Fade In முதல் Fade Out வரை – 25 : Robert Mckee – 4

by Karundhel Rajesh November 20, 2014   Fade in to Fade out

இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்கள்:

1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை

2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder

3. Robert Mckee பற்றிய அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Robert  Mckee


ராபர்ட் மெக்கீயின் புத்தகத்தின் அறிமுகத்தை சென்ற வாரம் முடித்தோம். இனி, அவரது முதல் அத்தியாயம் இங்கிருந்து தொடங்குகிறது.

Chapter 1 – The Story Problem

The Decline of Story

மனித வாழ்க்கையின் ஒரே ஒரு நாளை எடுத்துக்கொள்வோம். இந்த ஒரு நாளில் உலகெங்கும் எத்தனை புத்தகங்கள் புரட்டப்படுகின்றன? எத்தனை வரிகள் படிக்கப்படுகின்றன? எத்தனை வதந்திகள் கசிகின்றன? எத்தனை தாய்மார்கள் அவர்களின் குழந்தைகளுக்குக் கதைசொல்லித் தூங்கவைக்கிறார்கள்? எத்தனை மனிதர்கள் மதுபானக் கடைகளிலும் பப்களிலும் எத்தனையெத்தனை சம்பவங்களை உடனிருப்பவர்களிடம் பகிர்கிறார்கள்? எத்தனைபேர் தங்கள் மேலதிகாரிகளிடம் தாமதமாக வந்ததற்கோ அல்லது விடுப்பு எடுப்பதற்கோ பலவிதமான கதைகளைக் கற்பனை செய்து சொல்கிறார்கள்? எத்தனை வலைப்பூக்கள் எழுதப்படுகின்றன? எத்தனை கதைகள்? எத்தனை வார்த்தைகள்? எத்தனை கற்பனைகள்?

யோசித்துப் பார்த்தால், உலகம் முழுவதும் எல்லாருக்குமே கதைகள் சொல்வதில் ஈடுபாடு உண்டு என்று புரிகிறது. அந்தக் கதைகளில் பல, கேட்பதற்கும் சுவாரஸ்யமானவை. நமது நண்பர்களுக்கு நடந்த சம்பவங்களை லேசாக நமது சொந்தச் சரக்கு கலந்து நாம் சொல்வதெல்லாம் எதற்காக? அந்த நேரத்தில் அதைக் கேட்பவர்கள் நம்மைக் கண்டு வியக்கவேண்டும் என்பதற்காகத்தானே? அந்த நேரத்தில் அந்த இடத்தைக் கலகலப்பாக்கவேண்டும் என்றேதான் இவைகளைச் சொல்கிறோம். அதே நேரத்தில் அப்படிச் சொல்லும்போது அவர்கள் நம்மைப் பார்த்து ‘அட’ போடவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

ஆக, எல்லாருக்குமே கதைசொல்லியாக இருக்கவேண்டும் என்ற முனைப்பு தன்னிச்சையாகவே வந்துவிடுகிறது. ஆனால் இவற்றை ஒரு இடத்தில் அமர்ந்து பேப்பரிலோ அல்லது கணிணியிலோ தட்டவேண்டும் என்றால்தான் பிரச்னை. தடுக்குகிறது. நண்பர்களிடம் பேசுகையில் ஓரிரண்டு சம்பவங்களைக் கோர்வையாக, சுவாரஸ்யமாக நம்மால் சொல்ல முடிந்தாலும் வரிசையான சம்பவங்களைக் கோர்த்துத் திரைக்கதையோ நாவலோ எழுதவேண்டும் என்றால்தான் கஷ்டம்.

