வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 1

by Karundhel Rajesh February 2, 2012   Alien series

‘If, in fact, we are able to find life or to answer the question ‘Are we alone?’ then that certainly is grand enough and noble enough to be the enduring legacy of our civilization – NASA’

‘We have no proof, But if we extrapolate, based on the best information we have available to us, we have to come to the conclusion that … other life probably exists out there and perhaps in many places
– Neil Armstrong, Oct 21, 1999’

‘We all know UFOs are real. All we need to ask is where are they from
– Dr. Edgar Mitchell, 1971’

இந்த அண்டவெளியில், நாம் தனியாக இருக்கிறோமா? அதாவது, நமது பூமியைத் தவிர வேறு எங்காவது உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவா?

பில்லியன் டாலர் மதிப்புடைய கேள்வி. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் எப்போதாவது, ஏதோ ஒரு வடிவத்தில் எழும் கேள்வி இது. இதற்கு விடை, அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிடக்கூடிய அளவு சுலபம் அல்ல என்பது இந்தக் கேள்வியை இன்னும் மர்மமாக மாற்றுகிறது.

உயிர்மையில் நமது ராஜ் சிவா எழுதிவரும் ‘2012இல் உலக அழிவும், மாயா இன மக்களும்‘ என்ற தொடரை வெகு சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. அந்தத் தொடரைப் படிக்கையில், எனது சிறுவயதில் வானமண்டல மனிதர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தது நினைவு வந்தது. அந்த நினைவுகள் உந்தித் தள்ள, இணையத்தில் ஒரு முழு நாள் இது பற்றிச் செலவிட்டேன். சிறுவயதில் படித்த புத்தகங்களைத் தேடிப்பிடித்தது மட்டுமல்லாது, இந்த 20 வருடங்களில் மேன்மேலும் வந்திருக்கக்கூடிய பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், புதிய புத்தகங்கள் ஆகியனவற்றையும் ஒரே மூச்சில் படித்தேன்; படித்துக்கொண்டும் இருக்கிறேன். படித்ததை நண்பர்களுடன் பகிரலாம் என்பதே நோக்கம். இது ஒரு விவாதமாகவும் இருக்கட்டும். படிக்கும் நண்பர்கள், உங்கள் கருத்துகளையும் எழுதலாம். ஒருவகையில் பார்த்தால், மறந்தே போயிருந்த பல விஷயங்கள், ராஜ் சிவாவினால் நினைவு வந்தன. ஆகவே, அவருக்கே முதல் நன்றி.

கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னர், இன்னொருவரைப் பற்றியும் விரிவாகச் சொல்லியே ஆக வேண்டும்.

விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்.

ஆவிகளைப் பற்றிப் படிக்கும் யாருக்கும் அவ்வளவு சுலபமாக மறந்துவிடாத பெயர். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஆவிகளைப் பற்றியும், occult விஷயங்களைப் பற்றியும் எழுதிவருகிறார். இவர் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் ‘அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்திகள்’. இந்தப் புத்தகத்தை, எனது தந்தையின் மூலம், எனது பத்தாவது வயதில் படிக்க நேர்ந்தது. அக்காலத்தில் எப்போது பார்த்தாலும் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு மாரடித்து வந்ததால், இப்புத்தகத்தைப் படிப்பது கடினமாக இருக்கவில்லை. அப்புத்தகத்தின் மூலம் பல அதிசய மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். ரஸ்புடீன், அரிகோ, யூரி கெல்லர், மாயன்களின் அரசன் குக்குல்கன், சகுந்தலா தேவி, நெப்போலியன் எகிப்து சென்ற மர்மம் ஆகிய பல விஷயங்கள் அவற்றில் விரிவாக எழுதப்பட்டிருக்கும். துறுதுறுப்பான ஒரு சிறுவனுக்கு இந்த விஷயங்கள் எப்பேர்ப்பட்ட ஒரு உலகத்தைத் திறந்துவிட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

அந்தப் புத்தகத்தில் நான் படித்த மறக்க முடியாத இன்னொரு பெயர்: Erich Von Daniken. பண்டைய காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்தது உண்மைதான் என்று பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கும் மனிதர் இவர். இவரைப் பற்றியும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இரண்டு decades முன்பே. அதனைத்தொடர்ந்து, பள்ளி இறுதி ஆண்டுகளில் எரிக் வான் டேனிக்கென் எழுதிய ‘Chariots of Gods‘ புத்தகம் கிடைத்தது. அதுவும் ஒரு மறக்கமுடியாத புத்தகம்தான்.

