர்கள் . . மக்லேனிடம் மயங்காத பெண்கள் இப்பூவுலகில் மட்டுமல்ல . . அதல சுதல பாதாலங்களிலும் இல்லை என்பதைப் பதிவு செய்து கொள்கிறேன் . . 🙂 அதைப்பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக எழுதி வெளியிடுவோம் . . மக்லேன் செய்யும் சில்மிஷங்கள் . . 🙂

    @ கடவுள் பாதி மிருகம் பாதி – ஒவ்வொன்றாக வெளிவரும் நண்பரே . . உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி . .

    @ தமிழினி – போட்டாச்சுங்க . . 🙂

    @ விஸ்வா – மிக்க நன்றி . . உங்களது வலைப்பூவில் இருக்கும் தகவல்கள் எல்லாமே கிடைத்தற்கரியவை . . அவற்றுக்கும் எனது நன்றிகள் . .

    @ மயிலு – அடுத்தது படம் தான் . . இனி வாரம் ஒன்றாக XIII எழுத உத்தேசம் . . நடுவில், படங்களையும் எழுதுவேன் . . 🙂

    @ டாக்டர் செவன் – தலைவரே . . உங்கள் லின்க்குகள் அனைத்திற்கும் மிக்க நன்றி . .இங்கு வந்தமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . .

    @ கார்த்திகேயன் – நன்றி நண்பா . . மீசையில்லாமதான் பின்றீங்க . . அப்புடியே மெயிண்டெயின் செய்யவும் . . 🙂

    Reply
  13. தேளாரே,
    அருமையான காமிக்ஸ் விமர்சனம்.பல காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தாலும் ஆச்சிரியபடுவதர்க்கில்லை.ஏறக்குறைய அனைத்து பாகங்களும் டவுன்லோட் செய்ய கிடைத்தாலும் தமிழில் படிப்பதற்காகவே எதையும் படிபதில்லை. தமிழில் வெளிவந்த பாகங்கள் மட்டுமே படித்துள்ளேன்.மீதி நமது காதலர் புண்ணியத்தில் படித்தது.லயன் கலெக்டர் ஸ்பெஷல் வருகைக்காக Waiting…

    அன்புடன்,
    லக்கி லிமிட்
    தமிழில் காமிக்ஸ்

    Reply
  14. One of the best comic art work.much sililiar to Yaroslav Horak’s bond series. was Bourne Identity was inspired from XIII? any idea?

    Reply
  15. 🙂 Thanks for the link too!

    Reply
  16. ச்ச.. சின்ன வயசுல இவ்வளவு படிக்காம மிஸ் பண்ணியிருக்கேனே.. ரொம்ப அருமையான பதிவு கருந்தேள்.. கலக்குங்க..

    Reply
  17. கருந்தேள் நண்பரே,

    XIII ன் கதைகளுக்கு யார் தான் ரசிகனாகாமல் இருக்க முடியும். இன்னொரு விமர்சன தொடரை நீங்களும் ஆரம்பித்திருப்பது, அந்த தொடரின் வெற்றிக்கு சான்று.

    இணையங்களில் ஒவ்வொருவருக்கு பிடித்தமான விடயத்தை அவர்கள் பாணியில் விவரிக்க தடையேது. காதலர் அவர் எழுத்துகளில் செதுக்கியிருந்தார், இப்போது நீங்கள் உங்கள் பாணியில் ஆரம்பித்திருக்கிறீர்கள். நாளை இன்னொருவர் அவர் தொனியில் வெளியிடவும் செய்யலாம். அதனால், யார் வெளியிட்டார் என்று கவனியாமல் தங்கள் மனம் விரும்பிய காரியத்தை அரங்கேற்றுங்கள்.

    காதலர் கூறியபடி அந்த கடைசி காட்சி மனதை விட்டு அகல முடியாத அளவிற்கு வண்ணங்கள் வித்தை காட்டுகின்றன. வான் ஹேமேவின் கற்பனை குதிரைக்கு வடிவம் கொடுத்து உலவ விட்ட ஹான்சை எவ்வகை பாராட்டினாலும் தகும்.

    தமிழில் காமிக்ஸ் படித்து அறிமுகமாக அனைவருக்கும், XIII ஒரு மறக்க முடியாத அனுபவமாக வாய்ப்பு கொடுத்த விஜயனுக்கு நன்றிகள்.

    தொடருங்கள் உங்கள் தொடரை. 🙂

    நண்பர் கமல்: உண்மையை கூற வேண்டுமானால், போர்ன் நாவலை அடிப்படையாக கொண்டுதான், XIII சித்திரதொடர் உருவாக்கபட்டது. ஆனால், போர்னின் 3 பாகங்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு, XIII ன் சரக்கு அதிகம் என்பது உண்மை 🙂

    Reply
  18. @ லக்கி லிமட் – உங்க அப்ரோச் எனக்குப் புடிச்சிருக்கு . . தமிழ்லதான் படிப்பேன்னு ஒத்தக்கால்ல நிக்குறீங்க . . ஆனால் லயன் ஸ்பெஷல் எப்ப வரும்னே தெரியலையே பாஸு . . இப்ப வருமோ.. எப்ப வருமோ . . காசனுப்பினா.. அப்ப வருமோ ?