இது ஒருபுறம். மறுபுறம், ஒவ்வொரு நாளுமே வாழ்க்கையை எப்படி சரியாக வாழ்வது என்ற கேள்வியும் நமது மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. சந்தோஷம், கோபம், காதல், கவலை போன்ற அடிப்படை உணர்ச்சிகளால் எப்போதுபார்த்தாலும் கட்டுண்டு, வாழ்க்கையை தினந்தோறும் ஒவ்வொரு அடியாக வைத்துக் கடக்கிறோம். ‘ஒரு மனிதன் தனது வாழ்க்கையை எப்படிக் கழிப்பது?’ என்பது அரிஸ்டாட்டில் அவரது Ethics என்ற புத்தகத்தில் எழுப்பிய கேள்வி. இதற்கான விடையாக, நான்கு அம்சங்கள் சொல்லப்படுகின்றன. தத்துவம், விஞ்ஞானம், மதம் மற்றும் கலை. இவற்றில்தான் மனிதவாழ்வின் சாரம் உள்ளது என்பதே அரிஸ்டாட்டிலின் கேள்விக்கு விடை. ஆனால், தற்போதைய நாட்களில் இவைகளில் எவற்றில் மனிதன் இன்பம் காண்கிறான் என்று பார்த்தோமானால், தத்துவம் எப்போதும் பிரச்னையில்தான் முடிகிறது. இயல்பான வாழ்க்கையில் யாரும் தத்துவத்தின் பக்கமே போவதில்லை. பிரச்னை வந்தால்மட்டும்தான் தத்துவம். விஞ்ஞானம் எப்படி மனிதனின் வாழ்க்கையை இன்பமாகக் கடக்க உதவும்? மதம் இப்போது எப்படி இருக்கிறது என்பது எல்லாருக்குமே தெரியும். இவற்றிலெல்லாம் முழுமையான இன்பத்தை சாதாரண மனிதனால் காணமுடியாதபோது, கலை ஒன்றுதான் அவனது உதவிக்கு வருகிறது.

என்னதான் ஒரு திரைப்படத்தைப் பொழுதுபோக்குக்குப் பார்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும், அதில் நம்மால் ஒன்றிவிடமுடியும்போது எத்தனை உணர்வுகளை அது கிளப்புகிறது? இதுவேதான் கதை, கட்டுரை, கவிதை, இசை, ஓவியம் போன்ற பிற கலைவடிவங்களுக்கும் பொருந்தும். ஆக, மனிதனை அவநது தளைகளில் இருந்து விடுவித்து அவனது நிலையை உயர்த்துவது கலையால் சாத்தியம். இப்படி ஒரு திருப்தியான, மனதை நெகிழவைக்கும் அனுபவம் வேண்டும் என்றுதான் தினந்தோறும் இணையம், புத்தகங்கள், நண்பர்கள் ஆகியவர்கள்மூலம் நல்ல படங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம். படம் பார்த்து முடிக்கும்போது அந்தப் படம் உள்ளே எதையாவது அசைத்திருக்கவேண்டும் என்பதுதான் திரை ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த அனுபவம் முழுமையாகக் கிடைத்தால் அந்தப் படம் நமது மனதில் ஒரு அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றுவிடுகிறது. Shawshank redemption, Seven, Forrest Gump, Road to Perdition, Schiendler’s List, Amelie, Life is Beautiful, The Shining, Memories of Murder, Kikujiro, Pulp Fiction, Snatch, Meghe Dhaka Thara என்று ஆயிரம் படங்களை எழுதலாம். இவையெல்லாமே அப்படிப்பட்டவைதான்.