இந்த டேனிக்கெனை விகடனில் மதன் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு. அதைப் படித்ததும் நன்றாக நினைவிருக்கிறது. அதில், மதனை வரவேற்கும்போதே, ‘உங்கள் ஊர் ராமர் கூட வேற்றுக்கிரக வாசிதான் தெரியுமா?’ என்று டேனிக்கென் கேட்ட கேள்வியை மதன் எழுதியிருப்பார்.

அவர் எழுதிய பல விஷயங்கள் இப்போது ஹம்பக் என்று சொல்லப்பட்டு வருகின்றன. என்றாலும், அவற்றில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முடிந்தால் விபரமாகப் பார்ப்போம்.

அவரைப்போலவே இந்தத் துறையில் பல்லாண்டுகளாகப் பழம் தின்று கோட்டை போட்ட மனிதர்கள் எழுதிய சில புத்தகங்களையும் முடிந்தால் அலசலாம். அவற்றில் அவர்கள் எழுதியுள்ள விபரங்கள், ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கும். அவைகளை உண்மை என்று எடுத்துக்கொள்ளாவிட்டாலும் கூட, சற்று நேரம் வேற்றுக்கிரக வாசிகள், UFOக்கள், அவர்களின் மொழிகள், பறக்கும் தட்டுகள் ஆகியவற்றின் நினைவில் ஆழ்ந்து இன்புறலாம் வாருங்கள்.

அப்படியே, இந்த விஷயங்கள் உண்மையா? அல்லது பொய்யா? என்ற வகையில் பல தகவல்களையும் பார்க்கப்போகிறோம். அதிலேயே மாயன்கள், சுமேரியர்கள் ஆகியவர்களைப் பற்றிய தகவல்களையும் தொட்டுச்செல்லலாம். பலவற்றை ராஜ் சிவா ஏற்கெனவே எழுதிவிட்டார். ஆகவே, அவற்றை ஒரு highlight போலப் பார்க்கலாம்.

சரி. முன்னுரை போதும். ஆரம்பிக்கலாமா?

1. சரித்திரம் சொல்லும் Alien கதைகள்

மனிதகுலத்தில் பல்வேறு இனங்களில் வழங்கி வரும் புராணங்களை எடுத்துக்கொண்டால், அவைகள் எல்லாவற்றிலும் பல ஆச்சரியங்கள் நிறைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இவைகள் அனைத்துமே, வானில் இருந்து இறங்கிய ‘கடவுளர்’களைப் பற்றிப்பல தகவல்களைச் சொல்கின்றன. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். மனிதகுலத்தின் ஆதிமூலம், அவர்களது புராணங்களே என்பதால், இந்த referenceகள் அவசியம். மட்டுமில்லாமல், அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் fantasized விஷயங்கள் படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்தியாவிலிருந்தே ஆரம்பிப்போம்.

நாம் எடுத்துக்கொள்ளப்போகும் புராணம், மஹாபாரதம். ராமாயணத்திலும் ஆச்சரியமான UFO குறிப்புகள் உண்டு என்றாலும் (புஷ்பக விமானம்), மஹாபாரதத்தில், உலகின் எந்த UFO குறிப்புகளையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய தகவல்கள் நிறைந்துள்ளதால், அதில் உள்ள விபரங்களைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். எனக்கு மஹாபாரதத்தைப் பற்றித் தெரிந்தவைகளையும் (அதிலிருக்கும் முக்காலே மூணு வீச கதைகள் எனக்கு அத்துப்படி), UFO ஆராய்ச்சியாளர்களின் கூற்றையும், மறந்துபோன சில தகவல்கள் இணையத்திலிருந்தும் கொடுக்கிறேன்.

மஹாபாரதத்தின் தொடக்கத்திலேயே, ‘கடவுளர்கள்’ குந்திதேவிக்குக் குழந்தைகளை அருளியது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. துர்வாசர் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரத்தைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட கடவுளை நினைத்தால், அந்தக் கடவுளின் குழந்தை அம்மந்திரத்தைச் சொல்லும் பெண்ணின் வயிற்றில் உருவாகிவிடும். அப்படி அதனை உபயோகித்து உருவான குழந்தைகளே கர்ணன் (சூரியன்), யுதிஷ்டிரன் என்னும் தர்மன் (எமனின் குழந்தை), பீமன் (வாயு), அர்ஜுனன் (இந்த்ரன்), நகுலன் மற்றும் சகதேவன் (அஸ்வினி தேவர்கள்). இதில் நகுலனும் சகதேவனும் பாண்டுவின் இரண்டாம் மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர்கள்.

