Amu (2005)–English (அல்லது) சீக்கியக் கொலைகள்

by Karundhel Rajesh May 5, 2011   Hindi Reviews

இந்தியாவைப் பற்றிய மக்களின் கருத்து என்ன என்று பொதுவாக ஒரு சர்வே எடுப்பதாக வைத்துக்கொள்வோம். என் கணிப்புப்படி, மக்களின் கருத்து, இப்படியாக இருக்கலாம்.

  1. இந்தியா ஒரு தெய்வீக பூமி
  2. இந்தியா ஒரு சாத்வீக நாடு
  3. இந்தியா, சக மனிதனை மதிக்கத் தெரிந்த நாடு
  4. இந்தியா, அவதார புருஷர்கள் நிரம்பிய நாடு

யாராவது ஓரிருவர், இந்தியாவைப் பற்றி வேறுவிதமாகச் சொல்லலாம். ஆனால், பொதுவான அபிப்பிராயம், மேலே கொடுக்கப்பட்டதைப் போலத்தான் இருக்கும். இருந்தாலும், மனதார எண்ணிப்பார்த்தால், இந்தியா அப்படியா இருக்கிறது? இந்தியாவில், நாம் பார்ப்பது என்ன? ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, லஞ்சம், சுரண்டல் ஆகியவற்றின் உச்சபட்ச ஆதிக்கத்தையே இங்கு பார்க்கிறோம். இவற்றுக்கு, இந்தியாவை ஆளும் அரசியல்வாதிகள் ஒரு முக்கிய காரணமாக இருப்பதும் உண்மை. இந்தியாவின் எந்த அரசியல் வி.ஐ.பியும், அவர்களது பொதுவான, கட்டமைக்கப்பட்ட இமேஜ் என்ன கூறுகிறதோ, அதற்கு நேர் எதிரான மனிதராக இருப்பதையே இதுவரை பார்த்துவந்துள்ளோம் (சில உதாரணங்கள்: நரேந்திர மோடியின் இமேஜ் சொல்வது என்னவென்றால், அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதை. ஆனால், உண்மையில், அவர் ஒரு கேடுகெட்ட கொலைகாரனாகவே இருந்திருக்கிறார். கருணாநிதியைப் பற்றிய இமேஜ், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று கூறுகிறது. ஆனால், உண்மையில், அவரது எழுத்து, படிப்பவர்களுக்கு ஒரு தண்டனையாகவே இதுவரை இருந்துள்ளது). மோடியைப் பற்றிய கருத்து, ஒரு உதாரணம். இதைப்போல், இந்தியாவின் அத்தனை அரசியல்வாதிகளையும் பற்றிப் புட்டுப் புட்டு வைத்துவிடலாம்.

இது தற்போதைய கதை. ஆனால், பல வருடங்களுக்கு முன், இந்தியாவின் கிளீன் கட்சி என்ற இமேஜை மக்களிடம் பரப்பிய காங்கிரஸ், எப்படி இருந்தது? குறிப்பாக, இந்திரா காந்தி கொலையுண்ட போது? இதற்கு உண்மையான பதில், காங்கிரஸும் ஒரு கொலைகாரக் கட்சியாகவே இருந்திருக்கிறது என்பதே. கொள்கை, லட்சியம் ஆகியவை மண்ணாங்கட்டிக்குச் சமம்; அடிப்படையில், தாங்கள் காட்டுமிராண்டிகள் மட்டுமே என்பதைத்தான் இந்தியாவின் அரசியல் கட்சிகள் இதுவரை நிரூபித்து வந்திருக்கின்றன. இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது, ‘அமு’ என்ற இந்தப் படம்.

இந்திரா காந்தி கொலையுண்ட சம்பவத்தை முதலில் பார்த்து விடலாம்.

ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்பது, நம்மில் பலருக்கும் ஓரளவாவது பரிச்சயமான ஒரு வார்த்தை. 1984ல், பஞ்சாபின் பொற்கோயிலை இந்திய ராணுவம் தாக்கிய ஒரு நிகழ்ச்சியே, ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்று அழைக்கப்படுகிறது என்பது தெரிந்திருக்கும். அது ஏன் ஐயா ஒரு கோயிலை ராணுவம் சென்று தாக்கவேண்டும்? கோயில் என்பது, மக்கள் கூடித் தொழும் இடம் ஆயிற்றே என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்புதான். வாருங்கள்; இந்தக் கேள்விக்குப் பதிலைத் தோண்டித் துருவிப் பார்க்கலாம்.

ஜர்னைல் ஸிங் பிந்தரன்வாலே.

எழுபதுகளிலும், எண்பதுகளின் மத்தியிலும், பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள், மந்திரமாக ஜெபித்த பெயர். பிந்தரன்வாலேவைப் பற்றிப் பார்க்குமுன், பஞ்சாபைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்திய சுதந்திரத்தின்போது, பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாப் என்று. மேற்கு பஞ்சாபில், முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்து வந்ததால், அது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. கிழக்கு பஞ்சாபில், சீக்கிய மற்றும் ஹிந்து மக்கள் அதிகம் வாழ்ந்துவந்ததால், அது இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், இரண்டு பஞ்சாப்களிலும், மற்ற மதத்தவர்கள் இல்லாமல் போய்விடவில்லை. ஆகையால், மேற்கு பஞ்சாபில் இருந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், கிழக்கு பஞ்சாபுக்கு வரத்துவங்க, அதேபோல் கிழக்கு பஞ்சாபில் இருந்த முஸ்லிம்கள், மேற்கு பஞ்சாபை நோக்கிப் படையெடுத்தனர். சுதந்திரத்தின்போது நடந்த இந்தப் பிரிவினையால், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். (இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள, குஷ்வந்த் சிங்கின் ‘Train to Pakistan’ நாவல் படிக்கலாம்). பஞ்சாப்பே ரத்தக்களரியாக மாறியது. மேற்கு பஞ்சாபின் தலைநகரம், லாகூர் என்று அறிவிக்கப்பட, அறுபதுகளில், கிழக்குப் பஞ்சாபின் தலைநகரம், சண்டிகராக மாறியது.

