Prince of Persia: The Forgotten Sands (2010) – Game Review

by Karundhel Rajesh May 2, 2011   Game Reviews

பி.ஸி கேம்களின் மீது எனக்கு உள்ள விருப்பம், அளவில்லாதது. ஆகையால், இதுவரை பல கேம்களை விளையாடியிருக்கிறேன். அப்படி விளையாடியவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கே எழுதியும் இருக்கிறேன். மிகச்சமீபத்தில் வாங்கி, விளையாடி முடித்த விளையாட்டே இந்த ‘Prince of Persia: The Forgotten Sands’. இந்த விளையாட்டைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்த ப்ரின்ஸ் ஆப் பெர்ஷியா சீரீஸ் பற்றி ஒரு சிறிய முன்னோட்டத்தைப் பார்த்து விடுவோம்.

எனது பள்ளி நாட்களில், இப்போதிருப்பதைப் போன்ற அதிநவீன கணினிகளும், கேம் பாக்ஸ்களும் இல்லை. அப்போதிருந்தது கருப்பு வெள்ளை மானிட்டர். கேம்கள் விளையாடவேண்டும் என்றால், நின்டெண்டோ மட்டுமே ஒரே சாய்ஸ். அதை டிவியில் இணைத்து, அரதப்பழைய கிராபிக்ஸில் கான்ட்ரா, சூப்பர் மாரியோ, டாங்கி காங், டென்னிஸ், பேஸ்பால் போன்ற கேம்கள் மட்டுமே விளையாட முடிந்தது. ஆனால், அதுவே அப்போது போதுமானதாக இருந்தது என்பது வேறு விஷயம். நானும், ஒரு நின்டெண்டோ வைத்திருந்தேன் (அது இப்போதும் இருக்கிறது). பள்ளியில் இருக்கும் கணினி லேப்பில் சென்று, அவ்வப்போது ஒரு கேமை விளையாடுவேன். அது ஒரு டாஸ் கேம். அதில், குச்சி போன்ற ஒரு உருவத்தின் கையில், இன்னொரு சிறிய குச்சி இருக்கும் (அதுதான் அதன் கத்தி). இதனை வைத்து, இளவரசியைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தக் கேமின் பெயர், ‘ப்ரின்ஸ் ஆப் பெர்ஷியா’.

அந்த நாட்களில், மிக ஆர்வமாக இதனை ஆடியிருக்கிறேன். பின்னர், மெல்ல மெல்ல இந்தியாவில் தொழில்நுட்பம் முன்னேறி, இப்போது உலகின் அத்தனை கேம்களும் இங்கேயே கிடைக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், எக்கச்சக்கமான கேம்களை விளையாடியும் முடித்தாகிவிட்டது. இருந்தாலும், வேறு எந்தக் கேமிலும் இல்லாத ஒரு அம்சம், பிரின்ஸ் ஆப் பெர்ஷியாவில் உண்டு. அதுதான் நாஸ்டால்ஜியா. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் இதன் பக்கம் வரவைத்துக்கொண்டே இருக்கிறது.

ரைட். இப்போது, இந்த ப்ரின்ஸ் சீரீஸ் சொல்லும் கதையைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த சீரீஸின் முதல் கேம் தான் நான் ஏற்கெனவே சொல்லிய ‘Prince of Persia’. வெளிவந்த ஆண்டு, 1989. இதனைத் தொடர்ந்து, நான்கு வருடங்கள் கழித்து, ‘Prince of Persia: The Shadow and the Flame‘ என்ற டாஸ் கேம், தொண்ணூற்றி மூன்றில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து, 1999 ல், இந்த சீரீஸின் முதல் 3D வெர்ஷன் வெளிவந்தது. அதிலிருந்து ஆரம்பித்தது ஆட்டம் !

ஆண்டு 2003. யுபிசாப்ட் நிறுவனம், ‘Prince of Persia: The Sands of Time‘ என்ற பெயரில், ஒரு புதிய கேமை வெளியிட்டது. எண்பத்தி ஒன்பதில் வந்த ஒரிஜினல் டாஸ் கேமின் கதையை இம்ப்ரவைஸ் செய்து, நல்ல கிராபிக்ஸில் (அந்தக் காலத்தில்) யுபிசாப்ட் வெளியிட்ட இந்த கேம், ப்ரின்ஸ் சீரிஸில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது என்றே சொல்லலாம். இந்தச் சமயத்தில் ஆரம்பித்த கதை, இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதன் கதை என்ன?