மஹாபாரதத்தில் சிவன் அழித்த மூன்று அசுரர்களைப் பற்றிய கதையும் வருகிறது. கர்ண பர்வத்தில் இக்கதை விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. த்ரிபுரர்கள் என்று சொல்லப்பட்ட மூன்று அசுரர்களுக்கு, மூன்று பெரிய நகரங்களை தேவர்களின் சிற்பியான மயன் வானில் கட்டிக்கொடுத்த கதையும், அந்த பிரம்மாண்டமான நகரங்கள் ஒரே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்ததும், அந்நகரங்களை எப்படி ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தி சிவன் அழித்தார் என்பதும் விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது (இதே கதையில், தனது புன்னகையாலேயே அந்நகரங்களை சிவன் அழித்ததாக மற்றொரு பாடபேதம் உண்டு). மூன்று நகரங்கள் வானில் சுற்றிக்கொண்டிருந்தன என்று பாரதத்தில் வருவது, ஒருவேளை ஏலியன்களின் பறக்கும் தட்டுதானோ?

மஹாபாரதத்தின் துரோண பர்வத்தில், 201 வது அத்தியாயத்தில், துரோணரின் மகனான அஸ்வத்தாமா, தண்ணீரிலிருந்து எப்படி ஆக்நேயாஸ்திரம் என்ற ஒன்றைப் பாண்டவர்களின் மீது பிரயோகித்தான் என்று விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அஸ்திரத்தை அஸ்வத்தாமா எய்தவுடன் – ‘அந்த ஆயுதத்திலிருந்து அம்பு மழை அர்ஜுனனின் மீது பொழிந்தது; உலகமே இருண்டு போனது; வானத்திலிருந்து எரிகற்கள் விழுந்தன; வெப்பம் கடுமையாக அதிகரித்தது; சூரியன் கண்ணுக்கே தெரியவில்லை; ஆயிரமாயிரம் ரதங்கள் ஒரே நொடியில் எரிக்கப்பட்டன; யானைகள் செத்து விழுந்தன; சில யானைகள் வெறிகொண்டு பிளிறியபடி அங்குமிங்கும் ஓடின; பாண்டவப் படையில் இருந்த பல வீரர்கள் முற்றியும் எரிந்து சாம்பலாயினர்; மொத்தத்தில், நெருப்பின் கடவுளான அக்னி, பாண்டவர்களைக் கபளீகரம் செய்ததுபோல் இருந்தது’ – என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அத்தனை symptomகளும், ஹிரோஷிமா அல்லது நாகசாகியிலிருந்துகொண்டு நேரடி ஒளிபரப்பு செய்ததைப்போல் இருக்கிறதல்லவா?

மஹாபாரதத்தில் வரும் extra terrestrial விஷயங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று இந்த alien ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இது தவிர, அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஆப்பன்ஹீமர் – அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டு வெடிக்கப்பட்டபோது, அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று அவரைப் பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் சொன்ன quote உலகப்பிரசித்தி பெற்றது. அந்த quote, நமது பகவத்கீதையிலிருந்தே எடுக்கப்பட்டது. அர்ஜுனனுக்குத் தனது விஸ்வரூபத்தைக் கண்ணன் காண்பிக்கையில், பயத்தில் நடுநடுங்கிக்கொண்டே அர்ஜுனன் சொல்லும் ஒரு ஸ்லோகம் அது.

‘ஆயிரம் சூரியன்கள் ஒரே சமயத்தில் வானில் உதித்தால் எப்படி இருக்குமோ அப்படி உனது ஒளி என் கண்களைக் கூசவைக்கிறது’
மட்டுமல்லாமல், அப்போது கண்ணன் சொல்லிய ‘நானே காலன். உலகை அழிப்பவன்’ என்ற ஸ்லோகத்தையும் அவர் குறிப்பிட்டார்.

அவர் இந்த ஸ்லோகத்தைப் பற்றிப் பேசும் வீடியோ இங்கே காணலாம்.

அவரிடம், இதுதான் உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டுவெடிப்பா என்று பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, ‘நவீனகாலத்தில் என்றால், ஆமாம்’ என்று பதிலளித்தும் இருக்கிறார்.

இப்படி, பண்டைய காலத்தில் ந்யூக்ளியர் குண்டின் சக்தியை ஒத்த ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதே, அவைகளை பூமிக்குக் கொண்டு வந்த ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துவதாக ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இந்துமதத்தில் மட்டுமல்ல. வேறு பல மதங்களின் புராணங்களிலும் ஏலியன்களைப் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம். அப்படியே இந்தச் செய்திகள் உண்மையா டுபாக்கூரா என்றும் அலசலாம்.