இது, பஞ்சாப் உருவான சரித்திரம். நிற்க. ‘ஷிரோமணி அகாலி தள்’ என்று ஒரு பெயரை, கட்டாயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த மாநிலமாக இருந்தாலும் சரி; அம்மாநிலத்தில், பெருத்த செல்வாக்குடைய ஒரு பிராந்தியக் கட்சி இருந்தே தீரும். அதைப்போலவே, இருபதுகளில், பல சிறிய சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட கட்சியே இந்த ‘ஷிரோமணி அகாலி தள்’. உண்மையில், இது ஒரு மதவாதக் கட்சியே ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதாப் ஸிங் கைரோன், பஞ்சாபின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில், பஞ்சாப் என்பது, இப்போதுள்ள பஞ்சாபாக இருக்கவில்லை. பஞ்சாப், தில்லி, ஹிமாச்சல் ப்ரதேஷ், ஹர்யானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் ஒன்று சேர்ந்த ஒரு பெரிய மாகாணமாகவே பஞ்சாப் இருந்தது. 1952 முதல் 1964 வரை முதல்வராக இருந்த இவரது ஆட்சியில், பஞ்சாபின் முக்கிய மாற்றங்கள் நிகந்தன என்று கூறப்பட்டாலும், ஆட்சி மொழியாக ஹிந்தியைத் திணிப்பதிலும் தீவிரமாகவே இவர் செயல்பட்டார் என்றே தெரிகிறது. அகாலி தள் கட்சி, ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி, பஞ்சாபி மொழியைப் பரிந்துரைத்து அனுப்பிய தீர்மானம், இவராலும், இந்திய அரசாலும் நிராகரிக்கப்பட, போராட்டங்கள் மறுபடி வெடித்தன. அகாலி தள்ளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக, பஞ்சாபி மொழியைப் பேசும் மாகாணம் ஒன்று – பஞ்சாபிகளை மட்டும் பெரும்பான்மையாகக் கொண்டது – உருவாக்குதல் வேண்டும் என்பதே இருந்தது. இந்நிலையில், 1964ல், முதல்வராக இருந்த கைரோன், தன் மேல் சுமத்தப்பட்ட சில ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிட்டுப் பதவி விலக, அடுத்த வருடம், ஒரு சீக்கியரால் கொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து அழுத்தம் கொடுத்த அகாலி தள்ளின் தொல்லை தாங்காமல், 1966ல், ’பஞ்சாப்’ என்ற தனி மாநிலம், மத்திய அரசினால் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பஞ்சாப், மூன்றாகப் பிரிக்கப்பட்டு, ஹிமாச்சல் பிரதேஷின் கீழே இருந்த மாநிலத்தின் ஒரு பகுதி, ஹிமாச்சல் பிரதேஷுடனேயே இணைக்கப்பட்டு, தெற்கு பஞ்சாபின் ஒரு பகுதி, ஹர்யானா என்ற மாநிலமாக்கப்பட்டு, நடுவே இருந்த பகுதி, ‘பஞ்சாப்’ என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்ற அறிவிப்பினை, மத்திய அரசு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, ஷிரோமணி அகாலிதள் கட்சி, ஆட்சிக்கும் வந்தது. ஆனால், ஆட்சியில், ஐந்தே வருடங்கள் மட்டுமே அதனால் நீடிக்க முடிந்தது. 1972ல், சட்டசபைத் தேர்தலில், வெறும் 24 ஸீட்டுகளே வாங்கி, படுதோல்வி அடைந்தது அகாலிதள். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியமைக்க, தோல்வி எதனால் நிகழ்ந்தது என்பதனை ஆராய அகாலிதள் அமைத்த கமிட்டி (இந்தக் கமிட்டியில், தற்போதைய தமிழக கவர்னர் சுர்ஜித் ஸிங் பர்னாலாவும் ஒருவர்), ‘ஆனந்த்பூர் தீர்மானம்’ என்ற ஒன்றை வெளியிட்டது. இந்தத் தீர்மானத்தில், பன்னிரண்டு உப தீர்மானங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இனிமேல் அகாலிதள், இத்தீர்மானங்களின் வழி நடக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. சுருக்கமாக, மாநில சுயாட்சியை நோக்கி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் அரசை நிர்ப்பந்திக்கும் தீர்மானமாக இது இருந்தது. கூடவே, மதத்தின் பெயரால் மக்களைப் பயிற்றுவிப்பதும், இத்தீர்மானத்தின் ஒரு முடிவு. இழந்த செல்வாக்கை, இந்த ஆனந்த்பூர் தீர்மானத்தின் மூலம் பெற்றுவிட முடியும் என்பது, அகாலிதள்ளின் நம்பிக்கையாக இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான், மேலே நாம் பார்த்த ‘ஜர்னைல் ஸிங் பிந்தரன்வாலே’ என்ற நபர், பஞ்சாபின் அரசியலில் அறிமுகமாகிறார்.