அதுவே, படம் நம்மை அசைக்கத் தவறும்போது நமது மனதில் எப்படிப்பட்ட எண்ணம் எழுகிறது? பல சமயங்களில் விளம்பரங்கள், வாழ்மொழி வார்த்தைகள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியவர்களால் கவரப்பட்டு நாம் பார்க்கும் படங்கள் நமக்குப் பிடிக்காவிட்டால் எப்படியெல்லாம் நமது தேர்வை நியாயப்படுத்துகிறோம்? ‘இசை செம்மையா இருக்கு மச்சி…கேமரா சூப்பர்..’என்றெல்லாம் சொல்லி, நமது தேர்வை நாம் சரியென்று நிரூபிக்கவே முயல்கிறோம். ஆனால் உள்ளூற நமக்கு அந்தப் படைப்பின்மீது வருத்தமோ கோபமோதான் மிஞ்சுகிறது. இதற்கும் அரிஸ்டாட்டில் பதில் சொல்லியிருக்கிறார். ‘கலை எப்போது பொய்த்து மலினமாக மாறுகிறதோ, அப்போது சமுதாயத்தில் அழிவும் சீர்கேடுமே மிஞ்சுகின்றன’ என்பது அவரது வாக்கு. இப்படிப்பட்ட போலியான படங்கள் தொடர்ந்து வெளியாகும்போது மக்களின் ரசனையும் அதற்கேற்றபடி தரமில்லாததாக மாறி, இந்தப் போலிப் படைப்புகளை வழிபடும் வெறியர் கூட்டமாக மாறுகிறது (தமிழ் நாட்டைப் பற்றித் தத்ரூபமாக எப்போதோ அரிஸ்டாட்டில் சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?). சுருக்கமாக: வெளிப்படையான, உண்மையுள்ள, சமுதாயத்தை மாற்றும் வல்லமை படைத்த கலை ஒரு நாட்டில் இல்லையென்றால் அந்த நாட்டின் சமுதாயம் மெல்ல அழிந்துவிடும்.

ஹாலிவுட்டை எடுத்துக்கொண்டால், ஒரு வருடத்தில் 400ல் இருந்து 500 படங்கள் வரை எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு ஒரு படம். அவற்றில் பல படங்கள் அலுப்பானவையே. இவற்றுக்குக் காரணம், எப்போதுமே திரைப்பட நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஆயிரக்கணக்கான திரைக்கதைகளை எப்போதும் அலசிக்கொண்டும் அவற்றுக்குள் நல்ல கதைகளைத் தேடிக்கொண்டும் இருக்கின்றனர். அவற்றில் கிட்டத்தட்ட 50% நல்ல கதையாக இருந்தாலுமே அவற்றைத் தூசு தட்டி எடுத்துத் திரைப்படமாக்க முயற்சிக்கின்றனர். அவைதான் இப்படிப்பட்ட அரைகுறைப் படங்களாக வந்துவிடுகின்றன.

தொண்ணூறுகளில் ஹாலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் 500 மில்லியன் டாலர்கள் திரைக்கதைகளுக்கு மட்டுமே செலவழிக்கப்பட்டன. இப்போது அது இன்னும் அதிகம். இந்தப் பணத்தில் எழுபத்தைந்து சதவிகிதம், திரைக்கதைகளை இன்னும் நன்றாக மாற்றி எழுதவே உபயோகப்படுகிறது. ஆனால் அவைகள் திரைப்படங்களாக எடுக்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அவற்றில் பல திரைக்கதைகள் பலமுறை மாற்றீ எழுதப்பட்டும் இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன.

இதுதான் ஹாலிவுட்டின் நிதர்சனம். கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர்கள் செலவழிந்துமே நாம் இப்போது பார்க்கும் இதே அரைகுறைப் படங்களைத்தான் ஹாலிவுட்டால் எடுக்க முடிந்திருக்கிறது. எப்போதாவதுதான் அங்கே நல்ல படம் வருகிறது. இதனால் என்ன தெரிகிறது என்றால், இதைவிடச் சிறந்த திரைக்கதைகள் அங்கே வருவது கடினம் என்பதுதான். அதுவுமே பலமுறை மாற்றி எழுதப்பட்ட திரைக்கதைகள்தான் இப்படிப்பட்ட படங்களாக வருகின்றன என்பதை மறவாதீர்கள்.