பெர்ஷிய நாட்டின் அரசன், ஷாரமான். அவனது மகன் தான் இக்கதையின் நாயகன். அவனது பெயர், இந்த கேமில், இளவரசன் என்பதேயாகும் (Blondie போல்) . மாமன்னன் ஷாரமான், ஆஸாத் என்ற நகரத்துக்குச் செல்லும் வழியில், இந்தியா வழியாகச் செல்ல நேரிடுகிறது. அந்த இந்திய மன்னனின் அமைச்சனின் துணையோடு, அந்த நகரத்தை வெல்கிறார்கள் ஷாரமான் மற்றும் இளவரசன் ஜோடி. அப்படிப் போரில் ஜெயிக்கும்போது, அந்த மன்னனின் பொக்கிஷ நிலவறையில் இரண்டு அரிய விஷயங்கள் இளவரசனுக்குக் கிடைக்கின்றன. காலத்தை மாற்ற முடிகின்ற திறமையுடைய மணல்துகள்கள், மற்றும் சக்திவாய்ந்த ஒரு குறுவாள். இந்தக் குறுவாளை, அந்த மணல்துகள்கள் அடைக்கப்பட்டுள்ள சிறிய காலமானிக்குள் (hourglass) செலுத்தினால், காலம் மாற்றப்பட்டு, அந்தச் சம்பவம் நிகழும் முன்னர் இருந்த காலத்துக்கு நாம் பயணப்பட முடியும். மன்னனைக் காட்டிக்கொடுத்தமைக்காக, இந்த இரண்டு பொருட்களையும் அந்த எட்டப்ப அமைச்சன் பரிசாகக் கேட்க, மன்னர் ஷாரமான், மறுத்துவிடுகிறார். இதன்பின், தங்களது பயணத்தைத் தொடர்கிறது ஷாரமான் மற்றும் இளவரசன் ஜோடி. கூடவே, இவர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய இளவரசி ஃபரா. அங்கே, ஆஸாத் நகரத்தில், இந்தக் கயவ மந்திரியால் வஞ்சிக்கப்பட்ட இளவரசன், காலமானியிலிருந்து மணல் துகள்களை வெளியேற்றிவிட, பேரழிவு நிகழ்கிறது. நகரத்தில் அத்தனைபேரும் பூதங்களாக மாறிவிடுகின்றனர். இளவரசனிடம் குறுவாளும் மந்திரியிடம் ஒரு கத்தியும், இளவரசியிடம் ஒரு பதக்கமும் இருப்பதால், இவர்கள் மட்டும் தப்புகின்றனர். இதன்பின், மணல் துகள்களை மறுபடியும் காலமானியில் சேர்க்கும் வேலையை இளவரசன் மேற்கொள்கிறான். துணைக்கு, இளவரசி. இறுதியில், பூதங்களால், இளவரசி இறந்துவிடுகிறாள். கோபமுற்ற இளவரசன், தனது குறுவாளை, காலமானியில் செலுத்த, காலம் மாற்றப்பட்டு, இந்தச் சம்பவங்களெல்லாம் நடப்பதற்கு முன்னிருந்த காலத்துக்கு நாம் சென்றுவிடுகிறோம். அங்கே, இளவரசியைச் சந்திக்கும் இளவரசன், நடந்த (அதாவது, இனிமேல் நடக்கப்போகும்) கதை முழுவதையும் சொல்ல, இதையெல்லாமே ஒரு கட்டுக்கதை என்று இளவரசி நினைக்கிறாள். அப்போது, இந்த இளவரசனால் எப்படியும் வருங்காலத்தில் தனக்கு ஆபத்து வரும் என்று நினைத்து இளவரசனைக் கொல்ல முயல்கையில், உயிரிழக்கிறான் கொடூர மந்திரி. இந்த கேமின் இறுதிக்காட்சியில், இளவரசனது பெயரைக் கேட்கிறாள் இளவரசி. பதில் சொல்லாமல், புன்முறுவலோடு இளவசரன் செல்கிறான். இப்படியாக, நவீன காலத்து ப்ரின்ஸ் ஆப் பெர்ஷியா முடிகிறது.

இந்தக் கேமை வைத்து எடுக்கப்பட்ட படமே, சென்ற வருடம் வெளிவந்த ‘Prince of Persia: The sands of Time‘.