தீவிர மத நம்பிக்கை உடைய தந்தையால், பஞ்சாபின் சமயப்பள்ளிகளில் மிகப்பழமையான பள்ளியான ’தம்தாமி தக்ஸால்’ (Damdami Taksal) என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு இளைஞனே இந்த பிந்தரன்வாலே. பிந்தரன்வாலே என்பது, பட்டப்பெயர். ‘பிந்தரன்’ என்ற இடத்தில் இருந்து வந்ததால், பிந்தரன்வாலே. பஞ்சாபில், மது, புகையிலை, செக்ஸ் ஆகிய ‘கெட்ட’ விஷயங்களை விட்டுவிட்டு, சீக்கிய மதத்தைப் பின்பற்றச்சொல்லி, பல பிரசாரங்கள் இவர் மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம், ஆளும் காங்கிரஸ் அரசாலும் இந்தப் பிந்தரன்வாலே வளர்த்துவிடப்பட்டதாகவும் சில குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒருசில தொகுதிகளிலும், காங்கிரஸுக்கு ஆதரவாக இவர் பிரச்சாரமும் மேற்கொண்டிருக்கிறார். ஆனால், இவரது அரசியல் பிரவேசம், மக்களிடம் எடுபடவில்லை. தான் படித்த தம்தாமி தக்ஸாலுக்கே, தலைவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படி, பஞ்சாபின் சகல கட்சிகளும் அரசியலில் தீவிர நிலைப்பாட்டை நோக்கிச்சென்றுகொண்டிருந்த காலம்: ஆண்டு, 1978. ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் தேதி.

பஞ்சாபின் சீக்கியர்களின் ஒரு பிரிவான ‘அகண்ட் கீர்த்தனி ஜதா’ (Akand Kirthani Jatha) என்ற பிரிவு, ’நிரங்காரிகள்’ (Nirankari) என்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக, ஒரு போராட்டம் நடத்தியது. இதில், அகண்ட் கீர்த்தனி ஜதாவைச் சேர்ந்த பதிமூன்று பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, பஞ்சாபில், மதக்கலவரம், பற்றியெரியத் துவங்கியது. நிரங்காரிகளின் தலைவர் குர்பச்சன் ஸிங், கைது செய்யப்பட்டு, ஹர்யானாவைச் சேர்ந்த ஒரு நீதிமன்றத்தால் விடுவிக்கவும் படுகிறார். அந்தச் சமயத்தில், பஞ்சாப் முதல்வராக இருந்த அகாலி தள்ளின் ப்ரகாஷ் ஸிங் பாதல், இந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யாது என்று அறிவிக்கிறார். ’இது, கொலைகாரர்களைத் தப்பிக்கவைக்க, அரசு செய்யும் மோசடி; இதற்கு ஒரே தீர்வு, அரசு தண்டிக்கத்தவறிய கயவர்களை, மக்களே தண்டிப்பதுதான்’, என்று அறிவித்து, இறந்துபோன அகண்ட் கீர்த்தனி ஜதாவின் தலைவர் ஃபௌஜா ஸிங்கின் மனைவி பீபி அமர்ஜித் கௌர், பப்பர் கல்ஸா (Babbar Khalsa) என்ற பெயரில் ஒரு இயக்கம் தொடங்குகிறார். இவருக்கு முழு ஆதரவாக, தம்தானி தக்ஸாலின் தலைவரான பிந்தரன்வாலே செயல்படுகிறார். கூடவே, ‘Dal Khalsa’ என்ற அமைப்பும், அரசால் தடை செய்யப்பட்ட அகில இந்திய சீக்கிய மாணவர்கள் கூட்டமைப்பும் களத்தில் குதிக்கின்றன. இனி என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறதல்லவா? கலவரம் நடந்து சரியாக ஓராண்டு கழித்து, ஏப்ரல் 24ம் தேதி, நிரங்காரிகளின் தலைவர் குர்பச்சன் ஸிங், படுகொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையை, கொண்டாடி மகிழ்கிறார் பிந்தரன்வாலே. ஆனால், மூன்று ஆண்டுகள் கழித்து, அகண்ட் கீர்த்தனி ஜதாவைச் சேர்ந்த அர்ஜுன் ஸிங் என்பவர், கொலையை ஒப்புக்கொண்டு, கைதும் செய்யப்படுகிறார்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், லாலா ஜெகத் நாராயண் என்ற பத்திரிகை அதிபர் (Hindh Samachar) – இவர், காங்கிரஸுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தவர் – பொதுமக்களிடம், அப்போது நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பஞ்சாபியை நிராகரிக்கவும், ஹிந்தியை ஆதரிக்கவும் சொல்லி, கட்டுரைகள் எழுதுகிறார். இவரைப் பலமுறை பிந்தரன்வாலே தாக்கிப் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உண்மையான சீக்கியனும், முப்பத்து இரண்டு ஹிந்துக்களைக் கொல்ல வேண்டும் என்பது பிந்தரன்வாலேயின் கொள்கை. ஆகையால், 1981ல், இந்த லாலா ஜெகத் நாராயண் கொலை செய்யப்பட்டபோது, கொலைக்குக் காரணம் பிந்தரன்வாலேதான் என்று முடிவு செய்வதில் போலீஸுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. பிந்தரன்வாலேயின் மீது வாரண்ட் வெளியிடப்படுகிறது. தலைமறைவான பிந்தரன்வாலே, தானாகவே சரணடைவதாக அறிவித்து, சரணும் அடைகிறார். வழக்கும் நடைபெறுகிறது. உடனேயே, அக்காலத்திய இந்திய உள்துறை அமைச்சரான ஜெயில்ஸிங் (Jail singh), பிந்தரன்வாலே கொலை செய்ததற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கிறார். இதனைத்தொடர்ந்து, பிந்தரன்வாலே விடுவிக்கப்படுகிறார்.