இப்படிப்பட்ட உண்மை முகத்தில் அறைந்தாலுமே, இன்னும் அங்கே பல திரைக்கதையாசிரியர்கள், தங்களது திறமையை ஹாலிவுட் மதிப்பதில்லை என்று இன்னும் ஹாலிவுட்டைத் திட்டிக்கொண்டே வாழ்கிறார்கள். அதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்பது மெக்கீயின் கருத்து. சிறந்த திரைக்கதை ஒன்று எந்த மூலையில் ஒளிந்துகொண்டிருந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றை எப்படியாவது வெளியே எடுத்துவிடும் திறமை படைத்தவை. இதனால் அதிர்ஷ்டமின்மை, மறக்கப்பட்ட திறமை ஆகியவையெல்லாம் ஹாலிவுட்டில் சாத்தியமில்லை என்று அடித்துச் சொல்கிறார் மெக்கீ. ஹாலிவுட்டின் தரம் வருடாவருடம் தேய்ந்துவருவதற்குக் காரணம், சிறந்த திரைக்கதைகள் ஒவ்வொரு வருடமும் குறைந்துகொண்டே வருவதுதான் என்பது அவரது கருத்து. சிறப்பான திரைக்கதையாசிரியர்கள் அங்கே மெல்ல மறைந்துகொண்டிருக்கிறார்கள். காரணம் ஓரளவு நல்ல திரைக்கதையாக இருந்தாலும் பெரும்பணம் கொடுத்தே அது வாங்கப்படுகிறது. இதனால் இப்படிப்பட்ட சராசரித் திரைக்கதைகளை எழுதி வருடாவருடம் டாலர்களை சம்பாதிப்பவர்கள் அங்கே பெருகி வருகிறார்கள்.

ஹாலிவுட் உலகின் பெரிய தயாரிப்பு மையமாக இருப்பதற்கு இன்னொரு காரணம், அதற்குப் போட்டி இல்லாமல் போனதே. அறுபதுகளிலும் ஐம்பதுகளிலும் ஐரோப்பிய சினிமா ஹாலிவுட்டுக்கு சரிசமமாக வளர்ந்தது. ஆனால் ஐரோப்பிய சினிமாவின் பிதாமகர்கள் மெல்ல மறைய ஆரம்பிக்க, ஹாலிவுட் இன்னும் பெரிதாக வளர்ந்தது. இருந்தாலும், தற்போது ஆசியத் திரைப்படங்கள் ஹாலிவுட்டுக்குப் போட்டியாக மெல்ல வளர ஆரம்பித்திருக்கின்றன என்பது மெக்கீயின் கருத்து. குறிப்பாகக் கொரியன் படங்கள். விரைவில் அவை பிரம்மாண்டமாக வளரலாம். ஆசியப் படங்களில் கதைசொல்லல் கச்சிதமாக இருக்கிறது என்பது மெக்கீ சொல்லும் உண்மை.

சரி. இப்போது இந்த வீடியோவைப் பாருங்கள். இதில் மெக்கீ சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். இதைத்தான் புத்தகம் முழுக்கவே ஆங்காங்கே அவர் சொல்வது வழக்கம். ஸிட் ஃபீல்டுக்கு நேர் எதிரான கருத்து. இருந்தாலும், நான் அடிக்கடி சொல்வதைப் போல், ஒவ்வொரு திரைக்கதையாசிரியரும் சொல்வதைக் கவனிக்கவேண்டும். பின்னர் நமக்கு எது சரிப்படுமோ அதைச் செய்யவேண்டும். எனவே மெக்கீ சொல்வதை நன்றாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

தொடர்வோம்…

  Comments

2 Comments

  1. rajesh k

    Dear karundhel,
    I am regular reader, fan. Thanks for all your reviews and screenplay lessons, but I cannot view and read full page only vertical lines in mobiles. Please correct these.

    Thanks
    Regards
    Rajesh K

    Reply
  2. kavinilavan

    kuppaigalum koodigal aavadhu holywoodil mattume mudium.

    Reply

Join the conversation