இந்த முதல் பாகத்தையடுத்து, 2004 ல் வெளிவந்த இரண்டாம் பாகமே, ‘Prince Of Persia: Warrior Within‘. முதல் பாகத்தின் கதை நடந்து ஏழு வருடங்கள் கழித்து இந்தக் கதை தொடங்குகிறது. தனது கனவில் ஒரு பிசாசு தொடர்ந்து வந்து பயமுறுத்துவதை அடுத்து, ஒரு முதியவரிடம் சென்று ஆலோசனை கேட்கும் இளவரசன், காலத்தின் மணல்துகள்களை விடுவிக்கும் யாராகிலும், மரணம் நிச்சயம் என்று அறிந்துகொள்கிறான். அப்படிச் செய்தவர்களைத் தொடர்ந்து வந்து கொல்லும் பொறுப்பு, ‘தஹாகா’ என்ற பூதத்திடம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பூதம்தான் இவனது கனவில் வந்து தொல்லைப்படுத்துவதாகவும் தெரிந்துகொள்கிறான். மரணத்தைத் தடுக்கும் ஒரே வழி, இந்த மணல் துகள்கள் உருவாக்கப்பட்ட காலத்துக்கே சென்று, அப்படி அந்தத் துகள்கள் உருவாக்கப்படாமல் தடுப்பதே. எனவே, இந்த மணல்துகள்கள் உருவாக்கப்படும் ‘காலத்தின் தீவு’ என்ற இடத்துக்குப் பயணமாகிறான் இளவரசன். வழியில், கடலில், ‘ஷாஹ்டீ’ என்ற பெயருடைய ஒரு பெண்ணால் இவனது கப்பல் தாக்கப்பட்டு, சுயநினைவு இழந்த நிலையில், காலத்தின் தீவில் ஒதுங்குகிறான்.

காலத்தின் தீவில், கைலீனா என்ற பெண்ணை, இளவரசன் சந்திக்கிறான். காலத்தின் மணல்துகள்களை காலத்தின் பேரரசி உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும், அவளைச் சந்திக்கவேண்டுமென்றால் கோட்டையில் உள்ள சிம்மாசன அறையைச் சென்றடைய வேண்டும் என்றும் சொல்லும் கைலீனா, இவனுக்கு வழிகளையும் சொல்லிக்கொடுக்கிறாள். பல தடைகளைக் கடந்து அங்கே செல்லும் இளவரசன், முடிவில், கைலீனாவே காலத்தின் பேரரசி என்றும், இளவரசனால் கொல்லப்படப்போவதைத் தெரிந்துகொண்டு, தனது விதியையும் மாற்றிக்கொள்ளத் தயாராக அவள் இருப்பதையும் தெரிந்துகொள்கிறான். ஆனாலும், கைலீனா கொல்லப்படுகிறாள். எனவே, அந்த மணல்துகள்களே இன்னும் உருவாக்கப்படாத நிலையில், தனது விதிக்கு இனி எந்தப் பிரச்னையும் வராது என்ற சந்தோஷத்துடன் நாடு திரும்புகிறான் இளவரசன். அப்போதுதான், தஹாகா மீண்டும் குறுக்கிடுகிறது. அதனிடமிருந்து, கைலீனாவின் சாம்பலிலிருந்துதான் காலத்தின் மணல்துகள்கள் உருவாக்கப்படும் என்றும், கைலீனாவை இவன் கொன்ற காரணத்தால், இவன்தான் அவற்றை உருவாக்கவேண்டும் என்றும், இதனால், தனது மரணம் இன்றியமையாதது என்றும் தெரிந்துகொள்கிறான். இருந்தாலும், இன்னும் மிஞ்சியிருக்கிறது ஒரே ஒரு வழி. ‘மரணத்தின் முகமூடி’ என்ற ஒரு முகமூடியைக் கண்டுபிடித்து, அதனை உபயோகித்தால், மறுபடியும் இறந்த காலத்துக்குள் நுழையமுடியும் என்றும், அதனை உபயோகித்து, காலத்தின் தீவுக்குள் தான் நுழைந்த காலத்துக்கு மறுபடியும் சென்று, கைலீனாவிடம் பேசி, அவளை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்து கொன்றுவிட்டால், அச்சமயத்தில்தான் உருவாக்கப்படும் காலத்தின் மணல்துகள்கள், முதல்பாகத்தின் நிகழ்வுகள் நடந்த காலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதால், முதல்பாகத்தில், இந்த மணல் துகள்களை இவன் விடுவிக்க வாய்ப்பேயில்லை என்ற நிலை ஏற்பட்டு விடும். எனவே, மரணத்தில் இருந்தும் இவன் தப்பிவிடலாம் என்று அறிந்துகொள்கிறான்.

கஷ்டப்பட்டு அந்த முகமூடியைக் கண்டுபிடித்து, மறுபடியும் இறந்த காலத்துக்குள் செல்லும் இளவரசன், கைலீனாவை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்துவிடுகிறான். தனது நகரமான பாபிலோனுக்கு கைலீனாவுடன் கடலில் பயணிக்கிறான் இளவரசன். அப்போது, ஆரம்பத்தில் இவன் சந்தித்த முதியவரின் குரல் இவனது செவிகளில் அறைகிறது: ‘எவையெல்லாம் உன்னுடையனவாக இருக்கிறதோ, அவையெல்லாம் என்னுடையவையே. என்னுடையனவாக விரைவில் மாறும்’.