ஹர்சரண் ஸிங் லோங்கோவால் (Harcharan sing Longowal) என்ற முதுபெரும் தலைவர், அகாலிதள்ளின் தலைவராக அழைக்கப்படுகிறார். இவர், பஞ்சாபின் பக்கம் மத்திய அரசின் கவனம் திரும்பவேண்டும் என்றும், மத்திய அரசின் உதவிப்பணிகள் பஞ்சாபுக்கு அவசியம் வேண்டும் என்றும் பல பேரணிகள் நடத்துகிறார். இந்திரா காந்தி தலைமையிலான அரசு, பிடிகொடுக்காமல் நழுவ, இவரது போராட்டங்கள் மேலும் தீவிரமடைகின்றன. பஞ்சாபெங்கும் கலவரங்கள் வெடித்துக்கொண்டிருந்த ஒரு முக்கியமான அரசியல் சூழலில், லோங்கோவால், பிந்தரன்வாலேயைச் சந்திக்கிறார். ‘இந்திய அரசுக்கு எதிரான பஞ்சாபின் ஆயுதம்’ என்று பிந்தரன்வாலேயை விளித்து, பொற்கோயிலின் உள்ளேயே இனி தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளச் சொல்லி, பிந்தரன்வாலேவுக்கு அழைப்பும் விடுக்கிறார். இதனை ஒப்புக்கொண்ட பிந்தரன்வாலே, தனது ஆயுதமேந்திய ஆட்களோடு, பொற்கோயிலின் உள்ளேயிருக்கும் குரு நானக் நிவாஸ் என்ற விருந்தினர் விடுதியை ஆக்கிரமித்துக் கொள்கிறார். பொற்கோயிலின் உள்ளிருந்தவாறே, அகாலிதள்ளின் போராட்டங்களுக்கு ஆதரவாகப் பேசியும், ஊர்வலங்கள் நடத்தியும், பஞ்சாப் மக்களின் மனதில் இடம் பிடிக்கப் பல பிரயத்தனங்களை மேற்கொள்கிறார் பிந்தரன்வாலே. இது பலனளிக்கவும் செய்கிறது. பொதுமக்களின் மத்தியில், ஒரு கதாநாயகனாக மாறுகிறார் பிந்தரன்வாலே. இதனைத் தொடர்ந்து, ஒரு தடாலடி முடிவாக, சீக்கியர்களின் ஐந்து மதரீதியான முக்கிய இடங்களில் ஒன்றான ‘அகால் தக்த்’ (Akal Takht) என்ற இடத்துக்கு, தனது ஆட்களோடு பெயர்கிறார் பிந்தரன்வாலே. இந்த அகால் தக்த் என்பது, பொற்கோயில் வளாகத்திலேயே இருக்கும் ஒரு பெரிய கோயிலாகும். பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வளாகம், அமைதியைப் போதிக்கும் சீக்கிய மதக் கோட்பாடுகளில் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிறது. இத்தகைய புனித இடத்தில், ஆயுதங்களோடு குடியேறும் அளவு பிந்தரன்வாலேவுக்கு செல்வாக்கும் இருந்தது. இந்த நிகழ்ச்சியே, இனிவரும் அனைத்து நிகழ்ச்சிக்கும் காரணமாக, இந்திய அரசினால் சித்தரிக்கப்பட்டது. பிந்தரன்வாலே பொற்கோயிலுக்குள் சென்றபின்னர், அவரது ஆட்கள் ஆடிய வெறியாட்டங்கள் கணக்கிலடங்கா. ஹிந்துக்களைக் குறிவைத்துத் தாக்கி, பல படுகொலைகளை நிகழ்த்தினர் பிந்தரன்வாலேயின் ஆட்கள். ஒரு பேருந்தை ஹைஜாக் செய்து, அதில் இருந்த ஹிந்துக்கள் அனைவரையும் கொன்று, வெறியாட்டம் ஆடியது பிந்தரன்வாலேயின் கும்பல். இதனைத்தொடர்ந்து, ஆட்சி கலைக்கப்பட்டு, பஞ்சாப், ஜனாதிபதியின் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவரப்பட்டது.