தொடரும் . . . .

  Comments

13 Comments

  1. தொடர் கதை மன்னன்……
    எங்கள் அண்ணன்…….
    பதிவுலகின் புள்ளிவிவர ரமணா…..

    Reply
  2. மகாபாரதம்….புஷ்பக விமானம்……

    பறவைகள பாத்து வளந்த ஆட்களுக்கு இந்த கற்பனை எல்லாம் சாதாரணம் என்பது என் கருத்து.

    மேலும், சூரியன் – கிரகணம் குறித்த அப்ப இருந்த பார்வைகளையும் கணக்குல எடுக்கணும்ல…….

    Reply
  3. மகாபாரதம் – கற்பனை நிறைய கலந்த ஒரு விஷயம். நிச்சயம் எல்லாத்தையும் பெரிதுபடுத்திதான சொல்லி ஆகணும்..தற்குறிப்பேற்ற அணி மாதிரி.அத்த சீரியஸா பாக்கணுமா ? (ஏன் பாக்க கூடாது ? இதுவும் ஒரு பாய்ண்ட் தான்)

    Reply
  4. //அப்படியே இந்தச் செய்திகள் உண்மையா டுபாக்கூரா என்றும் அலசலாம்//எதுவாக இருந்தாலும், எப்பொழுதும் மனிதனுக்கு
    சுவாரஸ்யமான topic இது.

    Reply
  5. இன்னொரு தொடரா? கலக்குங்க தலைவா! ஆரம்பமே அமர்க்களமா இருக்கு! அப்படியே என்னோட சில நீண்ட நாள் சந்தேகங்களையும் இந்த கட்டுரை வழியா தீர்த்துக்கொள்ளலாம்னு நினைக்கிறேன்!

    Reply
  6. என் இனிய இரவு வணக்கம்,
    கலக்கிட்டே இருக்கீங்க..பல அருமையான தகவல்களை கட்டுரைகளாக தந்துக்கொண்டே இருக்கீங்க..அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி.
    எனக்கு எலியன், கடவுள், புராணம் என்று அனைத்திலுமே நம்பிக்கை இருக்கிறது.காரணம் எல்லாவற்றையும் கற்பனையாக நான் பார்ப்பதில்லை.நாம் மறந்துப்போன விடைகள் தெரியாத நிறைய கேள்விகளுக்கு பதில்கள் கண்டிப்பாக இதில் இருக்கக்கூடும்.இதை கண்டுபிடிக்க முடியாததால் பலரும் இதனை கற்பனைகளாகவும் போலியாகவும் கருதுகின்றனர்.நம்மையும் மீறிய ஏதோ ஒரு சக்தி நம்மோடு கூடவே பயனிக்கலாம் என்றே நினைக்கிறேன்..
    இந்த ஏலியன், அண்டவெளி என்று எதை பார்த்தாலும் உடனே ஞாபகத்தை எட்டுவது குப்ரிக்கின் 2001 A Space Odyssey படம்தான். . நல்ல தலைப்பை கொண்டு சுவாரஸ்யமாக தொடங்கியுள்ளீகள்.தொடரட்டும்.நன்றிகள்.

    Reply
  7. அட்டகாசமான ஆரம்பம் பாஸ். மிக சுவாரஸ்யமான விடயத்தை கையில் எடுத்திருக்கீங்க.

    சிறுவயதில் The X Files நாடகம் பார்த்ததில் இருந்து ஒரு ஈர்ப்பு இந்த டாபிக்கில் இருந்து வந்தது. உங்கள் தொடரின் மூலம் பல விடயங்களை தெரிந்து கொள்ளலாம் என நம்புகிறேன்.

    //துறுதுறுப்பான ஒரு சிறுவனுக்கு//
    நீங்க துறுதுறுப்பானவரா பாஸ்???

    கொஞ்சம் ராஜ் சிவாவின் தொடருக்கான லிங்க் தருவீங்களா?

    Reply
  8. நண்பா
    நலமா?டூர் போய் வந்தாச்சா?பயணக்கட்டுரை ஒன்னு எழுதுங்கநண்பா,ஏலியன்ஸ் பத்தி ஃபண்டாஸ்டிக்கான ரைட்டப்,நல்லா ஃப்ளோவா வந்திருக்கு,கண்டிநியூ பண்ணுங்க.நாளை அழைக்கிறேன்.

    Reply
  9. அடுத்த தொடரா:-) ரொம்ப அருமையான ஆரம்பம்.. ரொம்ப பெரிசா இருந்தாலும் படிச்சதே தெரியல..