இத்துடன் இரண்டாம் பாகம் முடிகிறது.

மூன்றாவது பாகமான ‘Prince of Persia: The Two Thrones‘, 2005 ல் வெளிவந்தது. இந்தப் பாகத்தில், கைலீனாவோடு பாபிலோன் வரும் இளவரசனின் கப்பல், வெடித்து, கைலீனாவை பூதங்கள் கடத்திச் சென்றுவிடுகின்றன. அவளைத் தேடிச் செல்லும் இளவரசன், இருண்ட உண்மை ஒன்றினைத் தெரிந்துகொள்கிறான். கைலீனாவைத் தன்னுடன் காலத்தின் தீவிலிருந்து இவன் அழைத்து வந்துவிடுவதால், முதல் பாகத்தின் கதை எதுவுமே உண்மையில் நடைபெறவில்லை – அதாவது, கொடுர மந்திரியை இவன் கொல்லவில்லை என்ற உண்மையே அது. இதன்பின், கைலீனாவைக் கொன்றுவிடும் மந்திரி, அதே குறுவாளினால் (முதல்பாகத்தில் காலமானியைத் துளைக்கப் பயன்பட்ட அதே குறுவாள்) தன்னையும் கொன்றுகொள்ள, இதனால், மந்திரிக்கு மிகச் சக்திவாய்ந்த ஒரு உருவம் கிடைக்கிறது. அதேசமயம், இளவரசனின் உருவமும், ஒரு கரும்பூதமாக மெல்ல மாறுகிறது. இதற்குள், அந்தக் குறுவாளினைக் கைப்பற்றும் இளவரசன், அங்கிருந்து தப்பித்துவிடுகிறான். இருந்தாலும், அவ்வப்போது அவனது உருவம், இருண்டதொரு உருவமாக மாறுகிறது. இந்த இரண்டு இளவரசர்களின் இடையிலும், தொடர்ந்து விவாதம் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. முடிவில், தனது தந்தையின் சடலத்தைக் கண்ணுறுகிறான் இளவரசன். அந்தக் கருப்பு இளவரசனின் ஆளுமையையும் அழித்தொழிக்கிறான். தனது தந்தையின் வாளைக்கொண்டு, மந்திரியையும் கொன்றுவிடுகிறான். இதற்குமுன், ஒரு அழகிய பெண்ணையும் அவன் சந்தித்திருக்கிறான். அவளை, உடனே அடையாளமும் கண்டுகொண்டுவிடுகிறான். அவளே, முதல்பாகத்தில் நாம் சந்தித்த இந்திய இளவரசி ஃபரா. அவளுக்கு இவனை அடையாளம் தெரியாவிடினும், இவனுக்கு அவளைத் தெரிந்துவிடுகிறது. முடிவில், அவளிடம், ‘உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன் கேள்; ஒரு கொடூரமான புயலில் அகப்பட்ட சமுத்திரத்தைப் போன்றதொரு விஷயமே, காலம்; இந்தக் காலம், நமது வாழ்வில் எப்படி விளையாடியது என்பதைத் தெரிந்துகொள்’ என்று ஆரம்பித்து, இவ்வளவு பாகங்களாக நடந்த கதையைச் சொல்லத் தலைப்படுகிறான் இளவரசன். அதாவது, இதே வரிகளை, முதல் பாகத்தில், போருக்கு முன், இரவில் இளவரசி ஃபராவிடம் இளவரசன் சொல்வதை முதல்பாகத்தில் கேட்டிருக்கிறோம். எனவே, இவ்வளவு காலமும் நடந்தது, இளவரசன், இளவரசியிடம் சொல்லத்துவங்கிய கதையே என்பதனையும் அறிந்துகொள்கிறோம். இத்துடன், மூன்றாம் பாகம் முடிகிறது.

இதுவே, பூர்வகதை. இப்போது, நிகழும் கதையான, ‘Prince of Persia: The Forgotten Sands ‘ என்ற கதைக்கு வருவோம்.