இப்போது, பஞ்சாபில் மேற்சொன்ன நிகழ்வுகளெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, தில்லியில் என்ன நடந்தது என்பதையும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

தொடக்க காலத்தில் இருந்தே, பஞ்சாபின் அகாலி தள் கொடுத்துவந்த தொல்லைகள், இந்திரா காந்தியை ஆத்திரப்படுத்தியிருந்தன. பஞ்சாபில் காங்கிரஸ் நிலையாகக் கால் ஊன்றமுடியாமல் அகாலிதள் செய்வது, அவருக்குப் பிடித்திருக்கவில்லை. இது மட்டுமல்லாது, ஹிந்துக்கள் பஞ்சாபில் தாக்கப்படுவதும், இந்திரா காந்தியின் கோபத்துக்கு ஒரு முக்கியக் காரணம். இருப்பினும், பிந்தரன்வாலேவின் வெறியாட்டங்களுக்கு ஒரு மௌன சாட்சியாகவே மத்தியில் ஆண்ட காங்கிரஸ் இருந்துவந்தது. அவரைச் சுற்றியிருந்த அரசியல் ஜால்ராக்கள் கொடுத்த ஊக்கத்தில் தொடர்ந்து பல தவறுகளைச் செய்த இந்திரா, பிந்தரன்வாலே ஆயுதங்களைப் பொற்கோயிலுக்கு உள்ளே குவித்த செய்தி கண்டு, ராணுவத்தை அனுப்பி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் திடீர் முடிவை, எந்தக் கவலையுமின்றி ஓர்நாள் எடுக்கிறார்.

ஆண்டு – 1984. ஜூன் 3ம் தேதி. பஞ்சாப் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூன் ஐந்தாம் தேதி, இந்திய ராணுவம், பொற்கோயிலைச் சுற்றிவளைத்தது. நடந்த தாக்குதலில், இறுதியாக பிந்தரன்வாலே கொல்லப்பட, பொற்கோயில், இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்துவிட்டது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 550 என்பது, நடுநிலையான பத்திரிகைகளின் கணிப்பு. இது தவிர, கிட்டத்தட்ட நூறு ஜவான்களும் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகள் ஆடிய வெறியாட்டத்துக்குச் சற்றும் சளைக்காமல், ராணுவம் ஆடிய இந்த வெறியாட்டத்தின் காரணமாக, அரசியலில் பல அத்தியாயங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் இந்திரா காந்தி இறக்க நேரிட்டது. அதைவிட முக்கியமாக, மொத்தம் 5000 சீக்கியர்கள் கொல்லப்படவும் நேர்ந்தது. அதன்பின்னர், பஞ்சாபில், தீவிரவாதம் தலைவிரித்து ஆட, நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலிகள் நேர்ந்தன. இத்தனைக்கும் காரணம், இந்திரா காந்தி எடுத்த அவசர முடிவு.

ஏன் இந்த முடிவை இந்திரா காந்தி எடுக்க வேண்டும்? இதற்கு விடையாகத்தான், மேலே சில காரணங்களைப் பார்த்தோம்.

இவ்வளவு நீண்ட முன்னோட்டத்தைக் கொடுத்துவிட்டுத்தான், ‘அமு’ படத்தைப் பற்றிப் பார்க்கவேண்டியிருக்கிறது.

அமெரிக்காவில் படித்த கஜோரி ராய் என்ற பெண், இந்தியாவுக்கு வருகிறாள். இந்தியாவின் வறுமையைப் பற்றியும், அதன் துயர முகங்களைப் பற்றியும் படம் எடுப்பதே அவளது நோக்கம். மெல்ல தில்லியின் ஸ்லம்களுக்குச் செல்கிறாள். கூடவே வருவது, கபீர் என்ற இளைஞன். அப்படி ஒரு நாள், ஒரு குடிசைப்பகுதியில் சென்று படமெடுத்துக்கொண்டிருக்கையில், அந்த இடங்களையெல்லாம் எங்கோ பார்த்தது போலவே அவளுக்குத் தோன்ற, வீட்டுக்குச் செல்லும் கஜோரி, அப்பொழுதுதான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள தனது தாயிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்கிறாள். மழுப்பும் தாயினால், ஒரு கட்டத்தில் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடிவதில்லை. கஜோரி, ஒரு குப்பத்தில் இருந்து தத்தெடுக்கப்பட்டதை விளக்கும் தாய், தில்லியில் 1984ல் நடந்த கலவரத்தின்போது அவளது பெற்றோர் இருவரும் கொலைசெய்யப்பட்டதையும் சொல்கிறாள். அப்போதுதான் இன்னொரு உண்மையும் அவளுக்குத் தெரிகிறது. கபீரின் தந்தைதான், அரசின் சார்பில் இந்தக் கலவரங்களை ஏற்பாடு செய்தவர். அவருக்கு ஆணைகள் இட்டது, சில அமைச்சர்கள். இந்தக் கலவரத்துக்குக் காரணம், இந்திரா காந்தி கொலையுண்டதே. படத்தின் இறுதியில், பாதிக்கப்பட்ட இந்த இருவரும் நடந்து செல்வதோடு படம் முடிகிறது.

படத்தின் கதை, ஒரு பத்தியில் அடங்கிவிட்டாலும், படத்தை எடுத்திருக்கும் விதம், அபாரம். மெல்ல மெல்ல கஜோரியின் வாயிலாக, கலவரத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது இப்படம். அதேபோல், கொலைகளில் அரசியல்வாதிகளின் பங்கையும் செருப்பால் அடிப்பது போல எடுத்துரைக்கிறது இப்படம். எனக்கு என்ன அச்சரியம் என்றால், இப்படத்தை எப்படி இந்தியாவில் அனுமதித்தார்கள் என்பதே.