    @ அண்ணாமலையான் – மணிரத்னம் ரேஞ்சுக்கு ஒத்த வார்த்த கமெண்ட்டு பின்றீங்க . . 🙂

    @ கமல் – நம்ம ரஃபீக் உங்க கேள்விக்கு பதில் சொல்லிட்டாரு . . Bourne சீரீஸ விட நம்ம சீரீஸ் பின்னிப் பெடலெடுக்கும். . . ஹோராக்கோட பாண்ட் சீரீஸ் சும்மா அதிரும் . .:-) அத இங்க நினைவுபடுத்தினதுக்கு நன்றி . .

    @ ஜெய் – அதுனால என்ன பாஸு . . இப்போ படிங்க . . லின்ன்குல போயி டவுன்லோட் பண்ணுங்க .. . எஞ்சாய் . . !! 🙂

    @ ரஃபீக் – ஆமாம். . XIII படிச்ச யாருமே அதுக்கு அடிக்ட்டா மாறுறது தவிர்க்க முடியாதது . . 🙂 ஹான்ஸ் சும்மா பட்டைய கிளப்பிட்டாரு !! அவர மறக்கவே முடியாது . . உங்கள் ஆதவருக்கு நன்றி . .

    Reply
  19. This comment has been removed by the author.

    Reply
  20. நண்பரே,XIII ஐ மறக்க முடியுமா? ஆங்கிலப் படங்களை தோற்கடிக்கும் வேகமும்,கதை ஓட்டமும், கதையில் விரவி நிற்கும் அந்த மென் சோகமும், அருமையான கதையும், நம்பக்கூடிய நிகழ்வுகளும்……சொல்லிக் கொண்டே போகலாம் இதன் பெருமைகளை…….

    இந்த சமயத்தில் இதன் பாகங்களை நெட்டில் ஏற்றி,தமிழில் வராத பல பாகங்களை படிக்க வழி செய்து கொடுத்த அந்த பேர் தெரியாத அயல்நாட்டுப் புண்ணியவானுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.Awaiting the parts 18 & 19 🙂

    அப்புறம்,நண்பர் லக்கி அவர்களே….. ஆக, XIII படிக்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறீர்கள்….அப்படித்தானே? 🙂

    ஆமாம்,கருந்தேள் அண்ணே (அதுதான் கல்யாணம் ஆயிடுச்சுல்ல 😛 ) ,அது என்ன, ப்ளுபெர்ரி, XIII, சலாம் பாம்பே என்று ஒரே மென் சோகமாக இருக்குதே? இது சரியில்லையே….அதுவும் இந்த நேரத்துல…. 🙂 என்ன பாஸ் ஆச்சு? 😉

    Reply
  21. அது ! அங்க நிக்குறான்யா நம்ம பதிமூணு !! அடுத்தடுத்த போஸ்ட்கள்ல, அதுலருந்து கொஞ்சம் ‘ஸ்பெஷல்’ படங்கள வெளியிடப்போறேன் . . 🙂 ஹீ ஹீ . .

    ஆமாம் . . பாகம் 17 இங்கிலீஷ்ல வந்துருச்சா? மேக்ஸிமிலியன்’ஸ் கோல்ட் ? உங்ககிட்ட இருந்தா, லின்க் அனுப்பவும். . அது இன்னும் வரலன்னு நினைச்சிகினு இருந்துட்டேன் . . எனக்கு அது அவசியம் தேவை . .

    இந்த மென்சோகத்துக்குக் காரணம், பேச்சிலர் லைஃப் போயிந்தின்னுதான் . . வேற என்ன? அந்தோ . . அந்த நாட்கள் போயினவே !!

    Reply
  22. Shree: dei ennada idhu
    Karundhel: edhu da
    adhu summa da
    comment dhane
    thamaasukku
    Shree: naan eda pathu kekaren nu unnaku epdi theriyum?
    Karundhel: serious illa
    naan panna ore mishap innikki adhudhaane.. adhan 😛
    Shree: dei… unmaya sollu
    Karundhel: unmaiyaa adu jokku da
    உண்மையா
    உன்ன கல்யாணம் பண்ன நானு குடுத்து வெச்சிருக்கணும் கண்மணி

    இப்படிக்கு திருமதி. கருந்தேள் 😀

    Reply
  23. அனுப்பியாச்சு பாஸ்….
    உங்க மென் சோகத்துக்கு காரணம் பேச்சிலர் லைஃப் போனது மாதிரி தெரியலையே பாஸ்.வீட்ல ரொம்ப ‘கவனிப்போ’ ? 😉

    Reply
  24. வாங்க மேடம்…. 🙂

    Reply
  25. வாங்க மேடம்.
    ஆஹா,கவனிப்பு அதிகமாத் தான் இருக்குது. 🙂

    Reply
  26. //இனி சொல்லாமலே பாஷை தான் !! :-)//

    ஆஹா,அப்போ, ‘நாக்’-அவுட் ஆ? 🙂

    Reply
  27. XIII-இன் தீவிர ரசிகன் நான். ஆனால் அந்த புத்தகங்கள் என்னிடம் இப்போது இல்லை. அதை எப்படியாவது பெற்றுவிட முடியுமா என்று முயன்றுக் கொண்டிருக்கிறேன். சிறப்பு பிரசுரமாக வருவதாக சொல்லப்படுவது காலம் கடந்துக்கொண்டே போகிறது. அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    டவுன்லோடு செய்ய நீங்கள் கொடுத்த விலாசத்தை அமெரிக்க அரசாங்கம் அராஜகமாக! தடைச்செய்துள்ளது.

    நன்றி நண்பரே..

    Reply

Join the conversation