முதல் பாகத்தின் கதை நடந்துமுடிந்தவுடன் நிகழும் கதையாக இது இருக்கிறது. கதைப்படி, இளவரசன், தனது சகோதரன் மாலிக்கின் நாட்டுக்குப் பயணப்படுகிறான். அங்கே, மாலிக்கின் நாட்டையே, ஒரு படை சூழ்ந்துகொண்டு தாக்குவதையும் பார்க்கிறான். போருக்கு இடையே மாலிக்கைச் சந்திக்கும் இளவரசன், இந்தப் படையைத் தடுக்கவேண்டுமென்றால், பழங்கால அரசனான சாலமனின் படை என்ற பேய்ப்படையை உயிர்ப்பித்தால் மட்டுமே சாத்தியம் என்று மாலிக்கிடமிருந்து தெரிந்துகொள்கிறான். அப்படியே, பேய்ப்படை உயிப்பிக்கப்படுகிறது. அந்த நேரத்தில், ‘ரஸியா’ என்ற, ‘ஜின்கள்’ என்று அழைக்கப்படும் ஒருவித பூதங்களின் தலைவியைச் சந்திக்கிறான் (ஒரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ கதையில் இப்படிப்பட்ட ஒரு ஜின்னின் கதை வரும்). அவனிடம், ரஸியா, சாலமனின் படையை அழிக்கும் ரகசியத்தைச் சொல்கிறாள். அப்படியே, மாலிக், இப்படையைக் கொன்று, அவற்றின் சக்தியோடு, ஒரு பெரும் சக்தியாக மாற நினைப்பதையும் சொல்கிறாள். மாலிக்கைத் தேடும் இளவரசன், பேய்ப்படையின் தலைவனான ரதாஷ் என்ற ஜந்து, மாலிக்கின் உடலை ஆட்டுவிப்பதைத் தெரிந்துகொள்கிறான். கேமின் இறுதியில், ரதாஷ் என்னவானது? மாலிக்கைக் காப்பாற்ற முடிந்ததா? ஆகிய கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது.

கதையைப் பார்த்தாகிவிட்டது. இப்போது, விளையாடும் முறையைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கேமிலும், ப்ரின்ஸ் சீரீஸின் பழைய கண்ட்ரோல்கள் அப்படியே உள்ளன. எனவே, விளையாடுவது எளிது. ஆனால், இதில், சில புதிய அம்சங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. என்னவெனில், இயற்கையின் சக்திகளான, நீர், நெருப்பு, காற்று, நிலம் ஆகிய விஷயங்களை, இளவரசன் உபயோகப்படுத்திக்கொள்கிறான். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குத் தாவுகையில், இடையே இருக்கும் கழிகளை நாம் இதற்கு முந்தைய ப்ரின்ஸ் பாகங்களில் பார்த்திருப்போம். இந்தக் கழிகளில் தொங்கி, அவற்றில் இருந்து அடுத்த இடத்துக்கு இளவரசன் தாவுவான். இதில்தான், ஒரு புதிய அம்சம் இந்தக் கேமில் இருக்கிறது. அதாவது, கழிகளுக்குப் பதில், சில இடங்களில், தண்ணீர் பாய்ந்துகொண்டிருக்கும். தனது விசேஷ சக்தியை உபயோகித்து, அந்தத் தண்ணீரை ஒருசில நொடிகள் உறைய வைக்க இளவரசனால் முடிகிறது. அந்தச் சில நொடிகளுக்குள், சட்டென்று தாவிவிட வேண்டும். இல்லையெனில், பிடி விலகிவிடும். அதேபோல், பல இடங்களில், தண்ணீர், அருவி போல விழுந்துகொண்டிருக்கும். இந்த அருவிகளையும் உறைய வைத்து, சுவர்களைப்போல் ஆக்கி, அந்தச் சுவர்களுக்கு இடையே, ஒன்றிலிருந்து இன்னொரு சுவருக்குப் பாய்ந்து, அடுத்த இலக்கை நோக்கிக் குதிக்க வேண்டும். நிறைய இடங்களில், தண்ணீர்க்கழி, அதன்பின் அருவிச்சுவர்கள், அவற்றின்பின் தண்ணீர்த்தூண் என்று வரிசையாக இருக்கின்றன. அதேபோல், தண்ணீரை உறையவைக்கும் பொத்தானில் இருந்து கையை எடுத்துவிட்டால், மறுபடி தண்ணீராக மாறிவிடும். ஆகவே, அந்தப் பொத்தானில் இருந்து கையை எடுக்காமலே, மிகச்சரியாகக் குதித்தல் வேண்டும். இதுமட்டுமல்லாது, சில இடங்களில், இப்படிக் குதித்தால் மட்டும் போதாது; குதித்தவுடன், எதிரில் இருக்கும் அருவிச்சுவரின் மீது ஏறவும் வேண்டும். அப்படி ஏறி, டக்கென்று எதிரில் உள்ள கழியின் மீது பாயவும் வேண்டும். எனவே, இந்த கேமை விளையாடும் நண்பர்கள், தண்ணீரை உறையவைக்கும் கண்ட்ரோலை, வசதியான பொத்தானின் மேல் செட் செய்துவைத்துக் கொள்வது சாலச்சிறந்தது.