படத்தை விட்டுவிட்டு, உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம். இந்திரா கொலையுண்டபோது, அவரது மகன் ராஜீவ் காந்தி சொன்னதை மறக்க இயலுமா? ’ஒரு பெரிய மரம் சரியும்போது, கீழேயிருக்கும் நிலம் அதிர்வது தவிர்க்கமுடியாது’ என்று அறிக்கை விட்ட நல்லவரல்லவா அவர்? அவர் இப்படிச் சொல்லக் காரணம், ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தில்லியில் காங்கிரஸ்காரர்களால் கொல்லப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போர்வை. உண்மையிலேயே, குஷ்வந்த் ஸிங் மற்றும் வேறு பல நடுநிலையாளர்கள் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்கையில், அச்சமயத்தில் தில்லி எப்படியிருந்திருக்கும் என்று அறியமுடிகிறது. இக்கொலைகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள், ஜெக்தீஷ் டைட்லர்( Jagdish Tytler), சஜ்ஜன் குமார் (Sajjan Kumar), ஹெச்.கே.எல். பகத் (H.K.L Bagath), தரம்தாஸ் சாஸ்திரி (Daramdas Sastry) ஆகிய காங்கிரஸ் அமைச்சர்களே, இக்கொலைகளில் பெரும்பங்கு வகித்தவர்கள் என்ற உண்மையையும் நாம் அறிவோம். எப்படி குஜராத்தில் மோடியின் அரசு, முஸ்லிம்களின் மீது வெறியாட்டம் ஆடியதோ, அதேபோல், காங்கிரஸ் அரசு, சீக்கியர்களைப் படுகொலை செய்தது. அதேபோல், இரண்டு நிகழ்ச்சிகளிலும், போலீஸ்துறை, கண்களை மூடிக்கொண்டதும் நடந்தது. தில்லிக் கலவரம் பற்றிய வழக்குகள் இன்னமும் நடைபெற்றுவருகின்றன. இனிமேலும் நூறு ஆண்டுகள் ஆனாலும், இதே நிலைதான் தொடரும். அதேபோல்தான் குஜராத்திலும் நடக்கும். இந்தியாவின் எந்தக் கட்சியானாலும் சரி (கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கல்ல), அவற்றின் அடிப்படையான நிலைப்பாடு, தாங்கள் காட்டுமிராண்டிகள் என்பதுதான். எல்லாருமே கொலைகாரர்கள்தான். அதே சமயத்தில், பஞ்சாபில் சீக்கியர்கள் செய்தது முற்றிலும் சரி என்றும் நான் சொல்ல வரவில்லை. இதேதான் குஜராத்தில் முஸ்லிம்களுக்கும். தவறு இரு தரப்பிலுமே இருந்துள்ளது. இருப்பினும், செய்த தவறுக்கு சீக்கியர்களும் சரி, முஸ்லிம்களும் சரி, கொடுத்த விலை மிக மிக அதிகம் என்பதே நடுநிலையான உண்மை.

சரி. இந்தக் கொலைகாரக் கட்சிகளை ஒழிப்பது எப்படி? யாராவது மிஸ்டர் க்ளீன் அரசியல்வாதி வந்தால் தான் உண்டு. ஆனால், அது இன்னும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு நடக்காது. அதுவரை, இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகளைச் சகித்துக்கொண்டு வாழவேண்டியதுதான்.

Amu படத்தின் டிரெய்லர் இங்கே.

பி.கு – படத்தில், அமுவின் தாயாக நடித்திருப்பது, பிருந்தா காரத் !

  Comments

29 Comments

  1. இதன் பிண்ணியில் இருக்கும் எந்த அரசியலும் எனக்கு தெரியாது.. படத்தை பார்க்கிறேன்.. நல்லா எழுதிருக்கிங்க…

    Reply
  2. யோவ் லக்கி லிமட் படிச்சுட்டு எழுதுய்யா. 6ச்சும் படிக்கணும்னு கஷ்டப்பட்டு பாரா பாராவா தல கருந்தேள் எழுதி கீறார். படிக்காம போனா எப்படி.. எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு வந்து சொச்சத்தையும் படிக்கிறேன்.. ஆனால் தல கருந்தேள் உண்மையிலேயே உங்களுக்கு நல்ல மனசு. இம்மாம் பெர்சு பெர்சா பாரா பாராவா ரைட்டிருக்கீங்களே! க்ரே8டுன்னேன்

    Reply
  3. இந்தப்படம் இவ்வளவு முக்கியமான படமா?மிஸ் பண்ணாம பார்க்கணும்.பிந்திரன் வாலேயை ஆரம்பத்தில் வளர்த்து விட்டவர் இந்திரா காந்தி.அதற்க்கான விலையை கொடுத்தார்.தொடர்ந்து இது போல வித்தியாசமான இந்தியப்படங்களை அறிமுகப்படுத்துங்கள்.நன்றி ராஜேஷ்.

    Reply
  4. உங்களது மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று…..

    Reply
  5. @ராமசாமி மற்றும் இதன் பின்னணி குறித்து தெரிந்து கொள்ள நினைப்பவர்கள், இந்த டாகுமெண்டரியை பார்த்தல் நலம்..

    1984:A Sikh Story -http://www.youtube.com/watch?v=HPFwxY9hiaY

    Operation Bluestar – Sikh Holocaust: http://www.youtube.com/watch?v=WqqXkBKAeoU

    Reply
  6. boss…நீங்க நம்புறீங்களோ இல்லையோ..முந்தாநாள் தான் மேற்கூறிய ரெண்டு டாகுமெண்டரியையும் பாத்தேன்…என்ன ஒண்ணு அதுவந்து கல்சா அமைப்பு ஆதரவாளர்கள் எடுத்த டாகு மாதிரி தெரியுது……நீங்க பாத்துட்டீங்களா…..கருத்து?