    Reply
  10. நீங்கள் இப்போது தொடர்ந்து உள்ள கட்டுரை தொடர் மிகவும் அருமையானது. நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் உயிரினம் இருப்பதறகாண சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால் பிற சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் கண்டிப்பாக உயிரினங்கள் உண்டு என்பதே என்னுடைய முடிவு. அண்ட சராரங்களிலும் எண்ணற்ற நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. சூரியன் என்றாலும் நட்சத்திரம் என்றாலும் ஒன்றுதான். அனைத்து சூரியன்களிலும், அதாவது நட்சத்திரங்களிலும் நமது சூரிய குடும்பத்தில் உள்ளதுபோல் கிரகங்கள் உள்ளன. அதில் சில கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனை நாசா விஞ்ஞானி ஒருவர் ஓய்விற்கு பிறகு பதிவு செய்துள்ளார். பல ஆயிரம் கோடி நட்சத்திரங்களிலும்(சூரியன்)உள்ள கிரகங்களிலும் கண்டிப்பாக உயிரினங்கள் உண்டு. நமது பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்தை சென்றடைய வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதாவது நமது பூமியில் இருந்து “ஹலோ” என்று சொன்னால் நமக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தில் உள்ள கிரகத்தில் உள்ள “மனிதனை ” சென்றடைய ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொண்டு இருக்கும் ராக்கெட்டை நான் மேல கூறிய நட்சத்திரதத்திற்கு அனுப்பினால் எழுபத்தி எட்டாயிரம் ஆண்டுகள் ஆகுமாம். இதுதான் அதிவேக ராக்கெட்.

    Reply
  11. @ கொழந்த – இங்க நீங்க சொல்லிருக்குறதைத்தான் ரெண்டாவது கட்டுரையின் ஆரம்பத்துல சொல்லிருக்கேன். உண்மை – பொய் ஆகிய ரெண்டு டாபிக்லயும் எக்கச்சக்கமா தகவல்கள் கொட்டிக்கிடக்கு. ரெண்டு தரப்புல இருந்தும் பார்க்கலாம்.

    @ பிலால்ராஜா – ஆமாம். மனிதனுக்குத் தீராத சுவாரஸ்யத்தைத் தரக்கூடிய டாபிக் இது. இன்னும் சுவையான தகவல்கள் நிறைய பார்க்கப்போறோம்

    @ ganelishan – அவசியம் கேளுங்க. ஒண்ணொண்ணா அலசலாம். நன்றி

    @ குமரன் – நீங்க சொல்றதைத்தான் ஏலியன் ஆராய்ச்சியாளர்களும் சொல்றாங்க. புராணங்களில் இருக்கும் தகவல்கள் பலவற்றை ஆதாரமே இல்லாமல் கூட ஏத்துக்கமுடியும்னு. அவற்றைப்பற்றி கண்டிப்பாகப் பார்க்கப்போகிறோம். நன்றி

    @ ஹாலிவுட் ரசிகன் – ராஜ் சிவாவின் கட்டுரையைக் கண்டுபிடிப்பது ரொம்ப ஈசி. அவரோஅ கட்டுரைப் பேரை கூகிள்ல போட்டாலே தெரிஞ்சிரும். இருந்தாலும், இதோ லின்க் – http://uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=4925

    @ கீதப்ரியன் – நண்பா… மிக்க நலம். பயணக்கட்டுரை எழுத நான் என்ன ஜாக்கியா? இருந்தாலும் நீங்க சொன்னதால எழுத முயல்கிறேன் 🙂

    @ எஸ்.கே – ஆமாம். அடுத்த தொடரை ஆரம்பிச்சிட்டோம்ல 🙂

    @ Natrayan.M – நன்றி. இன்னமும் பக்கத்துப் பால் வீதிக்கே நம்மால் செல்ல முடியாத நிலையில், அவற்றில் உயிர்கள் இருக்கலாம் என்ற கற்பனையால்தான் இன்னமும் பல படங்களும் நாவல்களும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றில் உயிர்கள் இல்லை என்று தற்போது மறுக்கவே முடியாது என்பதுதான் உண்மை. அதேபோல், உயிர்கள் இருக்கிறது என்றும் அறுதியிட்டுக்கூற முடியாத நிலைமை. நீங்கள் கொடுத்துள்ள புள்ளிவிபரங்கள் மிகவும் ரசித்தேன் 🙂

    Reply
  12. yappa please “thirai kathai eluthuvathu ippadi – 14” pathivu varave illa please seekiram post pannunga boss

    Reply

Join the conversation