அதேபோல், எதிரிகளுடன் போரிடுகையில், உறையவைத்த தண்ணீரைப் பீய்ச்சுவதும் இதில் ஒரு கண்ட்ரோல். இது, மகா மொக்கை. கூடவே, சிலசமயங்களில், நெருப்பின் உதவியோடும் போரிடும் வசதி உள்ளது. இதுவும் மொக்கையே.

நமது பொறுமையைச் சோதிக்கும் சில இடங்கள் இதில் உள்ளன. உதாரணத்துக்கு, கடைசி லெவலுக்கு முந்தைய லெவலான, ‘The Final Climb’ என்ற லெவலில், சென்ற பத்தியில் விளக்கிய தண்ணீர்க்கழி, தண்ணீர்ச்சுவர்கள், தண்ணீர்த்தூண் ஆகியன, வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டிச்சென்றால் தான், ஆட்டோ சேவ் ஆப்ஷன் வரும். எனவே, முடியவில்லை என்றால், தொடர்ந்து தண்ணீரில் விழுந்துகொண்டே இருக்கவேண்டியதுதான்.

ஆனால், கடைசி லெவலில், பிரம்மாண்ட அரக்கன் ரதாஷ்ஷைக் கொல்வது, கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. மிகப்பெரிய மணற்புயலில் அகப்பட்டு, இளவரசன் அங்குமிங்கும் பந்தாடப்படுவதும், சரியாகக் கண்ட்ரோல்களை இயக்கி, ராட்சதப்பறவைகளின் மீது குதித்து, அங்கிருந்து அடுத்த பறவையின் மீது தொடர்ந்து குதித்து…. இப்படி ரகளையாகச் சென்றது கடைசி ரவுண்டு.

மொத்தத்தில், Prince of Persia: The Forgotten Sands கேமுக்கு எனது ரேட்டிங் :3/5. இது ஏனெனில், கேமின் பாதியில், இந்தக் குதிப்பது, கொஞ்சம் மொக்கையாகி விடுகிறது. ஆனால், மிகச்சரியாக எனக்கு, கேம் மொக்கையாக மாறுகிறதே என்று தோன்ற ஆரம்பிக்கையில், டக்கென்று லெவல் மாறி, பாதாள உலகில் இளவரசன் பிரவேசிப்பது போல வைத்திருக்கிறார்கள். எனவே, விளையாடும் மக்களின் மூடுக்கேற்றவாறு கேமை செட் செய்திருப்பதால், இந்த ரேட்டிங்.

Prince of Persia: The Forgotten Sands கேமின் ட்ரெய்லர் இங்கே.

பி.கு 1 – இந்த கேமின் ஒரு சின்ன flaw என்று நான் கருதுவது, இதில் இளவரசனின் முகம், பழங்காலக் குரங்கு போலவே இருப்பதை.

பி.கு 2 – இந்தக் கேமிலும், அஸாஸின்’ஸ் க்ரீட் 2 வில் செய்த அதே முட்டாள்தனத்தை, யூபிசாஃப்ட் செய்திருக்கிறது. அது, இண்டர்நெட் இருந்தால் மட்டுமே இதனை விளையாடமுடியும் என்ற விஷயம். ஆனால், இதற்கு பல க்ராக்குகள் உள்ளன. புகுந்து விளையாடுங்கள்.

  Comments

17 Comments

  1. Hi rajesh, it surprises me that you are 32 years old.. Still u play PC games, watches WWE, crazed with movies and makes fun like a teen in FB…. u keeps alive ur nostalgia..oww.. U celebrates ur life man.. Its great to see you like this.. Actually u teaches me how to live a life… i remember my those days when i see u… Wishing u to be happy forever as u are now…

    Reply
  2. சீக்கிரமே லேட்டஸ்ட் கிராபிக்ஸ் கார்டு போட்டு சிஸ்டம் வாங்க போறேன்… அப்ப நாங்களும் போடுவோம் கேம் போஸ்ட்…

    Reply
  3. உங்கள் விளையாட்டு ஆர்வம முன்னேறிக் கொண்டிருக்கிறது… நான் அப்படியல்ல… இன்னமும் NES Emulator என்ற மென்பொருளை தரவிறக்கி சூப்பர் மரியோ, அட்வென்ச்சர் ஐலேன்ட் போன்ற விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருக்கிறேன்…

    Reply
  4. //Hi rajesh, it surprises me that you are 32 years old//
    பாஸ்….இருந்தாலும் உங்களுக்கு ரொம்பதான் அக்குறும்பு…..35அ தாண்டியே பல காலம் ஆச்சுன்னு பேசிக்கிறாங்க…..நீங்க வேற….