    Reply
  7. //இந்தியாவின் எந்தக் கட்சியானாலும் சரி (கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கல்ல), அவற்றின் அடிப்படையான நிலைப்பாடு, தாங்கள் காட்டுமிராண்டிகள் என்பதுதான். //

    இந்தியாவை பொறுத்தவரை,அரசியல்வாதிகளும்,பணக்காரர்களும் மிகவும் அயோக்கியர்கள்.ஆனால், மக்கள் எல்லோருமே உத்தமர்கள் என்பதே கருத்தாக இருந்திருக்கிறது,இருக்கிறது. ஆனால், உண்மையை பார்த்தோமானால், மதவெறி, ஜாதிவெறி, ஊழல் ஆகியவற்றில் மக்கள் அரசியல்வாதிகளை விட மோசம் என்பதே.எவ்வளவு படித்திருந்தாலும், இன்னமும் ‘அவன் அந்த ஜாதி அதான் அந்த புத்தி’ என்று சொல்பவர்களே அதிகம். ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.

    The poor are no better than the rich.They are exactly the same, except that they are broke.

    இவர்களை மேலும் தூண்டிவிட்டு லாபம் அடைவது மட்டுமே அரசியல்வாதி செய்யும் அயோக்கியத்தனம். உற்றுப் பார்ப்போமானால், மாற்றம் வேண்டியது அரசியலில் இல்லை. மக்களிடம். இது இப்படி இருக்க, படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று ஒரு கருத்து இப்போது நிலவுகிறது. வேற வினையே வேண்டாம்.

    Reply
  8. பதிவை பற்றி, மிகச் சிறப்பான பதிவு.Very informative. One of your best.

    Reply
  9. நண்பா
    தெய்வத்தாய்,பதிவிரதை,நேருவின் முறையான மகள் தானை தலைவி இந்திராவை நினைத்தாலே எனக்கு வாயும் குதமும் பற்றி எரிகிறது,எதாவது ஏடாகூடமாக எழுதிவிடப்போகிறேன் என்று அடக்கிக்கொண்டு வெளிநடப்பு செய்கிறேன்.
    இவரின் முகமூடி கிழிக்கும் இப்படத்துக்கு விளம்பரம் செய்யப்படவேயில்லை,தவிர மிகுந்த கொலைமிரட்டல்களாலும் உருட்டல்களாலும் திரையரங்குகளில் காட்டப்படவுமில்லை,மக்கள் பார்க்க வந்தாலும் பார்க்க விடப்படவுமில்லை,காங்கிரஸின் சுயரூபம் பற்றி தெரிந்துகொள்ள ஒருவர் இந்த படம் பார்க்க வேண்டும்,பிறவி என்னும் ஷாஜி கருண் இயக்கிய எமர்ஜென்சி காலத்தில் வெளி ஊரில் இருந்து வீட்டுக்கு வந்து இறங்கிய மகனை போலீசார் தீவிரவாதி என்று சந்தேகித்து லாக்கப் டெத் செய்துவிட அவனை தேடி அலையும் ஒரு தந்தையின் கதையான பிறவி என்னும் படம் பார்க்க வேண்டும்.இது போல பல பிறவிகள் கொடிய எமர்ஜென்சி காலகட்டத்தில் கனநேரத்தில் பறிபோனது.சுதிர் மிஷ்ரா இயக்குய Hazaaron Khwaishein Aisi மிக அருமையான படம்,அதில் கடைசி ஷைனி அகுஜாவின் நண்பரை என்கவுண்டர் செய்ய உத்தரவிடப்பட்ட போலீசார்,அவர் தப்பிவிட அப்பாவியாக விபத்துக்குள்ளாகி படுத்திருக்கும் ஷைனி அகுஜாவை வயலுக்கு கூட்டிப்போய் துப்பாக்கி வேலைசெய்யாததால்,அதை வைத்தே மண்டையை உடைக்கும் காட்சி தான் ஹைலைட்.ஒரு சோற்றுப்பதம்.கருங்காலி பயல்கள்.

    Reply
  10. தயவுசெய்து அரசியலை பற்றி முழுமையாக தெரிந்தாலோ இல்லை இந்திய கட்டமைப்புகள் பற்றி அறிவு இருந்தால் எழுது பாஸ்.இப்படி அரைகுறையாக படத்தை மட்டும் பார்த்து எழுத வேண்டாம். இந்த ஒரு பதிவு போதும் நீ சொல்ற அதே சைபர் கிரைம் போலிசை கொண்டு உன்மேல் நடவடிக்கை எடுக்கமுடியும். இந்த பதிவுக்கு உனக்கு ஜால்ராக்கள் வேற.

    Reply
  11. மிக அருமையான விமர்சனம் . நீண்ட வரலாற்றை எளிமையாக சொன்னதற்கு நன்றி. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

    Reply
  12. For those who are interested in seeing films as this, do watch Waltz with Bashir.

    Reply
  13. @pink தமிழன்…..

    //இந்திய கட்டமைப்புகள் பற்றி அறிவு இருந்தால்//

    பாஸ்…இருந்தாலும் உங்களுக்கு ரொம்பதான் அக்குறும்பு……இந்திய கட்டமைப்புகள் பத்தி…கருந்தேளுக்கு எப்புடி தெரியும்….நம்ம கீதப்பிரியன்ட கேளுங்க..அவுரு கட்டமைப்பு – கட்டடம் – கட்டிடம் எல்லாம் குறித்து சொல்லுவார்…

    என் அறிவுக்கு எட்டிய வரையில் சிறந்த கட்டமைப்புன்னா கோல்கொண்ட, தாசுமஹால் இதுதா தெரியும்…

    Reply
  14. //இந்த பதிவுக்கு உனக்கு ஜால்ராக்கள் வேற//

    பாருங்க…கீதப்பிரியன், இலுமி, ராமசாமி,உ.சி.ர இன்ன பிற ஆட்களே..உங்களத்தான் சொல்றார்….

    //இந்த ஒரு பதிவு போதும் நீ சொல்ற அதே சைபர் கிரைம் போலிசை கொண்டு உன்மேல் நடவடிக்கை எடுக்கமுடியும்//
    வாவ்…..wonderful..marvelous..beautiful….what an i.q, e.q…..ஜெய்சங்கருக்கு அப்புறம் காலியாக இருக்கும் தென்னகத்து ஜேம்ஸ்பூண்டு சீ..பாண்ட்…..பட்டத்துக்கு சரியான ஆள் கெடச்சாச்சு……..

    Reply
  15. one of the good post scorp. very informative. நான் இதைப்பத்தி நிறைய தெரிஞ்சுக்கனும் நினைச்சிருந்தேன். இந்திராகாந்தி கொல்லப்பட்டதற்கு காரணம், பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்பியதுதான் என்பது வரைமட்டுமே தெரியும். அதன்பின்னணிபற்றி தெரிந்து கொள்ள நிறைய பஞ்சாபி நண்பர்களிடம் நேரடியாக கேட்டும் கூட விவரமான பதில் கிடைக்கவில்லை. நீங்க புட்டு புட்டு வச்சுட்டிங்க…. நன்றி. முஸ்லீம்களும், சீக்கியர்களும் மட்டுமல்ல பொதுவாக அரசியல்வாதிகள் எடுக்கும் சில தவறான முடிவுகளுக்கு பொதுமக்கள் அனைவருமே கொடுக்கும் விலை பெரியதுதான்.

    Reply
  16. @ ”பிங்க்” தமிழன்:- “சைபர் கிரைம் போலிசை கொண்டு உன்மேல் நடவடிக்கை எடுக்கமுடியும்.” – என்னா பாஸ் இதுக்குனா ஆத்திரபட்டுகிட்டு,தொழில்ல பொறுமைதான ரொம்ப முக்கியம்.

    இந்திய கட்டிட சாரி கட்டட அமைப்பு பத்தி நீங்க கொஞ்சம் தெளிவா எழுதி லிங்க் கொடு தமிழா – அப்புறமா உங்க லிங்க்க படிச்சிட்டு சைபர் கிரைம்கு போறோம்…,

    Reply
  17. good post.

    keep it up.

    expecting more from u.

    Reply
  18. செம போஸ்டூ தல….படிக்க படிக்க எங்கையோ போகுது…கண்டிப்பாக படத்தை பார்திடனும் !

    வாழ்த்துக்கள் தல 😉

    Reply
  19. தலைவரே, முட்டையிட்ட கோழிக்குத்தான் பொச்சரிப்பு தெரியும். இது எங்க ஊர் பழமொழி. படத்தை மட்டும் பார்த்து, நரேந்திர மோடி ஒரு மொள்ள மாரி, முடிச்சவிக்கி என்று கூறுவது உங்களை போன்ற சிறந்த ஒரு ப்லோக்கேருக்கு அழகல்ல. “one man’s meat is another man’s poison”. இது உங்களுக்கு தெரியாதது அல்ல. நீங்கள் மனு சாஸ்திரம் படிக்கவில்லை. அது ஒரு மிக பெரிய மனோ தத்துவ நூல். உதாரணமாக, அது கூறுகிறது, பொய் சொல்லுவது பாவம், ஆனால் ஒரு உயிரை காப்பாற்ற பொய் சொல்லுவது தர்மம். பசுவை கொள்வது பாவம், ஆனால் முட்ட வரும் பசுவை கொல்வது தர்மம். “it is a crisis management tool, an incident management tool that tells you what to do without any guilt”. ஏதோ எங்க வீட்டுகாரரும் அரண்மனை சேவகம் செய்யுறாரு, என்பது போன்ற நிலை உங்களுக்கு தேவை இல்லை.

    Reply
  20. I saw the film recently and didnt know the behind scenes of Punjab Sikhs leaders.Very detailed review.. Good one..

    Reply
  21. சூப்பர் பதிவு தல… ரொம்ப நல்ல இருக்கு…one of ur best.. நம்ம தங்க பாலு க்கு கூட தெரியாத பல விஷயத்த இதுல சொல்லிருகீங்க ..@கொழந்த பாத்து யா cowboy குதிரைல வேலூர் வந்து டப்பு டப்பு ன்னு சுட்டுற போறாரு…

    Reply
  22. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

    Share

    Reply
  23. பிரபல பதிவர்ன்னா போட்ட கமென்ட்களுக்கு பதில் போட மாட்டாங்களாமே…அப்புடியா….

    Reply
  24. இங்கே பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நாளை, விரிவாக கமெண்டுகளுக்குப் பதிலளிப்பேன். பொறுத்தருளவும்

    Reply

Join the conversation