    Reply
  5. @Murali Krishnan..தல..இந்த மாதிரி ஒருத்தரை மனசார பாரட்டவதை பார்க்க சந்தோசமாக உள்ளது..முற்றிலும் வழிமொழிகிறேன்…..எப்ப…எந்நேரதுக்கு போன் பண்ணினாலும் கூட(அவுரு பண்ண மாட்டார்,அது வேற விஷயம்)உற்சாகத்துடனே பேசுவார்(மனசுல என்ன நினைப்பாரோ). அவுரு எப்புடியே இருக்கே எல்லாம் வல்ல கருணாநிதியை பிரார்த்திக்கிறேன்…..உங்களப் போன்ற இளைகர்களும் என்னை போன்ற சிறுவர்களும் அவரிடம் கத்துக் கொள்ள நிறையவே இருக்கு….

    Reply
  6. //அவுரு எப்புடியே இருக்கே// அது அப்புடியே….

    Reply
  7. அங்கே கனிமொழி கைது அரங்கேறும் வேளையில் கழக அடலேறுக்களுக்கு கணிணி விளையாட்டு களிப்பா?அடக்கண்மணி ராஜேஷ்,நீயும் பாதை மாறிவிட்டாயா?என் செல்வமே? பதவி என்பது தோளில் போட்டிருக்கு துண்டைப்போல என்று சொன்ன வாய் எங்கே?!!!கனிமொழியை கைது செய்தால் நம் வீட்டு பெண்களை கைது செய்வது போல அல்லவா?,கனி மொழி சம்பாத்தித்தது தமிழர்களாகிய நாமே ஊழல் செய்து சம்பாத்தித்தது போல,கனிமொழிக்காக இளைஞர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக நின்று தீக்குளிக்கவேண்டும்,நாமெல்லாம் போலீசில் மாட்டிக்கொண்டால் மாமூல் தருவதில்லை,கனிமொழி ஒண்ணேமுக்கால் லட்சம் கோடியில் தனக்காகவும் தன் இரண்டே இரண்டு மகன்களுக்காகவும் கொஞ்சமே கொஞ்சம் தொகையான 1000 கோடியை ஒதுக்கிக்கொண்டார்,இது பெரிய குற்றமா?உங்கள் வீட்டில் பெண்களே இல்லையா?இரக்கம் இல்லாமல் இருதயத்தை கழற்றி வீசி விட்டு பேசாதீர்கள் நண்பர்களே,அவர் மீனவர் படுகொலைக்காக 4 மணிநேரம் சிறை சென்றதை மறந்து விடாதீர்கள்,ராஜபக்‌ஷேவுக்கு திருப்பதி வெங்கடாசலபதி ஊஞ்சல்சேவை லட்சார்ச்சணை சேவை டிக்கெட்டுகளை அவர் திருமாவழவனுடன் சென்று வழங்கிவிட்டு ஒரேநாளில் நல்லிணக்கம் ஏற்படுத்தி வந்ததை யாரும் மறந்துவிடவேண்டாம்.

    Reply
  8. நீங்கள் சொன்ன டாஸ் வெர்சன் பிரின்ஸ் ஆப் பெர்சியா நானும் ஆடியிருக்கிறேன். (முடித்ததில்லை) எனது மொபைலிலும் இருக்கிறது. 3D வெர்சன் இன்னமும் ஆடியதில்லை. இது தேர்ட் பெர்சன் வியூவில் இருப்பதாலோ என்னவோ எனக்கு அந்தமாதிரி கேம்களில் ஒரு ஒத்துழைப்பு இருப்பதில்லை. அதேசமயம் FPS இல் அநேக பரிட்சயம்.. நீங்கள் அநேகமாக Call of Duty சீரியஸ் ஆடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

    பதிவு முழுக்க ஒரு ஃபெய்ரி டேல் படித்தமாதிரி உணர்வு!! 🙂

    Reply
  9. மக்களே…..வாழ்க்கையில….PS3, Xbox, Bike, Ipad 2 வகையறாக்கள்….போன்றவைகளை வாங்கணும் என்ற லட்சிய வெறியுடன் செயலாற்றிக் கொண்டிருப்பவர்கள் நம்ம கருந்தேள்ட கொஞ்சம் நேரம் பேசுங்க….அவுரு பேசும் போது பொங்கி வழியும் கருத்துக்களில் சிந்துனது சிதறுனத கேட்டு நடந்தா உங்க லட்சிய கனவு சீக்கிரம் நிறைவேறிடும்….ஆனா இது கல்யாணம் ஆகாத பசங்களுக்கு or பொண்ணுங்களுக்கு மட்டுமே…..

    Reply
  10. have u played “prototype” mate ??
    that game has a nice gameplay !!

    Reply
  11. யோவ் கொழந்த எப்டிய நீ இந்த மாறி லாம் யோசிக்கற… /// எல்லாம் வல்ல கருணாநிதியை பிரார்த்திக்கிறேன்…./// நினச்சு நினச்சு சிரிக்கிறேன் யா…அது சரி… யாரு அந்த சிறுவர் உங்க பையனா ????

    Reply
  12. @இராமசாமி கண்ணன் – அது சரி.. ‘அவரு’ எப்புடி இருக்காரு?

    @ முரளி – ஹலோ.. ‘old’ அப்புடீன்னு ஒரு வார்த்தையை போட்டு என்னை அவமதிக்கப் பார்க்கிறீர்களா? நம்ம ரோல் மாடலுங்க, ரிச்சர்ட் ப்ரான்ஸன் & விஜய் மல்லையா. அவங்களைப் பாருங்க. எப்பவும் எஞ்சாய்.. அதுதான் என்னோட தாரகமந்திரமும் 🙂 ..

    @ லக்கி – பிச்சி ஒதறுங்க.. . க்ராஃபிக்ஸ் கார்டு போட்டதும் கேமுல மூழ்க வாழ்த்துகள் 🙂

    @ பிலாசபி பிரபாகரன் – ஆஹா.. நீர் தான் நாஸ்டால்ஜியா மன்னன் போலயே 🙂 விளையாண்டு முடிச்சவுடன் அதைப்பத்தி பதிவு போடுங்க 🙂

    @ கொழந்த – முரளி கமெண்ட் ஓகே.. ஆனா உங்க கமெண்ட், அப்புடியே இரங்கல் கட்டுரை மாதிரியே இருக்கே.. இரங்கல் கட்டுரை ஸ்பெஷலிஸ்ட் உங்களை அனுப்பிவைத்திருக்கிறார் என்று ஐயுறுகிறேன்.. உதாரணத்துக்கு, இதைப் பாருங்க..

    //எப்ப…எந்நேரதுக்கு போன் பண்ணினாலும் கூட(அவுரு பண்ண மாட்டார்,அது வேற விஷயம்)உற்சாகத்துடனே பேசுவார்//

    என்னா வில்லத்தனம்

    @ கீதப்ரியன் – என்னாது வரிசைல நின்னு தீக்குளிக்கணுமா? அவ்வ்வ்வ்வ்… அதுக்கு வேற சில பதிவர்கள் இருக்காங்க.. திமுகக்கு ஒண்ணுன்னா, கவரிமான் மாதிரி, உயிரே உட்ருவாங்க 🙂

    @ ஆதவா – call of duty ஆடியிருக்கிறேன். இப்போது ஆடிக்கொண்டிருப்பது, அதில் லேட்ட்ஸ்ட்டான black ops. முடித்துவிட்டு வருகிறேன்.. நன்றி.. எனக்கு FPS வகைக் கேம்களும் மிகவும் பிடிக்கும் (Project IGI வகையறா)

    @ கொழந்த – அது வேறொண்ணுமில்லை. ப்ளே ஸ்டேஷன், இத்யாதியெல்லாம், வரதட்சிணையா கேட்டு வாங்கிருங்க.. அப்புறம் வெளையாடிக்கினே இருக்கலாம்.. இந்த ஐடியாவோட காப்பிரைட், என்னுது

    @ Boyindahood – Prototype விளையாடியதில்லை. சீக்கிரம் பிடித்துவிடுகிறேன். நன்றி

    @ முரளி – கொழந்தையோட வாழ்வின் இருண்ட உண்மைகளையெல்லாம் கேட்டீங்க… அப்புறம் பாண்டிமடம் தான் 🙂 .. பீவேர்..

    Reply
  13. தல..நமக்கு சொந்தமா கம்மென்ட் போட வராது..அதுனால….வழக்கம் போல நீங்க எழுதி அனுப்புங்க…நா அதை கமெண்ட்டிடுறேன்…

    Reply
  14. என்ன சொல்ரிங்க தேளு… நிசமாவா… அய்யயோ இப்பவே எனக்கு “இசை இளவரசன்” எஸ் ஏ ராஜ்குமாரின் லா லா லா லா காதுல கேக்குதே…!!!

    Reply
  15. Dilep Dev

    superb review, If u can write a review on DarkSiders 1 & 2

    Reply

Join the conversation